Saturday, June 29, 2013

அன்னக்கொடி- சினிமா விமர்சனம் (தட்ஸ் தமிழ்)


தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட படைப்பாளி, ஸ்டுடியோக்களுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்றவர், மண்ணின் கலைகளை - உணர்வுகளை செல்லுலாய்டில் செதுக்கியவர்... என எத்தனையோ பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பாரதிராஜா 5 ஆண்டுகள் கழித்து உருவாக்கியிருக்கும் படம் என்ற முத்திரையோடு வந்திருக்கிறது அன்னக்கொடி. 

ஆனால்... இத்தனைப் பெருமைக்குரியவர் தந்திருக்கும் படம்... பார்க்கும்படி இருக்கிறதா...? பார்க்கலாம் வாங்க! 

சாராயம் காய்ச்சி விற்பவளின் மகள் அன்னக்கொடிக்கும் (கார்த்திகா) செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் கொடிவீரனுக்கும் (லட்சுமணன்)... ஆடு மேய்க்கப் போன இடத்தில் காதல் பூக்கிறது. ஆனால் வட்டிக்குப் பணம் கொடுத்து ஊரையே வளைத்து வைத்திருக்கிற சடையனின் (மனோஜ்) காமப் பார்வைக்குள் சிக்குகிறாள் அன்னக்கொடி. 

அந்த நேரத்தில் அன்னக்கொடியை பெண்கேட்டு அப்பனோடு வருகிறான் கொடிவீரன். தாழ்ந்த சாதிக்காரன் எப்படி பெண் கேட்கலாம் என அவர்களை அடித்து உதைத்து சாணியைக் கரைத்து ஊற்றி அசிங்கப்படுத்தி அனுப்புகிறாள் அன்னக்கொடியின் தாய். விஷயமறிந்த சடையன் தன் அடிமையான போலீசுக்கு சொல்லி கொடிவீரனை சிறையில் தள்ளுகிறான். 



ஒரு நாள் அன்னக்கொடியின் தாய் செத்துப் போக, அவள் வாங்கிய கடனுக்கு ஈடாக அன்னக்கொடியை தன் வசமாக்கிக் கொள்கிறான் சடையன். சடையனுக்கு மனைவியாக அன்னக்கொடி வாழ்ந்தாளா? கொடிவீரன் காதல் என்ன ஆனது? என்பதையெல்லாம் ரத்தக்களறியாக சொல்லி முடிக்கிறார் க்ளைமாக்ஸில். 

பாரதிராஜாவின் கிராமத்துக் கதைகள் பெரும்பாலும் சோடைபோகாதவை. விலக்காக முதல் சொதப்பல் ஈரநிலம்... அந்தப் பட்டியலில் இப்போது அன்னக்கொடி! 

ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறையோடே காட்சிகள் நகர்கின்றன. பாரதிராஜாவின் படங்களுக்கே உரிய உணர்வுப்பூர்வமான காட்சிகளோ, அழகியலோ, வசனங்களோ, நுட்பமான நளினங்களோ இந்தப் படத்தில் ஒரு காட்சியில்கூட இல்லை. 



ஒரு சாம்பிள்... நாடோடித் தென்றலில் சோத்துக்கு தொட்டுக் கொள்ள ரஞ்சிதாவின் கைவிரல்களை பயன்படுத்தியபோது நம்மால் ரசிக்க முடிந்தது. ஆனால், இந்தப் படத்தில் கார்த்திகாவின் அல்லது லட்சுமணனின் நகங்களைக் கடித்து அதை கஞ்சிக்கு தொட்டுக் கொள்வதாகக் காட்டியிருப்பது குமட்டலைத்தான் தருகிறது! 

அதேபோல ஏற்கெனவே பாரதிராஜாவின் படங்களில் பார்த்த நிறைய காட்சிகளை இந்தப் படத்தில் மீண்டும் பார்க்க முடிகிறது. அன்னக்கொடியின் தாய் இறந்துபோனது தெரிந்ததும், காதலியைப் பார்க்க வேகமாக வருகிறான் கொடிவீரன்... அப்போது கல்யாணமாகி புருஷனுடன் மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருப்பாள் அன்னக்கொடி. இதை வேதம் புதிதிலேயே கொஞ்சம் வேறு மாதிரி காட்டியிருப்பார். 

ஒரு நா ஒரு பொழுது, சிறுக்கி மவ, அல்லைல குத்து... இதுபோன்ற ஒரு டஜன் வார்த்தைகள் திரும்பத் திரும்ப படம் முழுக்க வந்து பெரிய அலுப்பைத் தருகின்றன. வசனங்களில் ஆபாசம், அருவருப்புக்கும் பஞ்சமில்லை. சடையனுக்கு தந்தையாக வரும் (இயக்குனர்) மனோஜ்குமார் தன் மருமகளையே மடக்கப் பார்க்கும் காட்சிகளும் வசனங்களும் இது பாரதிராஜாவின் படமா.. மாமனாரின் இன்பவெறி மாதிரி கில்மா படமா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. 

ஊரில் உள்ள பெரும்பாலான பெண்கள் சேலை ரவிக்கை என டீஸன்டாக நடமாட, இளம் பெண்களான கார்த்திகாவும், 'லோக்கல் வெடக்கோழி' மீனாளும் மட்டும் ரவிக்கையில்லாமல் அலைவது ஏன் என்பது பாரதிராஜாவுக்கே வெளிச்சம். 



ஒரு காட்சியில் காட்சியில் கிட்டத்தட்ட முக்காலுக்கும் கொஞ்சம் அதிகமான நிர்வாணத்தோடு கார்த்திகாவை ஓடவைத்திருக்கிறார் பாரதிராஜா. அவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்பட்டிருக்கிறது! 

மகனுக்கு நல்ல வாய்ப்பை உண்டாக்கித் தர ஒரு தந்தை விரும்புவது நியாயம்தான். ஆனால் அதற்காக இப்படியா... மனோஜ் இல்லாத காட்சியென்று எதையும் எடுக்கவே அவர் விரும்பவில்லை போலிருக்கிறது. எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் மனோஜ். 

இதில் அவருக்கு பஞ்ச் டயலாக்... பஞ்சர் பாட்டு என்று படுத்தி எடுக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் சாகும் விதமிருக்கே... பாரதிராஜா சார்... அந்தக் காட்சியைப் பார்த்து குதிரை மேலிருந்த அய்யனாரே குபுக்கென்று சிரித்திருப்பார்! 

கதைப்படி மனோஜ், 'அந்த விஷயத்துக்கு' லாயக்கில்லாதவர். அப்புறம் அவரைக் காமுகனாகக் காட்டுவது, அயிட்டம் மீனாள் வீட்டுக்கு ரேட் பேசிவிட்டுப் போவது, அடுத்தவன் பெண்டாட்டியை தூக்கி வருவது, இன்னொருவனைக் காதலிக்கிறாள் எனத் தெரிந்தும் அன்னக் கொடியை அபகரிப்பது.... இதற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா... 

இந்தக் கதைக்கு மனோஜின் கையாலாகாத்தன கேரக்டர், அதற்கான ப்ளாஷ்பேக், அவர் செய்யும் ஆறேழு கொலைகள் எந்த வகையிலாவது உதவியிருக்கின்றனவா... என்ன டைரக்டரே? நடிகர்களின் பங்களிப்பு என்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. 

லட்சுமணன் கொஞ்சம் முயன்றால் ஒரு நல்ல நடிகராக வர வாய்ப்பிருக்கிறது. முதல் படம் என்றாலும், முக பாவங்களைத் தெளிவாகக் காட்ட வருகிறது அவருக்கு. கார்த்திகாவை ஆடு மேய்க்கும் பெண்ணாக ஒப்புக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது. அவரது தோற்றம் அப்படி. குறிப்பாக அந்த புருவம்.. ரொம்ப ஓவர்! 

மனோஜ்குமார், மீனாள், ரமா பிரபா, கொடிவீரன் தந்தையாக வருபவர், அந்த போலீஸ்காரர்... கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். சாதி... இதை வைத்து அன்றைய நாட்களில் கிராமங்களில் நடந்த கொடுமைகள், அதை எதிர்த்து போரிட்டு இழப்புகள் தாங்கி வாழ்க்கையில் இணைந்த ஒரு காதல் ஜோடி... பாரதிராஜா எடுக்க நினைத்த கதை இதுதான். 



இதை அவர் எந்த சமரசமும் இல்லாமல் தன் பாணியில் எடுத்திருந்தால், இன்னொரு அழகிய படைப்பாக வந்திருக்கும். சாதீயம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், அது சமூகத்துக்கான ஒரு மருந்தாகக் கூட இருந்திருக்கும். ஆனால் நல்ல காட்சிகள், நல்ல வசனங்கள், நல்ல பாடல், நல்ல இசை என்று எதையுமே குறிப்பிட முடியாத பரிதாபத்துக்குரிய படமாக அன்னக் கொடி வந்திருக்கிறது. 

