Thursday, December 26, 2013

பலிக்குமா கலைஞரின் இந்த கேடுகெட்ட வியூகம்


'காங்கிரசோடும் பா.ஜ.,வுடனும் கூட்டணி இல்லை' என, கருணாநிதி, தன் கட்சி பொதுக்குழுவில், அடித்து சத்தியம் செய்திருக்கிறார். 

கிராமப் புறத்தில், மொடாக் குடிகாரன், 'இனி, நான் குடிக்கமாட்டேன்' என, சத்தியம் செய்தால், 'இது எத்தனையாவது சத்தியம்?' என, பலரும் அவனை கிண்டலடிப்பர். அதுபோல் தான், கருணாநிதியின் சத்தியமும், கேலிக்குரியதாகி உள்ளது. 

ஒவ்வொரு முறையும், 'காங்கிரசுடன் உறவு முறிந்து விட்டது' என, கருணாநிதி அறிவிக்கும் போதெல்லாம், தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்து, காங்கிரசாரின் உருவ பொம்மையை கொளுத்தி விளையாடுவது வழக்கம். 

கொளுத்திய பட்டாசு அணைவதற்குள், பதவிக்காக, தன் குடும்ப நலனுக்காக, காங்கிரசோடு ஒட்டி உறவாடுகிற நிலையை, கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் எடுத்து விடுவார் கருணாநிதி. 

'இந்திராவிடம், தாயின் அன்பைப் பார்த்தேன், சோனியாவிடம், மகளின் பாசத்தைப் பார்க்கிறேன்' என, சில தினங்களுக்கு முன் உருகினார். சில மாதங்களுக்கு முன், மகள் கனிமொழியின் எம்.பி., பதவிக்காக சோனியாவை, 'மணிமேகலை' என்றார். 'பண்டார பரதேசிகள்' என, அழைத்த, பா.ஜ.,கட்சியுடன் தான், மத்தியில் பேரம் பேசி அமைச்சர் பதவி வாங்கினார். 

அது, காங்கிரசாய் இருந்தாலும், பா.ஜ.,வாக இருந்தாலும், வேறு வழியில் லை. இப்படி, 'உதார்' விட்டால், கிட்டே வரும் உதிரிக் கட்சிகளை வைத்து வென்று, பின், அவற்றை கழற்றி விட்டு, மத்தியில் ஒட்டிக் கொள்ளலாம் என்ற நரித்தந்திரம் தான், கருணாநிதி நினைப்பில் உள்ளது. 

அதனால் தான், 'மத்தியில் அந்தக் கட்சி வருமா? இந்தக் கட்சி வருமா?' என, ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமும் உட்கார்ந்து, கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்கு என்பது, மொத்த வழக்குகளையும், எப்படி குழிதோண்டி புதைப்பது என்பது தான். இதில், தமிழர் நலன், கட்சி நலன் என்பதெல்லாம், 'டுபாக்கூர்' தான்! 

எது எப்படி போனாலும், இனி வரும் காலங்கள், காங்கிரசுக்கு மட்டுமல்ல; தி.மு.க.,வுக்கும் தேய்பிறை தான். எத்தனை கூட்டல், கழித்தல், வகுத்தல் போட்டுப் பார்த்தாலும், கருணாநிதியின் கணக்கு, தப்பாகவே இருக்கும். இது சத்தியம். என்.மதியழகன், பெண்ணாடம், கடலூர்.

2 comments:

  1. ஒரே குழப்பமா இருக்கே.

    நீங்கள் அதிமுக வாக இருந்தால் முதல்வர் பெயர் சொல்லி பதிவுகளில் எழுதும் தைரியம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

    முதல்வர் செய்கிற பெரிய சாதனை மக்களின் பணத்தை எடுத்து மக்களையே முட்டாள்களாக்கிக் கொண்டிருப்பதுதான். எல்லா விலையில்லாப் பொருட்களிலும் முதல்வர் பெயரும் படமும்தான். இந்த விசயத்தில் முன்னாள் முதல்வரை பெருமளவுக்கு மிஞ்சி விட்டார். முட்டாள் தமிழன் இவை எல்லாம் இவர் தனது பணத்திலிருந்து வழங்கியதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

    ஒரு சந்தேகம். சாப்பிட உணவகம், பிறகு குடிக்க நீர். அடுத்துப் போகும் இடத்திலும் முதல்வரின் பெயரும் படமுக்கும் இருக்குமா.


    கோபாலன்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...