கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், "புழுதிப்புயல்' சாரி, "புரட்சிப்புயல்' வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்.
சிறந்த பாராளுமன்றவாதி என பெயர் பெற்ற வைகோ, சமீப காலமாக குழப்பவாதியாக, சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கத் தெரியாதவராக இருக்கிறார். அவருக்கு, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம், பேச்சு திறமை இருந்தும், எதுவும் சாதிக்க முடியாததற்கு, அவரின், "எடுத்தேன் கவிழ்த்தேன்' முடிவுகளே காரணம்.
எந்த ஒரு செயலிலும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு எதிர்க்கருத்தை எடுப்பதே, வைகோவின் வேலையாக உள்ளது. இதனால் தான், போதிய திறமை இருந்தும், அவரால் வெகுஜன தலைவராக வரமுடியவில்லை.
அவர் எடுத்த, அவரைக் கவிழ்த்த சில முடிவுகள் இதோ...
தி.மு.க.,வில் இருந்து, துரோகி என்ற பட்டம் கிடைத்ததால் வெளியேறியதாக கூறி, புதுக்கட்சி கண்டார். "ஊழல் ராணி ஜெ.,வின் சொத்துக்களை பறிமுதல் செய்வேன்' என்ற கோஷத்துடன், கன்னியாகுமரியில் இருந்து, சென்னை நோக்கி நடைபயணம் சென்றார்.
இளைஞர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது. ஆனால், முடிவில் நடந்ததோ வேறு கதை. எந்த கட்சியை எதிர்த்து நடைபயணம் செய்தாரோ, அதே கட்சியுடன் கூட்டணி வைத்தார். இவரின் இந்த முடிவால், இவர் மீது நம்பிக்கை வைத்த பலர் பின்வாங்கினர்.
அடுத்த சில ஆண்டுகளில், எந்த கட்சியில் இருந்து குறை கூறி வெளியேறினாரோ, அந்த தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தார். இதனால், மீதியிருந்த பலரும் சொல்லாமல் வெளியேறினர்.
ராஜிவ் கொலையில், 20 ஆண்டு விசாரணைக்குப் பிறகு, மூன்று பேருக்கு விதித்த தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி, தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, நியாயமான மனிதர்களை கொதிப்படையச் செய்தது. அவரது தம்பியையோ, மகனையோ, கொன்றிருந்தால் விட்டுவிட சொல்வாரா இவர்? ஏன் இவருக்கு இப்படி ஒரு போராட்டம்?
சமீபத்தில் நாடே இருளில் மூழ்கிக் கிடக்க, கூடங்குளத்தை திறக்க தவமிருக்கின்றனர். இவரோ, அதை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
தனது சொந்த தொகுதியிலேயே, இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்க முடியாத இவர், மக்களால் புறக்கணிக்கப்பட்ட இவர், இனியேனும் வெகுஜன மக்களின் விருப்பத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.