பாரதிராஜா என்ற தனிமனிதனின் கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரதிராஜா என்ற கலைஞனின் படைப்புகளை ரசித்தவன் என்ற முறையில், அவரது இந்த வீழ்ச்சியை பரிதாபமாகவே பார்க்க முடிகிறது. இன்னொரு சரியான கூட்டணியோடு, ரசனையில் கொஞ்சம் மேம்பட்டு நிற்கும் உங்கள் ரசிகர்களை எதிர்கொள்ளுங்கள் இயக்குநரே..! (நன்றி : தட்ஸ் தமிழ்)

இந்த பெண்ணுங்க இப்படித்தாங்க... எப்படி மாறிடுறாங்க பாருங்க...!




திருமணமான புதியதில்
==================
=
=
=
=
=
=
=

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா?
இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
==================
=
=
=
=
=
=
=

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=================
=
=
=
=
=

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும். யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.
இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட 
போது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

நன்றி: முகநூலில் படித்தது...

Tuesday, June 25, 2013

சுறாவுடன் சண்டை போடும் சூப்பர் ஸ்டார்- கோச்சடையான் ரகசியங்கள்


கோச்சைடையான் படத்தில் ராட்சத சுறாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையான். 


3 டியில் வெளியாகும் இந்தப் படத்தின் காட்சிகள் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறார்கள். அதே போல, படத்தின் ஸ்டில்கள், ட்ரைலர்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லை.


இந்த நிலையில் படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி ஒரு பிரமாண்ட சுறா மீனுடன் மோதுவது போன்ற காட்சியை ஹாலிவுட் தரத்துக்கு நிகராக உருவாக்கியிருக்கிறார்களாம். ஆனால் இதில் பெரும்பகுதி கிராபிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் காட்சி ரசிகர்களை மிரளவைக்கும் என கோச்சடையான் யூனிட்டைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கோச்சடையானில் ரஜினி இரண்டு வேடங்களில் தோன்றுகிறார். அப்பா கேரக்டர் பெயர் கோச்சடையான். மகன் பெயர் ராணா. ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக தீபிகா படுகோனே நடிக்கிறார். 

சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தடம் மாறும் MLA -க்கள்....! கரைசேருவாரா விஜயகாந்த்...!


தமிழகத்தில் நடைபெறவிருக்கும், ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட, தே.மு.தி.க., கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தே.மு.தி.க.,வின், 29 எம்.எல்.ஏ.,க் களில், ஏழு பேர், அ.தி.மு.க.,வை ஆதரிப்பவர்களாக மாறியதோடு, "நல்லவருக்கே ஓட்டளிப்போம்' என்று, பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் மாறுவர் என்பது, எவருக்கும் தெரியாது. இந்நிலையில், தே.மு.தி.க., சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர் இளங்கோவன், "எங்களிடம், 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 34 எம்.ஏல்.ஏ.,க்கள் ஆதரவுடன், நிச்சயம் வெற்றி பெறுவேன்' எனக் கூறியுள்ளது வியப்பளிக்கிறது. 

"எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை; மக்களையும், மகேசனையும் மட்டுமே நம்பி, தனித்தே போட்டியிடுவேன்' என, வசனம் பேசிய விஜயகாந்த், பின், அ.தி.மு.க.,வை மட்டுமே நம்பி, கூட்டணியில் இணைந்து, 29 எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றார். ஆனால், இன்று, அவர் கட்சியைச் சார்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களோ,"தலைவர் அதை மறந்தாலும், நாங்கள் மறக்கவில்லை' எனக் கூறி, அ.தி.மு.க.,விற்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர்.

அன்று, கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியும், "சட்டசபைத் தேர்தலின் போது, தே.மு.தி.க.,வுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டோமே தவிர, கூட்டணி வைக்கவில்லை' என்று, இன்று, கையை விரித்ததோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. 

தி.மு.க., தலைமை, மகளா, தே.மு.தி.க.,வா என்றால், மகள் பக்கமே சாயும். எனவே தாம் நிறுத்திய வேட்பாளரைப் பின் வாங்கச் செய்தல் என்ற பேச்சிற்கே, தி.மு.க., தளத்தில் இடம் இராது. புதிய தமிழகம் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில், தென்காசி தொகுதியை யார் தருகிறன்றனரோ, அவர்கள் பக்கமே சாயும் என்ற நிலைப்பாடு எடுத்த போது, அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும், தன் வேட்பாளரை நிறுத்தும் என, அறிவித்ததால், அத்தொகுதியைத் தர, தி.மு.க.,வும் சம்மதம் தெரிவித்து, 

புதிய தமிழகம் கட்சியின் இரு எம்.எல்.ஏ., ஓட்டுகளும், தி.மு.க.,வுக்கே என்றாகி விட்டது. பா.ஜ., உட்கட்சி குழப்பத்தால், உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ், அதிக ஓட்டு யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் பக்கம் சாய்ந்தால், பிற்காலம் மகிழ்ச்சியாக இருக்கும் என, கணக்கு போடும். என்ன இருந்தாலும், தி.மு.க., தன் பழைய நண்பன் என்ற நிலையில், தி.மு.க.,வை ஆதரிக்கவே முன் வரும். நிலைமை இவ்வாறிருக்க, 

தினந்தோறும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வை இழந்து வருவதோடு, குடும்பக் கட்சி எனவும், தமிழகத்தில் பெயரெடுத்துள்ள, தே.மு.தி.க., கிடைக்காத ஒன்றிற்கு ஆசைப்பட்டு, மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்குவதற்குப் பதில், ஓடிக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களைத் தக்க வைப்பதில் கவனம் செலுத்தினால், எதிர்காலமாவது பிரகாசமாக இருக்கும்.

Monday, June 24, 2013

உத்தராகண்ட் பேரழிவு! கடவுளின் செயலா?



பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் கடவுளின் கோபம் என்றும் நாட்டில் அக்கிரமங்கள் பெருத்துவிட்டது, கலி முத்திப்போய்விட்டது என்றெல்லாம் 'அழுகை வேதாந்திகளும்', 'சாமானிய அப்பாவிகளும்' நினைத்துக் கொண்டு இரண்டு ப்ச் ப்ச் கொட்டிவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கப்ப் போய்விடுவர். இந்திய 'ஆன்மீக கலாச்சாரத்தில்' பேரழிவு குறித்து இருக்கும் அதிகபட்ச பொதுப்புத்தி ஐதிகங்கள் இவை.

அவ்வளவு யாத்ரீகர்களை பத்ரிநாத், கேதார்நாத் 'புனித ஸ்தலங்கள்' ஈர்த்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக வந்து போகும் பக்தர்களுக்கும் அந்த கடவுளர்களால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. அங்கேயே இருப்பவர்கள் மனிதாபிமானத்துடன் வாழவும் அந்தக் கடவுளர்கள் ஒன்றும் செய்யவில்லை. பேரழிவின் விளிம்பில் பயத்திலும், உணவும், தண்ணீரும் இல்லாமல் இருக்க்ம் 'பக்தர்களை' சுரண்டும் கொள்ளைக்கும்பலைத்தான் அந்த 'பகவான்' வளர்த்து விட்டுள்ளார். 

கடவுளை மீறிய சக்தி இருப்பதைத்தான் இதைக் காட்டுகிறது. அதுவும் 40 அடி உயர சிவபெருமான் சிலையின் வாயை அடைத்துச் சென்ற வெள்ளப்பிரவாகம் சிவபெருமான் பார்வதியுடன் குடியிருப்பதாகக் கருதப்படும் இமாலயப் பனிமலைகளின் வீழ்ச்சியையும், மனித மேம்பாட்டுவாத முதலாளிய கொள்ளை அரசியல் கொள்கைகளிகளின் வீழ்ச்சியின் குறியீடாகவும், நோய்க்குறியாகவும் தெரிவது தீர்கமான விமர்சன கண்களூக்கும் அறிவுக்கும் மட்டுமே! மூழ்காதது, மூழ்கடிக்கப்படமுடியாதது என்ற அசட்டுப் பெருமையுடனும், போலி பெருமை வழியும் பக்தகோடிகளின் மழுங்கிப் போன ஆச்சரிய உணர்வையும் எழுப்புவதற்காக எழுப்பப்பட்ட 40 அடி உயர சிவபெருமான் 
சிலை மூழ்கியது எந்த சக்தியின் காரியமோ?


புனிதத் தலங்களிலிருந்து கொண்டுவரப்படும் புனித ஜலம் எல்லோர் தலையிலும் தெளிக்கப்படும். இன்று உத்தராகண்டிலிருந்து எந்தப் புனித நீரை எடுத்து வருவர்? சிவபெருமான் தலையில் இருக்கும் கங்கோத்ரியே சிவபெருமானை மூழ்கடிக்கப்பட்ட லீலா வினோதம்தான் என்ன?

