’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கும் அவரது இரண்டாவது படத்தின் பெயர் “ரெண்டாவது படம்”. தமிழ்ப்படம், ரெண்டாவது படம் என வார்த்தைகளைக் கொண்டு விளையாடும் அமுதன் தன் பட பாடல்களுக்கு குப்ப தொட்டி, ஆப்பு பர்த்டே, அடுத்த பருப்பு, ரோஜாப் பூ, டெத் ஆன்தம் (DEATH ANTHEM) என டைட்டில் கொடுத்திருக்கிறார்.
”ரோஜா பூ ஒன்று ராஜாவின் கைசேர... வானம் செந்தூரம் சூடும்” என்ற பாடல் 80-களில் வெளிவந்த பாடல்களின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜாவும்- வைரமுத்துவும் இணைந்து 80-களில் இணையற்ற பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் அந்த ஸ்டைலில் யாராலும் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்ற குறை இப்போது தமிழ் சினிமாவில் இருப்பதை உணர்ந்தே அமுதன் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இந்த ரோஜா பூ பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி பேசிய மதன் கார்க்கி “ 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதியது எனக்கு சவாலாக இருந்தது. நான் சிறிய வயதிலிருந்தே வைரமுத்து - இளையராஜா இணைந்து உருவாக்கிய பாடல்களைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்தப் பாடலை எஸ்.பி.பி - சித்ரா பாடியிருக்கிறார்கள். நான் எழுதிய வரிகளை முதல்முதலாக இருவரும் பாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடல் இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்” என்று கூறினார்.
புன்னகை மன்னன் படத்தில் பிரிந்த இளையராஜாவையும் வைரமுத்துவையும் இணைத்து வைக்க பலர் முயற்சி செய்தாலும், அது நடக்காமலே போனது. பாரதிராஜாவும் இந்த விஷயத்தில் போராடித் தோற்றுப்போனார். இந்த சூழலில் ரெண்டாவது படம் படத்தில் வரும் ரோஜா பூ ஒன்று என்ற பாடல் கேட்பவர்களை பரவசப்படுத்தும் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது!
ரோஜா பூ - பாடல் வரிகள்...
குழு - மயில் தோகை கொண்டே
விசிறி தோழன் ஒருவன் மயங்கிவிட்டானே
காதல் மதுவை அருந்தி...
திருக்கோவில் தீபம் எனவே
தோழி கைத்தலம் பிடிக்க வந்தாலே
தீயில் ஒளியாய் பொருந்தி...
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே!
பல்லவி
ஆண் - ரோஜா பூ ஒன்று... ராஜாவின் கைசேர...
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்
மாயம் புரிந்தாய்...
காற்றாய் நிறைந்தாய்...
குழு - உனக்கே பிறந்தாள்
இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்
சரணம் - 1
ஆண் - தானாய் வந்ததொரு நந்தவனம்
என் சொந்தவனம்
பெண் - நீதான் காலமெங்கும் என் வசந்தம்
ஒரு பொன்வசந்தம்
ஆண் - தேன் மழை பொழியவா
பெண் - நான் அதில் நனையவா
ஆண் - உயிரே... உயிரில் இணையவா...
சரணம் - 2
பெண் - காமன் கோயிலுக்குள் போக மேடை
அதில் ராஜ பூஜை
ஆண் - மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை
பெண் - வேர்வையில் குளிக்கலாம்
ஆண் - பார்வையில் துடைக்கலாம்
பெண் - உறவே இரவை படிக்கலாம்