கடவுளுக்கே இந்த கதியா? என்ற பேரச்சம், உன்னதங்களும் புனிதங்களும் அதன் அச்சமூட்டும் தன்மையுடன் பின்னிப் பிணைந்தவை என்ற அரிய தரிசனத்தை நமக்குக் கொடுக்கும் நிகழ்வோ இது? என்ற கேள்வியும் எழுகிறது. உத்தராகாண்ட் பேரழிவு ஏற்படுத்தும் மன, புத்தி, உணர்வுத் தாக்கங்கள் அதன் உடனடியான கண்ணால் காணக்கூடிய பொருள் மற்றும் உயிர்கள் அழிவினால் ஏற்பட்டதல்ல. 

மீடியாக்களில் காட்டப்பட்டு பிரம்மாண்டமான சிவன் சிலை மூழ்குகிறது என்பது பொதுப் புத்தியின் ஏற்படுத்தும் சொல்லாடல்களின் குறியீட்டு ஒழுங்கினால் ஏற்படும் அச்ச உணர்வே. உணமையான அச்ச உணர்வல்ல. கடவுளின் வரம்புகள் பற்றிய கேள்விகளை இது எழுப்புவதில்லை. மாறாக கலாச்சாரத்தில் ஏற்கனவே கட்டமைத்து வைக்கப்பட்டு நம்மை பின்னிப் பிணைக்கும் சமூகக் கற்பனா வெளியில் ஏற்றப்பட்ட சுமையினால் ஏற்படும் தாக்கமேயன்றி உண்மையான தாக்கம் அல்ல.




நாம் பொதுவாக பிரம்மாண்டம் என்பது அர்த்தத்தை குழப்பிவிடுகிறது, அல்லது மறைக்கிறது என்போம் ஆனால் உத்தராகண்ட் வெள்ளம், சிவபெருமான் சிலை மூழ்கியது அனைத்தும் அச்சமூட்டும் வேறொரு எதார்த்தத்தின் பிரசன்னத்தை மறைக்கிறது சமூகம் அதனைப் பற்றி வைத்திருக்கும் நம்பிக்கைகளும், ஐதிகங்களும் பேரழிவின் பிரசன்னத்தை மறைக்கிறது, தாக்கத்தை மறைக்கிறது. கடவுளை விடவும் சக்தி வாய்ந்த விடயங்கள் உள்ளன என்பதை மறைக்கிறது!! அல்லது நாம் அது போன்ற ஒரு இருப்பை எதிர்கொள்ளத் தயங்குகிறோம்! இப்படித்தான் ஒவ்வொன்றையும் நமது சமூகத்தின் கற்பனை வாயிலாக கற்பனைப் பொருளாக மாற்றிவைத்திருக்கிறோம்.

பிரெஞ்ச் உளப்பகுப்பாய்வு மேதை ஜாக் லகான் கூறும் 'தி ரியல்' என்பது கட்புலன் அனுபவங்களுக்கு அப்பாற்பட்டது. நனவிலியுடன் தொடர்புடையது. அதன் மொழியை நாம் நமது அன்றாட இழிமொழியால் மூடி மறைத்து வத்திருக்கிறோம். அல்லது நனவிலியின் இழிமொழியை நம் 'நல் மொழி'-யால் மூடி மறைத்து வைத்திருக்கிறோம்.

ஆகவே எந்த ஒரு பேரழிவின் பின்னாலும் நம்முடைய குறியீட்டு ஒழுங்கு அல்லது கலாச்சாரப் பெட்டகச் சுமை நம்மை அழுத்தி அதன் 'உண்மை' பரிமாணத்தை சந்திக்கவிடாமல் தடுக்கிறது. நாம் தடுத்து வைத்திருக்கிறோம், உண்மையைக் காண மனித குலத்திற்கு தைரியம் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. உண்மை இல்லாத கடவுள் உண்மையில் இல்லை! ஹரஹரவென்று கன்னத்தில் போட்டுக்கொள்வதில் உண்மையின் தரிசனம் எப்படிக் கிடைக்கும்? நமது கலாச்சார, மொழி, சொல்லாடல் ஒழுங்கில் உண்மை இல்லை! மாறாக கடவுள் இருக்கிறார். உண்மையில்லாத கடவுள், உண்மையை மறைக்கும் கடவுள் இருக்கிறார்.

இந்த 'உண்மை' தான் இன்று புவி வெப்பமடைதல் என்று பேசப்படுகிறது, வானிலை மாற்றம் என்று பேசப்படுகிறது, காடுகள் அழிப்பு என்று பேசப்படுகிறது, மானுடஸமூக-பொருளாதார-மூலதன-முதலீட்டிய அசுர வளர்ச்சிக்கு கொடுக்கும் விலை என்று பேசப்படுகிறது.

ஆகவே உத்திராகண்ட் பேரழிவு முடிவல்ல ஆரம்பம்! 120 கோடி மக்கள் தொகையில் 20 ௨5 கோடி மக்களுக்கு மின்சாரம் வழங்க, மெகா அணைத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மனிதன் இயற்கையை ரசிப்பவன், அரிய இடங்களின் மீது அதி மோகம் கொண்டவன் என்ற ஒரு விஷயத்தை மூலதனமாக்க பெரும் சாலைகளை இட்டு காடுகளை அழித்து இமாலயப் பகுதிகளின் பனியை உருகச்செய்துள்ளோம். அதன் விளைவுதான் இன்றைய உத்தராகண்டின் வெள்ளக்காடு நிலவரத்திற்கு முக்கியக் காரணம்.

ஒரு வாரம் முன்பே பெரிய அழிவு காத்திருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் ஆயிரக்கணக்கானோர் பத்ரிநாத், கேதார்நாத், உத்தர் காசிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரி! பேரழிவு ஏற்பட்டால் எப்படி காப்பாற்றுவது அதற்கான உடனடியான சிந்தனை இல்லை. இமாலயமும், குறிப்பாக உத்திராகண்டும் இதுபோன்ற பேரழிவுகு இலக்காக கூடியதுதான் என்று முன் கூட்டியே நம் 'டெவலப்மென்ட்' பேசும் சிதம்பரங்களுக்கும், மன்மோகஙளுக்கும் தெரியும்.

மகா அணைகளால் நிச்சயம் ஊர் வெள்ளக்காடாகும் அபாயம் என்று தெரிந்தே தெஹ்ரி அணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

உத்தராகண்ட் பேரழிவைக் கண்ட பவுத்த பிட்சு லாப்சங் கியாட்சோ என்பவர் "அணைகளும் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களும் உத்தராகண்டை பேரழிவுக்கு இட்டு சென்றுள்ளது" என்று கூறியுள்ளார்.



இன்று உத்தராகண்ட் நாளை வடகிழக்கு மாநிலங்கள் பேரழிவை சந்திக்கவுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட மெகா அணைக் கட்டுத் திட்டங்கள் அங்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகள் பேரழ்வின் டைன் பாம் என்றே இயற்கை மீதும் மனிதர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் கூறுகின்றனர்.

மானுட வளர்ச்சித் திட்டங்களினால் வெளியேறும் கரியமிலவாயுவினால் ஏற்படும் வானிலை மற்றத்தில் விண்வெளிக்காற்று மண்டலம் வறண்டு, அதிகபட்ச ஈரப்பதத்தை தன்னுள்ளே தேக்கி வைக்கிறது. இதுதான் கிளவுட் பர்ஸ்ட் என்று அகால வேளைகளில் பேய் மழையாக அவதரிக்கிறது. உத்தராகண்டில் இந்த கிளவுட் பர்ஸ்ட்டுடன் இமாலய பனிமலை உருகுதலும் சேர்ந்து கொண்டுள்ளது. தாங்குமா? இமாலயன் சுனாமி என்றே இன்றைய வெள்ளத்தை அழைக்கின்றனர்.

சுற்றுச்சூழல் வல்லுனர்கள் இமாயலய நதிகளில் இமாயலய அணைகளைக் கட்டுவதை முதைல் தடுத்து நிறுத்தவேண்டும் என்றே ஒட்டுமொத்தமாக கூறுகின்றனர்.

பேரழிவு ஏற்படும்போதாவது அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் ஆனால் வளர்ச்சி எனும் கடவுள் நம் கண்க்ளை மறைக்கிறார். அறிவுக்கண்களை குருடாக்கியுள்ளார்.

தத்துவத்தில் எப்போதும் ஒரு கேள்வி தொக்கி நிற்கும். "ஏன் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது, ஏன் எதுவுமே இல்லை என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை?' என்ற கேள்விதான் அது.

இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த ஒன்று அந்த சம்திங் நம்மைப் பின்னிப் பிணைத்திருக்கும் நோய்க்குறியான, நம்பிக்கை எனும் கலாச்சார குறியீட்டு ஒழுங்குதான், நம்முடைய மொழியே நமக்கு எதிரிதான். இங்கு மொழி என்றவுடன் தமிழா, சிங்களமா என்ற ரீதியில் Generic - ஆக புரிந்து கொள்ளக்கூடாது. பொதுவான மொழி நமக்கும் புற உலகத்திற்குமான உறவை, புரிதலை அல்லது புரிதலின்மையை இடையீடு செய்யும் மொழி எனும் கலாச்சார, குறியீட்டு ஒழுங்கைத்தான் இங்கு மொழி என்று குறிப்பிடுகிறோம்.

மூழ்கிய பிரம்மாண்ட சிவபெருமான் சிலை ஒரு எச்சசொச்சமே, பொருள் எச்சசொச்சமே, கடவுள் என்ற ஸ்பிரிட்டோ அல்லது ஏதோவொன்றின் வடிவம் கிடையாது. கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட மானுட செயல்பாட்டின் வியர்த்தத்தின் குறியீடு! ஒன்றுமேயில்லாமல் போகும் என்பதன் Nothingness- இன் குறி.

நாம் அந்த பயங்கரத்தை லக்கான் கூறுவது போல் மழுங்கடிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம், அல்லது மழுங்கடிக்கப்பட்ட உணர்வே அந்தப் பொருள் என்றும் கடவுள் என்றும் கருதுகிறோம்.

Saturday, June 22, 2013

ஆட்டோ தொழிற்சங்கங்களின் அடாவடியும்... காற்றில் பறக்கும் அரசின் உத்தரவுகளும்



நீண்ட இடைவேளைக்குப் பறகு, தமிழக அரசு, முதல், 2 கி.மீ., தூரத்திற்கு, குறைந்தபட்சக் கட்டணம், 20 ரூபாயும், கூடுதல் ஒவ்வொரு கி.மீ., தூரத்திற்கும், 10 ரூபாய் என்ற அடிப்படையிலும், கட்டணம் நிர்ணயித்துள்ளது.


சென்னை நகரில், இன்றைய கணக்குப்படி, 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவை, ஏறத்தாழ, 10 தொழிற்சங்க அமைப்புகளைச் சார்ந்து இயங்கி வருகின்றன.


இவற்றில், 50 முதல், 60 சதவீத ஆட்டோக்கள், இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட சங்கங்கள் எல்லாம் கூடி, தமிழக அரசின் புதிய ஆட்டோ கட்டணத்திற்கு எதிராக, போர்க்கொடி உயர்த்தியுள்ளன.



இந்தக் கூட்டமைப்பு, தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதத்திற்குப் பதிலாக, முதல், 2 கி.மீ.,க்கு, 30 ரூபாயும், கூடுதல் கி.மீ., ஒவ்வொன்றுக்கும், 15 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அதை அடையும் வரை, போராட்டம் தீவிரம் அடையும் என, எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தான், 2007ல், தமிழக அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தை ஏற்க மாட்டோம் என்று நிராகரித்தவர்கள். அதற்குப் பதில், டிஜிட்டல் மீட்டரை, ஆட்டோவில் காட்சிப் பொருளாகப் பொருத்தி, பயணிகளிடம், தம் இஷ்டம் போல, தொகையை பேரம் பேசிக் கறப்பதை, வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்கள்.


இது ஒரு புறம் இருக்க, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற, அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களில், ஆட்டோ கட்டணம், முதல், 2 கி.மீ.க்கு, 14 முதல், 16 ரூபாய் வரையும், அடுத்த ஒவ்வொரு கி.மீ., தூரத்திற்கும், 7 அல்லது 8 ரூபாயாகவும், அந்த அரசுகள் நிர்ணயித்த கட்டணம், இன்றும் எந்தவித சிக்கலும் இன்றி, அமலில் இருந்து வருகிறது.

உயர்ந்த வாழ்க்கைத் தரமும், கூடுதல் பணப் புழக்கமும் உள்ள, அந்த நகரங்களில் எல்லாம், ஆட்டோ ஓட்டுனர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தில், ஆட்டோ ஓட்ட முடிகிறது எனும் போது, சென்னை ஆட்டோ ஓட்டுனர்களால் முடியாதா?


ஒரு சின்னக் கணக்கு... ஒருவர், 5 கி.மீ., தூரம் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்ய, எவ்வளவு கட்டணம் தர வேண்டி இருக்கும்?

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், 40 ரூபாய் செலவாகும். தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள, புதிய கட்டணப்படி பார்த்தால், 50 ரூபாய் கொடுக்க வேண்டி வரும். 
ஆனால், தற்போதுள்ள மீட்டர்படி அல்லது நடைமுறைப்படி, குறைந்தது, 80 ரூபாய் வ‹லிக்கப்படுகிறது.


இடதுசாரி அரசியல் செல்வாக்கு படைத்த பெரும்பான்மையினர், ஆட்டோ ஓட்டுனர்களாக இருக்கின்றனர்; அவர்கள், மக்கள் பக்கம் நிற்கக் கடமைப்பட்டவர்கள் என்பதை, நிரூபிக்கும் காலம் இது.

Friday, June 21, 2013

வடிவேலு மறுத்த கதையில் நடிதது ஹிட் அடித்த விஜய்...! வெளிபடுத்திய பிரபல இயக்குனர்


இயக்குனர் எழில், துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்திப் பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் எடுத்தவர். தற்போது எழில் இயக்கத்தில் தேசிங்கு ராஜா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 





நேற்று(20.06.13) நடந்த தேசிங்கு ராஜா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எழில் பற்றி இயக்குனர் கரு.பழனியப்பன் பேசியபோது “ துள்ளாத மனமும் துள்ளும் கதையை பல ஹீரோக்களிடம் சொல்லி கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அப்போதைய வடிவேலு(ஹீரோ இமேஜ் இல்லாத சாதாரண காமெடியன்) வரை துள்ளாத மனமும் துள்ளும் கதையுடன் சென்றோம்.


கதையை கேட்ட வடிவேலு ’இந்த நல்ல கதையில் நான் நடிக்கணுமா. நல்லா யோசிச்சு பாருங்க. ஒரு நல்ல கதைல நான் நடிச்சு வீணடிக்க விரும்பல. 6 மாசம் காத்திருந்து அப்பறம் வாங்க, அப்பவும் உஙளுக்கு இதேமனநிலை இருந்தா நான் நடிச்சு குடுக்குறேன்’ என்று கூறினார். 


அதன்பிறகு சூப்பர்குட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை எழில் இயக்கி மாபெரும் வெற்றிகண்டார். வடிவேலு நடித்திருந்தால் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருக்க முடியாது. திரைப்படத்தின் ரிசல்ட் எப்படி இருந்திருக்கும் என்றும் சொல்ல முடியாது” என்று கூறினார்.

Thursday, June 20, 2013

மதச்சார்பின்மை என்றால் என்ன? சிலைகள் அவசியம் தானா?


"விநாச காலே விபரீத புத்தி!' என்பர். இதற்கான அர்த்தம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பீகாரில் ஆட்சியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கும், அவரது ஐக்கிய ஜனதா தளக் கட்சியினருக்கும், விநாச காலம் துவங்கி விட்டது போலும். 

நிதிஷ் மற்றும் அவரது கட்சியினரின் அன்றாட நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் விபரீதத்திற்கு, கட்டியம் கூறி, வரவேற்றுக் கொண்டுள்ளன.சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், ஐ.ஜ.த., தோல்வியை தழுவியதோடு, சமாதியாகி இருந்த லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளதே, இதற்கு சரியான தாரணம்.அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில், ஐ.ஜ.த., மண்ணைக் கவ்வினாலும், அது, ஆச்சரியமாக இருக்காது. 

நிதிஷின் சோற்றில், மோடி என்றைக்கு மண்ணை அள்ளிப் போட்டாரோ தெரியவில்லை. மோடியை பார்த்தாலே, நிதி
ஷ்
க்கு பற்றிக் கொண்டு வருகிறது. போதாக் குறைக்கு, பா.ஜ.,வின் பிரசார குழுத் தலைவராக வேறு, மோடி நியமனம் செய்யப்பட்டு விட்டார். தகவல் வந்ததிலிருந்து, நிதிஷக்கு மட்டுமின்றி, அவரது கட்சியினருக்கும், உடம்பு எரிய ஆரம்பித்து விட்டது.

நாட்டிலுள்ள விவசாயிகளிடமிருந்து, இரும்புத் துண்டுகளை இனாமாகப் பெற்று, குஜராத்தில், 392 அடி உயரத்திற்கு, இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேலுக்கு, நினைவுச் சின்னமாக, ஓர் இரும்பு சிலை வைக்கப் போவதாக, அறிவித்திருக்கிறார் மோடி. இதில், தவறு ஏதும் இருப்பதாக, யாருக்கும் தோன்றவில்லை. 

ஆனால், ஐ.ஜ.த., கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான, சிவானந்த் திவாரிக்கு தோன்றிருக்கிறது. மோடி, வல்லபாய் படேலுக்கு மதச் சாயம் பூசி, படேலின் பெருமைகளை, களங்கப் படுத்த முயல்வதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.இரும்பாலான சிலை மீது, அது துருப்பிடிக்காமலிருக்க, "எனாமல் கோட்டிங்' பூசுவர். ஆனால், அந்த, 392 அடி சிலைக்கு, மத சாயத்தை எங்கே, எப்படி பூசுவர் என்பது தான், புரியாத புதிராக உள்ளது. 

மதச்சார்பின்மை என்ற வார்த்தையை வைத்து, இதுகாறும், காங்., கட்சி தான் பூச்சாண்டி காட்டி பயமுறுத்தி வந்தது. அந்த வரிசையில், இப்போது, ஐ.ஜ.த.,மும், தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. "மதச்சார்பின்மை' என்றால், என்னவென்றே தெரியாதவர்களிடம், மதச்சார்பின்மை என்ற வார்த்தை மாட்டிக் கொண்டு, "பேய் முழி' முழித்துக் கொண்டிருபதை பார்த்தால், பரிதாபமாக உள்ளது.

தமிழன்னைக்கு, 100 கோடி ரூபாய் செலவில், மதுரையில் சிலை வைப்பேன் என்று, பணத்தை அனாவசியமாக செலவு செய்ய, தமிழக முதல்வர் அறிவித்ததை போல, இந்த, 392 அடி
யர வல்லபாய் படேல் சிலையை செய்வது, அனாவசியமான செலவு என்று சொல்லி இருந்தாலும், அதில் ஒரு அர்த்தம் உண்டு.

Tuesday, June 18, 2013

திருமணத்திற்கு முன் அது சரியே...! மீண்டும் களம் இறக்கும் குஷ்பு...!


திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து தனது கருத்தை ஒட்டிய கோணத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும், தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டுள்ளார் நடிகை குஷ்பு. 

கற்பு குறித்து முன்பு கருத்து சொல்லி பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டவர் குஷ்பு. திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைக்கும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சொன்னார் குஷ்பு. 

இதையடுத்து அவருக்கு எதிராக வழக்குகள் பாய்ந்தன. போராட்டங்களும் வெடித்தன. அவர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அதை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றம் வரை போய் தனக்கு சாதகமாக தீர்ப்பையும் பெற்றார். 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் ஒரு வழக்கில் தீ்ர்ப்பளித்த ஹைகோர்ட், திருமணம் ஆகாவிட்டாலும் கூட ஒரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக இணைந்து குழந்தையும் பெற்று்க கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்படுவர்.

அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் முறையற்றதாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. 

இதைச் சுட்டிக் காட்டி தனது ட்விட்டரில் ஒரு டிவிட் செய்தியைத் தட்டி விட்டுள்ளார் குஷ்பு. அதில், நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இப்போது உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 

திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது நடக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இப்போது எந்த அரசியல் கட்சியாவது உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு கத்துகிறார்களா என்பதை நான் பார்க்கக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு என்ன போராட்டம் நடக்கப் போகிறதோ....!

Monday, June 17, 2013

இதயத்தைப் பிசையும் மணிவண்ணனின் கடைசி குரல்!


இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர்- நடிகர்-சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது. 

கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்... 

"இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர், என் ஆசான், நான் இப்போதும் போற்றும் இயக்குநர் பாரதிராஜாதான். அவர் இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயோ திசைமாறிப் போயிருக்கும். 

நான் சொன்ன ‘நிழல்கள்' என்கிற கதையைக் கேட்டு சிலாகித்துப் போய் அதையே தன்னுடைய அடுத்த படத்துக்கான கதையாக முடிவு செய்து அந்தப்படத்துக்கு வசனமும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு தந்தார்கள். 

ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அப்போது பாரதிராஜா அவர்களுடைய நண்பர்கள் "சொன்னா கேட்கமாட்ட எவனோ ஒருத்தன் கோயம்புத்தூர்ல இருந்து கண்ணாடி, ஜிப்பா போட்டுட்டு வந்தான். அவனை ஒரு பெரிய அறிவாளியா நெனச்சிக்கிட்டு நீ வந்து இந்தப்படத்தை எடுத்து, இதுவரைக்கும் பெயிலியரே கொடுக்காத... நீ இப்போ ஒரு பெயிலியர் கொடுத்து, உன் பேரை கெடுத்துட்ட பாத்தியா... சக்சஸ் குடுக்கலே"ன்னு சொன்னாங்க. 

அப்போ அவரு சொன்னாரு.., நான் வந்து இதே மணிவண்ணனை வெச்சு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குறேனா? இல்லையான்னு பாருங்கன்னு சொல்லி, மணி உன்ன நம்பி அவனுங்ககிட்ட நான் வார்த்தை கொடுத்துட்டேன். நீதான் பொறுப்பு.. அந்தக்கதையை நீ எப்படி எழுதுவியோ எனக்கு தெரியாது, உனக்கு ஒரு பத்து நாள் டைம் தர்றேன்னு சொன்னாரு. 

அதுக்கப்புறம் நான் எழுதின படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை'. அந்தப்படம் தமிழக அரசினுடைய 9 விருதுகளை பெற்றுத் தந்தது. அதில் சிறந்த கதையாசிரியர் மற்றும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான இரண்டு விருதுகளை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் இருந்து பெற்றேன். 

இன்றைக்கும் அரசியல் ரீதியாக, சில சொந்த விறுப்பு,வெறுப்புகளில் நான் விலகி இருந்தாலும் கூட - அம்மா அப்பாக்கிட்ட சண்டை போடுறதில்லையா அந்த மாதிரி தான்... - அவரை வந்து நான் எப்போதும் என்னுடைய இரண்டாவது தாய், இரண்டாவது தந்தை என்று தான் நினைக்கிறேன். அவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னை அறியாமல் எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும்.

அந்த நன்றி உணர்வு தான் இன்றைக்கு எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட நம்புகிறேன். 



என் நேசத்துக்குரிய ஆசான் அப்பா வணக்கம், 

இன்னைக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தால, உங்களுடைய அரவணைப்பால நான் சிறந்த நிலையில இருக்கேன். எனக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க.., நேத்து மாதிரி இருக்கு, இன்னைக்கு என் மகளுக்கும் திருமணம் ஆயிடுச்சி, என் மகனுக்கும் ஆகப்போகுது, நாட்கள் வேகமாக நகர்ந்துடுச்சு. 

எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும், எத்தனையோ பேர் நம்மளை சிலாகித்து பேசினாலும் அப்பா சத்தியமா சொல்றேன் நான் எப்பவும் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான்.( கண்ணீர் விட்டு அழுகிறார் மணிவண்ணன்...) நான் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான், என்மேல ஏதாவது கோபம் இருந்தா என்னை ஒரு அறை விட்டுருங்க; தயவுசெய்து பேசாம மட்டும் இருக்காதீங்க.., ப்ளீஸ்... ப்ளீஸ்பா...." - 

மெல்லக் கரைகிறது மணிவண்ணனின் குரல். நீரால் நிறைகின்றன கண்கள்! ஆனால், இதற்கு பாரதிராஜா ஆனந்த விகடனில் மணிவண்ணன் குறித்து கடுமையான கருத்துக்களுடன் பதில் தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜயகாந்தின் முடிவு என்ன...?



மேல்சபை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தில் சரியான போட்டி நிலவுகிறது. மற்றயாராவது விட்டுக்கொடுத்தால் அல்லது  ஆதரவு அளித்தால் மட்டும் 6-வது உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை உறுவாகியுள்ளது. தேமுதிக உறுப்பினர்கள்  ஆதரவு இருந்தால் மட்டுமே 6 உறுப்பினரின் வெற்றி உறுதியாக இருக்கும் என்ற நிலையில் அனைவரின் கவனமும் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளது... இந்நிலையில் யாருக்கு விஜயகாந்த் ஆதரவு அளிக்கபோகிறார் என்பது   கேள்விக்குறியாக இருக்கிறது...



ஹலோ... விஜயகாந்த்.... உங்க காட்டுல பண மழைதான் போங்க ...

Sunday, June 16, 2013

இவ்வளவுதாங்க கனிமொழி அவர்களின் சொத்து...!


திமுக எம்.பி. கனிமொழியின் சொத்துக்கள் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.8.56 கோடியில் இருந்து ரூ.26.67 கோடியாக அதிகரித்துள்ளது. 

திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். 

வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்து விவரங்களை அவர் அளித்தார். தனக்கு ரூ.16.67 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.10 கோடி அசையா சொத்துக்கள் என்று மொத்தம் ரூ.26.67 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் ரூ.8.56 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 360 கிராம் தங்க நகைகள் இருந்தது. ஆனால் தற்போது 700 கிராம் தங்க நகைகள் உள்ளன. 

ஆனால் கடந்த 2007ம் ஆண்டைப் போலவே தற்போதும் அவரிடம் 10 காரட் வைரம் நகைகள் தான் உள்ளது. மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள பங்குகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, June 15, 2013

மணிவண்ணன் மீது புலிக்கொடி.... ஈழ உணர்வு கொண்ட உன்னத தமிழன்..! இறுதி சடங்கை நடத்தும் சீமான்


மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். 

தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார். 

அப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன். 



இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது, அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார். தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர். தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. 

சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், "நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். 

தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். 

என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை," என்று கூறினார். 



நிறைவேற்றிய சீமான்... 

அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். இன்று மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த சீமான், அவர் உடலில் புலிக்கொடியைப் போர்த்தினார். 

நாளை மாலை மணிவண்ணனின் இறுதிச் சடங்கு சென்னை அருகே போரூரில் நடக்கிறது. மணிவண்ணனின் கேகே நகர் வீட்டிலிருந்து புலிக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று அவரை அடக்கம் செய்கிறார்கள்.

மதச்சார்பின்மைக்கு "மீனிங்' இது தான்..! இப்படியும் ஒரு இஸ்லாமிய நாடு


இந்தோனேஷியா, இஸ்லாமிய நாடு என்பது, உலகம் அறிந்த உண்மை. ஆனால், அந்த நாடு, தன் கரன்சியில், இந்துக்களின் முதல் கடவுளான, பிள்ளையாரின் உருவத்தை அச்சிட்டு உள்ளது.

இப்போது, அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில் உள்ள இந்தோனேஷியா தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சரஸ்வதி சிலையை, அமெரிக்காவுக்கு, பரிசாக அளிக்கவுள்ளது.

உண்மையான மதச் சார்பின்மைக்கு, இந்தோனேஷியா உதாரணமாக உள்ளது. இஸ்லாமிய மதத்தில் உருவ வழிபாடு கிடையாது. அதனால், அம்மதத்திற்கென சிலைகள் எதுவும் கிடையாது.

ஆனால், கிறிஸ்தவ மதத்தில், இயேசு, மேரி, குழந்தை இயேசு என்று சிலைகள் உண்டு. அமெரிக்கா கிறிஸ்தவ நாடு. இந்தோனேஷியா நினைத்திருந்தால், இயேசு, மேரி போன்றவற்றில் ஒரு சிலையை வழங்கி இருக்கலாம். ஆனால், இந்துக் கடவுளான சரஸ்வதி சிலையை, பரிசாக வழங்கி உள்ளது.

படைக்க, காக்க, அழிக்க என்று, இனம் பிரித்து வகைப்படுத்தி, கடவுள்களைக் கொண்டிருக்கும் ஒரே மதம், இந்து மதம். 
அதில் எந்தக் கடவுள் சிலையையும், இந்தோனேஷியா தயாரிக்கவில்லை. கல்விக் கடவுள் என்று வணங்கப்படும் சரஸ்வதி சிலையை, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இது தானய்யா மதச் சார்பின்மை...அமெரிக்காவுக்கு, இந்தியா ஏதாவது சிலையை பரிசளிப்பதாக இருந்தால், கிறிஸ்தவ மத சம்பந்தமான, ஒரு சிலையைத் தான் வழங்கி இருக்கும்.

ஆனால், இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, கிறிஸ்தவ நாடான அமெரிக்காவுக்கு, இந்துக் கடவுளான சரஸ்வதி சிலையை பரிசாக அளித்து, மதச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி உள்ளது. 

போலி மதச் சார்பின்மை பேசும் நம் நாட்டு அரசும், அரசியல்வாதிகளும், வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் இது. (
எஸ்.ஆறுமுகம், சென்னை)

Friday, June 14, 2013

போதையில் கரையும் தமிழ் சினிமா... !தள்ளாடும் தமிழகம்



சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான்.

தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும். 



அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை பரவசப்படுத்த இயக்குனர்கள் இப்போது அதிகம் நம்புவது டாஸ்மாக் காட்சிகளைதான். பிராந்தி பாட்டிலை காண்பித்தாலே திரையரங்குகள் ஆர்ப்பரிக்கின்றன.

இருபது வருடங்களுக்கு முன் குடி ஒரு மோசமான செயலாக நமது சமூகத்தில் பார்க்கப்பட்டது. அன்று திரைப்படங்களில் குடி என்பது ஒருவரின் குணத்தை வெளிப்படுத்தும் விஷயமாக கையாளப்பட்டது. அதாவது வில்லன்கள் மட்டுமே எப்போதும் மதுக்கோப்பைகளுடன் இருந்தார்கள். கதாநாயகன் தவறு செய்வதாக காட்சி வந்தால் குடி போதையில் அந்தத் தவறை செய்வதாக காட்டினார்கள். அதாவது போதைதான் அவனை தவறு செய்ய வைத்தது என்பதாக. நடைமுறை வாழ்க்கையிலும் இன்று போல் குடி இயல்பான ஒன்றாக ஆகியிருக்கவில்லை. குற்றவுணர்வுடனே மதுவிடுதிகளை அன்று நாடினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் மதுவை ஒரு அத்தியாவசிய பண்டமாக ஆக்கிவிட்டார்கள். ஒரு தலைமுறையை குடிகாரர்களாக மாற்றிய பெருமை இரு திராவிட காட்சிகளுக்குமே உண்டு. சமூக அளவில் மது குறித்து இருந்த மனத்தடைகளையும், குற்றவுணர்வுகளையும் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள் இல்லாமலாக்கிவிட்டன. குடி இன்று ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.

1983ல் மது விற்பனை 180 கோடியாக இருந்தது. இருபது வருடங்களில் அதாவது 2003ல் அது 3,600 கோடியாக உயர்ந்தது. 2013ல் 22,000 கோடிகள். உலகில் எந்தவொரு வியாபாரமும் இப்படியொரு வளர்ச்சியை கண்டதில்லை. தமிழகத்தைவிட ஒன்றரை மடங்கு ஜனத்தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் மதுவினால் கிடைக்கும் வருவாய் 11,500 கோடிகள். தமிழகத்தில் அதுவே 22,000 கோடிகள். தமிழ்நாட்டின் குடிவெறிக்கு இதுவொரு சின்ன உதாரணம். 


குடியே கூடாது என்று சொல்லும் ஒழுக்கவாதியோ, மதுவை அறவே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் காந்தியின் லட்சியவாதியோ கிடையாது நாம். அதேநேரம் இந்தப் பழக்கத்தின் அசுர வளர்ச்சி அச்சப்படுத்துகிறது. 

குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்றோம். அதுதான் பிரச்சனையின் அடிப்படை. பழக்கம் என்பது நாம் சிந்தித்து நடைமுறைப்படுத்துவது இல்லை. அது நம்மையறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்வது. இருபது வருடங்களுக்கு முன் மெழுகுவர்த்தி ஊதி அணைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது அரிது. ஆனால் இன்று அந்த சம்பிரதாயத்தை கடைபிடிக்காத குடும்பங்களே இல்லை. 

கேக், மெழுகுவர்த்தியுடன் தலையில் வைக்கும் குல்லா முதற்கொண்டு அதற்கான எக்ஸ்ட்ரா தளவாடங்கள் விற்பனை இன்று மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கிறது. இன்று நாம் விரும்பாவிட்டாலும் அந்த சம்பிரதாயத்தை செய்ய வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். பழக்கத்தினால் வரும் முக்கியப் பிரச்சனையே அதுதான். நாம் விரும்புகிறோமா இல்லையோ அதை நாம் செய்ய பழக்கப்படுத்தப்படுகிறோம்.



இன்று குடியை நாடும் பெரும்பாலான இளைஞர்கள் குடியை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதைவிட குடிக்கு பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் சரி. சென்ற தலைமுறையை ஓரளவு குடிப்பழக்கத்திலிருந்து தடுத்தது, சமூகம் குடி குறித்து உருவாக்கி வைத்திருந்த, குடி மோசமான செயல் என்ற மதிப்பீடும், அந்த மதிப்பீடு உருவாக்கிய குற்றவுணர்வும்தான். அதனை இல்லாமல் செய்ததில் கடந்த இருபதாண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

சினிமாவுக்கும் அதில் கணிசமான பங்குண்டு. நிஜத்தைதானே சினிமாவில் காண்பிக்கிறார்கள் என்று சப்பைகட்டு கட்ட முடியாது. நிஜத்தை சினிமா பிரதிபலிக்கிறதா இல்லை சினிமாவைப் பார்த்து நிஜத்தை உருவாக்குகிறார்களா என்பது பதில் கிடைக்காத கேள்வி. ஆறு இரு கரைகளையும் இணைக்கிறதா இல்லை பிரிக்கிறதா என்பது போல. கரைகளை பிரிப்பதும் ஆறுதான், இணைப்பதும் ஆறுதான். குடி விஷயத்தில் யதார்த்தமும், சினிமாவும் ஒன்றையொன்று ஒத்திசைந்து தம்மை வலுப்படுத்திக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற தலைமுறை சினிமாவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிற, கொலை செய்கிற வில்லன்கள்தான் மது அருந்தினார்கள். மது கெட்ட மனிதனின் அடையாளமாக இருந்தது (குடிப்பவர்கள்தான் மோசமானவர்கள் அல்லது மோசமானவர்கள்தான் குடிப்பார்கள் என்ற அந்தக்கால சினிமா பார்வையிலும் நமக்கு உடன்பாடில்லை). பருந்து பார்வையில் சொல்வதானால் ஒருவன் கெட்டவன் என்பதை காண்பிக்க அவன் கையில் மதுக்கோப்பையை தந்தார்கள். ஆனால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் அறிமுகமாவதே டாஸ்மாக் கானா பாடலில்தான்.

படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்... காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்... தோல்வி அடைந்தால் டாஸ்மாக்... காமெடி என்றால் டாஸ்மாக்... கானா பாடல் என்றால் டாஸ்மாக்... விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் விளம்பரங்கள் எப்படி நம்மை கன்ஸ்யூமராக மாற்றுகிறது என்பது பற்றி அலசப்பட்டது. அதில் பேசிய ஒரு இளம்பெண், சாக்லெட்டை கண் மூடி சுவைப்பதை பெருமையாக குறிப்பிட்டார். விளம்பரத்தில் கண்களை மூடி சாக்லெட்டை சுவைக்கும் பெண்ணை அவர் இமிடேட் செய்கிறார் என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த இளம்பெண்ணைப் போல இன்னதென்று அறியாமலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிற இளைஞர்கள்தான் இன்று அதிகம். சிந்தித்துப் பார்க்காமல் எதையும் சுவீகரித்துக் கொள்ளும் சமூகத்தை குடியிலிருந்து ஓரளவு தடுத்து நிறுத்துவது குடி குறித்த குற்றவுணர்வுதான். அந்த குற்றவுணர்வை நமது சினிமா இல்லாமலாக்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும்.



தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்டால் வேறு எந்த மொழி திரைப்படமும் இப்படி குடியில் விழுந்து கிடக்கவில்லை. பெரும் குடிகாரர்கள் நிறைந்த கேரளாவிலும்கூட குடி சம்பந்தமான காட்சிகள் கதையோட்டத்தின் தேவையை முன்னிறுத்தி மட்டுமே வைக்கப்படுகின்றன. குடிக்காக காட்சிகள் அமைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான். ஒரு பள்ளி மாணவன் எவ்வித உறுத்தலும் இன்றி டாஸ்மாக்கில் மது அருந்துவதற்கான மனப்பக்குவத்தை தந்ததில் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.


இருபத்தைந்தாயிரம் கோடி இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்கும் நாட்டில் குடி குறித்த குற்றவுணர்வை இனி எதிர்பார்ப்பதற்கில்லை. குடியை வைத்து கைத்தட்டல் வாங்குகிறோமே என்று ஏதாவது இயக்குனர்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டால்தான் உண்டு.  (Thanks http://tamil.webdunia.com/)

Thursday, June 13, 2013

அந்த பெருமை எனக்குத்தான்! சத்யராஜிடம் சிவகார்த்திகேயன்!


இயக்குனர் பொன்ராம் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ’பரோட்டா’ சூரி, ஸ்ரீ திவ்யா, பிந்துமாதவி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். 





படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குத் தயாராகவிருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று(12.06.13) நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன் “படத்துல வர்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்துக்கு சத்யராஜ் சார் நடிச்சா நல்லா இருக்கும்னு நான் சொன்னதும், யாரும் ஒத்துக்கல. 


’சத்யராஜ் சார் எவ்ளோ பெரிய ஆளு. அவர் இந்தில ஷாருக்கான் கூட, தமிழ்ல விஜய் கூட அப்டினு பெரிய ரேஞ்ச்ல போய்கிட்டு இருக்காரு. அவர் நம்ம சின்ன பட்ஜெட் படத்துல நடிப்பாரா’ அப்டினு தயங்குனாங்க. கடைசி முயற்சியா அவர மீட் பண்ணி கதை சொன்னதும், சாருக்கு கதை ரொம்ப புடிச்சுபோனதால உடனே நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாறாம். 


அதனால இந்த படத்துல சத்யராஜ் சார் நடிச்ச பெருமை எனக்கு தான்” என்று கூறினார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க புதுமுக நடிகை ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பரோட்டா சூரி சிவகார்த்திகேயனின் நண்பன் கதாபாத்திரத்தில் வந்து கலக்குகிறார். 


சத்யராஜின் கதாபாத்திரம் சமுதாய பொறுப்புள்ள கதாபாத்திரமாக இருந்தாலும் அவரும் காமெடியில் பிண்ணி எடுத்துவிட்டாராம்.

இதில் கூடவா அரசியல்...! நீயா-நானா... பரிதவிக்கும் தம்பதிகள்


கடந்த சில மாதங்களாக, ஊடகங்களிலும், நீதிமன்றத்திலும் பரபரப்பான செய்தியாக வெளிவந்து கொண்டிருப்பது, தர்மபுரி மாவட்டம், செல்லன்கோட்டையைச் சேர்ந்த, திவ்யா என்ற தமிழ் பெண்ணும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, தமிழ் இளைஞன் இளவரசனும் செய்து கொண்ட திருமணம் குறித்து தான். 

இந்த திருமணத்தால், இரண்டு ஜாதியக் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள, "நீயா, நானா' போட்டியில் ஏற்பட்ட கலவரங்கள், உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் மதிப்பிட முடியாதவை.

இந்த தம்பதிக்குள், எவ்வித மனக் கசப்போ, சச்சரவுகளோ இல்லை என்பது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, 
நீதிபதிகள் முன், திவ்யா அளித்த வாக்கு மூலங்கள் மூலம் வெளிப்படுகிறது. இரண்டு உள்ளங்கள் இணைந்து, மண வாழ்வில் ஈடுபடுவதை, எப்படி ஜாதியப் பிரச்னையாக பார்க்கின்றனர்? 

அப்படியே கணவன் - மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டால், திருமண முறிவுக்கு உண்டான சட்டங்கள் மூலம், நீதிமன்றத்தில் தகுந்த பரிகாரம் தேடிக் கொள்ள, இருவருக்கும் உரிமை உள்ளது.அதை விடுத்து, கணவன் - மனைவி என்ற புனிதமான உறவை, மேற்கண்ட ஜாதியக் கட்சிகளின் செயல்பாடுகள், தலையீடுகள் கொச்சைப்படுத்தி 
விட்டன. 

கடல் கடந்து வாழும், இலங்கைத் தமிழர்களை தொப்புள் கொடி உறவு என்று கூறுவோர்; தமிழர்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொள்வோர், தமிழகத்தில், அருகருகே உள்ள கிராமத்தில், இரண்டு தமிழ் உள்ளங்கள் இணைந்து, மணம் செய்து வாழ்வு நடத்துவதற்கு, ஏற்படும் தடைகளை ஏன் கண்டு கொள்ளவில்லை; ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் ஏன் செய்கின்றனர்.

முதலில் கிராம அளவில், மாவட்ட அளவில், தமிழக அளவில், தமிழர்கள் ஒன்றுபடுவோம். பின், கடல் கடந்து வாழும், இலங்கைத் தமிழர்களை பற்றி சிந்திப்போம்.திவ்யாவும் - இளவரசனும், நம் தமிழ் ரத்தங்கள் தான் என்பதை, இவர்கள் ஏன் மறந்தனர்? எல்லாமே அரசியல் தானோ?

ஆர்.பி.பன்னீர் செல்வம், வழக்கறிஞர், சென்னை. 
கடிதம்.

Wednesday, June 12, 2013

மகள்கள் படுத்தும்பாடு...! பாசத்தில் தவிக்கும் ரஜினி!


'எந்திரன்' படத்தினைத் தொடர்ந்து ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்திருக்கும் படம் 'கோச்சடையான்'.

ரஜினி, தீபிகா படுகோன், நாசர், ஆதி, சரத்குமார், ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ள 'கோச்சடையான்' படத்தினை ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு சுமார் 25 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஏனென்றால் 'கோச்சடையான்' MOTION CAPUTRE TECHNOLOGY படம் என்பதால் கொஞ்சம் நாட்கள் படப்பிடிப்பு நடந்தாலே போதுமானது.

ரஜினிக்கு நெருக்கமான பிரபல இயக்குனர்கள், ரஜினி கால்ஷீட்டிற்காக காத்து இருந்து, அவரை அணுகி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பலரை நாசூக்காக ரஜினி தவிர்த்து வருகிறார்.சமீபத்தில் கூட கே.வி.ஆனந்திற்கு கால்ஷீட் கொடுப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த படத்தினை திட்டத்தினை கடைசியில் தள்ளி வைத்து விட்டார் ரஜினி.

இதற்கிடையில் 'செளந்தர்யா இயக்கத்தில் மட்டும் நடிக்கிறீங்களே அப்பா.. என்னுடைய இயக்கத்தில் வரப்போகிற 'வை ராஜா வை' படத்தில் கெஸ்ட் ரோலில் பண்ணுங்கப்பா' என்று செல்லமாக நச்சரித்து வருகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

'வெளியில இருக்கிற இயக்குனர்களை எல்லாம் நான் ஈஸியாக சமாளித்து விடுகிறேன். ஆனால் வீட்டிற்குள் இருக்குற இரண்டு இயக்குனர்கள்கிட்ட படுறபாடு இருக்கே... அடங்கேப்பா' என்று பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் சந்தானம் பேசுவது போல் மகள்கள் இருவரிடம் பாசமாய் கோபித்து கொள்கிறாராம் சூப்பர் ஸ்டார்.

Monday, June 10, 2013

கணவர்ன்னா இவர்தாங்க உதாரணம்..! நெஞ்சை நெகிழவைத்த உண்மை சம்பவம்...!

கேரளாவில் கொட்டும் மழையில் வனப்பகுதியில் கர்ப்பிணி மனைவிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், அவரை கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கியபடி ஓடி வந்த கணவர் அவரை மருத்துவமனையில் சேர்த்த செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது. 

பத்தனம்திட்டா மாவட்டம் கொன்னிமலை வனப்பகுதியில் வசிப்பவர் ஐயப்பன். இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக இருந்தார். இவருக்கு திடீரென கை, கால்கள் வீக்கம் கண்டன. 

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டிய நிலை.ஆனால் மருத்துவமனைக்கு பத்தனம்திட்டாதான் வர வேண்டும். அது மலைப் பகுதியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

வாகன வசதியும் கிடையாது. இதையடுத்து தனது மனைவியை தூக்கிக் கொண்டு மலையிலிருந்து வேகமாகஇறங்கத் தொடங்கினார் ஐயப்பன். மழை வேறு பலமாக பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் தனது மனைவியைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக மலையிறங்கினார் ஐயப்பன். 

கிட்டத்தட்ட 10 மணிநேரம் பயணம் செய்து மனைவியை பத்தனம் திட்டா மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார். இதையடுத்து ஐயப்பனின் மனைவிக்கு உடனடியாக டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்தனர். 

ஆனால் குழந்தை இறந்து விட்டது. ஐயப்பனின் மனைவி மட்டும் உயிர் பிழைத்தார். மருத்துவமனையில் தற்போது தொடர் சிகிச்சை பெற்று வரும் அவரது நிலை அறிந்தும், ஐயப்பனின் இந்த பாசச் செயல் குறித்தும் அறிந்தும் பலரும மருத்துவமனைக்கு வந்து ஐயப்பனைப் பாராட்டினார். அவருக்கு நிதியுதவிகளும் குவிந்து வருகின்றன.

Sunday, June 9, 2013

கோச்சடையான் டிரெய்லர்


சௌந்தர்யா அஷ்வின் இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி டபுள் கெட்-அப்புகளில் 3டி மோஷன் கேப்சூர் முறையில் நடிக்க படமாக்கப்பட்டிருக்கும் கோச்சடையான் ரசிகர்களால் 2013-ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம். 


கோச்சடையான் திரைப்படத்தைப் பற்றிய உண்மை செய்திகளைவிட அதிக அளவில் வதந்திகளே வெளிவந்துள்ள நிலையில், நாளை கோச்சடையான் திரைப்படத்தின் டிரெய்லர் இணையதளங்களில் ரிலீஸாகிறது என்ற செய்தி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


ஆனால் கோச்ச்டையான் திரைப்படத்தைப் பற்றி சமீபத்தில் பேசிய திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் “இந்திய சினிமாவின் சரித்திரத்தில் இது முக்கிய நிகழ்வு. கோச்சடையான் இந்திய சினிமாவையே அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்பதில் சந்தேகமில்லை. 

கோச்சடையான் திரைப்படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் சிறு குழந்தையைப் போல தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டினார். கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு சிறு பகுதியை தனது நண்பர்களுக்கு திரையிட்டுக்காட்டியிருக்கிறார். படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மானும் வியந்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.


சில வாரங்களுக்கு முன்பு நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவிலேயே கோச்சடையான் டிரெய்லர் வெளியிடப்படவிருந்தது. ஆனால் டிரெய்லரை பார்த்த ரஜினிக்கு திருப்தி ஏற்படாததால் கோச்சடையான் டிரெய்லர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

இந்நிலையில் நாளை டிரெய்லர் ரிலீஸாகிறது என்ற செய்தி உண்மையா? வதந்தியா? என்பது நாளை தான் தெரியும்.

Friday, June 7, 2013

தில்லு முல்லு ரீமேக்.. ரஜினி கொடுத்த ஷாக்...



தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வது குறித்து சந்தோஷப்பட்ட ரஜினி, எங்களை வாழ்த்தினார், என்றார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தற்போது மிர்ச்சி சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார்.

சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடந்த தில்லு முல்லு பட பிரஸ்மீட்டில் சிவா பேசுகையில், “ரஜினியின் தில்லு முல்லு பட ரீமேக்கில் அவர் கேரக்டரில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. 

படம் திருப்தியாக வந்துள்ளது. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவானதும் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரைமணி நேரத்தில் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச் சொன்னார். காரில் சென்றால் தாமதமாகும் என கருதி பைக்கிலேயே போய்விட்டோம்.



நாங்கள் அப்படி வந்ததைக் கேட்டு… ‘ஏன் ஏன் இப்படி?’ என்று கேட்ட ரஜினி, பின்னர் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வதை கேட்டு சந்தோஷப்பட்டார்.

படம் நல்லா வரும்னுதான் தோணுது என்றார். ‘சரி.. என்னென்ன பாடல்களை யூஸ் பண்ணப் போறீங்க?” என்று கேட்டார். `தில்லு முல்லு தில்லு முல்லு’ மற்றும் `ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ பாடல்களை பயன்படுத்தப் போவதாகக் கூறியதும், “சூப்பர்… எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ராகங்கள் பதினாறு..” என்று கூறி வாழ்த்தினார்.

இந்தப் படம் பெரிய அளவில் வரும் என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்,” என்றார்.


இந்தப் படத்தில் சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளாவும், தேங்காய் சீனிவாசன் வேடத்தில் பிரகாஷ் ராஜும், கமல் வேடத்தில் சந்தானமும் நடிக்கின்றனர்.

Thursday, June 6, 2013

அசினுக்கு அடித்த ஜாக்பாட்.... இளையராஜா இறங்கி வந்தாரா...?



நாலு நூறு கோடி பட்ஜெட் படங்களில் நடித்தவள் என்று பெருமை பேசி திரியும் அசினின் நிலைமை தற்போது சீரியஸாகவே இருக்கிறது. கஜினி, லண்டன் ட்ரீம்ஸ், ஹவுஸ்ஃபுல் 2, போல் பச்சான், கிலாடி 786... அத்தோடு அசினின் கரியர் நிற்கிறது.

இதில் கடைசிப் படம் கிலாடி 786 வந்தது சென்ற வருடம் டிசம்பரில். அதன் பிறகு ஒரு படம்கூட கமிட்டாகவில்லை.

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் அபிஷேக்பச்சனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அக்ஷய்குமார் தயாரிப்பில் ஓ மை காட் படத்தை இயக்கிய உமேஷ் சுக்லா விரைவில் அடுத்தப் படத்தை தொடங்குகிறார். அபிஷேக் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அசின் ஹீரோயின். பல மாதங்களாக ஒரு வாய்ப்புக்கு காத்திருந்தவருக்கு இந்த படம் ஜாக்பாட் என்பதில் சந்தேகமில்லை.

************************************


யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மதன் கார்க்கி பாடல் எழுதுகிறார் ஓகே. இளையராஜாவின் இசையில்...?

யுவன் இசையில் மதன் கார்க்கி எழுதும் போது இளையராஜா இசையில் எழுதக் கூடாதா என்று சில பேர் கற்பனையாக இப்படியொரு கதையை கட்டிவிட்டனர். இளையராஜா இசையில் மதன் கார்க்கி பாட்டு எழுதுகிறார் என்று. இந்த விஷயம் மதன் கார்க்கிக்கே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மதன் கார்க்கி பாடல் எழுதுகிறார் என்பதுதான் செய்தி. ஆனால் அது உண்மையில்லை. இந்த பொய் செய்தியை படித்த ராஜாவின் பக்தர்களுக்கே பயங்கர ஆச்சரியம். இளையராஜாவை பற்றி நன்கு தெரிந்தவர்களாயிற்றே.

ராஜாவாவது இறங்கி வர்றதாவது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...