Friday, May 25, 2018

தேர்தல் முடிவுகள் மட்டுமே ஜனநாயகம் அல்ல!

மே
ற்கு வங்க மாநிலத்தில் மே 14-ல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வன்முறையின் துணையோடு மூன்றில் இரண்டு மடங்கு இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தேர்தல் நடந்த தொகுதிகளில் 76% திரிணமூல் காங்கிரஸ் வசம் வந்திருக்கிறது. எனினும், மாற்றுக் கட்சியினர் போட்டியிடாத அல்லது போட்டியிட முடியாதபடி தடுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு இடங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. தீர்ப்பு வெளிவந்தால்தான் திரிணமூலின் வெற்றி எப்படிப்பட்டது என்பது தெரியும்.
உள்ளாட்சியின் மூன்று அடுக்குகளிலும் சேர்த்து மொத்தம் 58,792 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பிருந்தே மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடங்கிவிட்டன. பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவே அனுமதிக்கப்படவில்லை. காவல் துறை, ஆளும் கட்சியினரின் அராஜகத்தை அடக்கத் தவறியதல்லாமல், பல இடங்களில் அவர்களுக்குக் துணையிருந்ததாகக்கூட குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். மூன்றடுக்கு உள்ளாட்சி மன்ற முறை ஏற்படுத்தப்பட்ட 1978-ம் ஆண்டு தொடங்கி, இதுவரையில் இப்படி ஒரு வெற்றி ஆளுங்கட்சிக்குக் கிடைத்தது கிடையாது. மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்குப் போட்டியே இல்லாமல் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். 34 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, இடதுசாரி முன்னணி 2011-ல் பதவியிலிருந்து இறங்கிய பின், இப்படிப்பட்ட வன் செயல்கள் மேற்கு வங்கத்தில் நடந்ததே இல்லை.
வன்செயல்களைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. நிர்வாகத் திறமை போதாத காரணத்தாலோ, அரசியல் ஆதாயம் கருதியோ இப்படி நடந்திருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக திடீரென பெரிய கட்சியாக வளர்ந்துவிடவில்லை. ஆனால், அது வளர்கிறது என்ற எண்ணமே திரிணமூல் காங்கிரஸை அலைக்கழிக்கப் போதுமானதாக இருக்கிறது.
 இப்போதைய பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 25% இடங்களை மட்டுமே பாஜக வென்றுள்ளது. எனினும், 2021 மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யைப் பதவியிலிருந்து அகற்றுவதே தங்களுடைய லட்சியம் என்று வெளிப்படையாகவே அறிவித்துச் செயல்படுகிறது பாஜக. அதன் வளர்ச்சியால் அச்சமடைந்துள்ள மம்தா பானர்ஜி, அதற்கு எதிராக மாநில அளவிலும் தேசிய அளவி லும் பிற கட்சிகளை ஓரணியில் திரட்டத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கூட்டணி அல்ல; மக்களின் ஆதரவே முதன்மையானது. ஜனநாயகத்தை வீழ்த்தி பெறும் வெற்றிகள் மக்களைக் கொச்சைப்படுத்துபவை. எல்லாக் கட்சிகளுக்குமே இது பொருந்தும். இந்து தலையங்கம்
!

Friday, May 18, 2018

கற்றலினால் ஆன பயன்தான் என்ன ? இதுவும் உண்மைதானே

ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக்கொடுக்கவேயில்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
 கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்..அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்களை மதிப்பது எப்படி..?

 மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

சாலை விதிகள் என்ன?

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

 அடிப்படைச் சட்டங்கள் என்ன?

 நமக்கான உரிமைகள் என்ன?

 காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

 விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

 மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

 நோய்களை எவ்வாறு கண்டறிவது?

எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?

 கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?

 மற்றவர்களை நேசிப்பது எப்படி?

 நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..

ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட் whatsup

Friday, May 11, 2018

நடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்



இன்று திரைக்கு வந்துள்ள 'நடிகையர் திலகம்' படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பர்சனல் பக்கங்களை துல்லியமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. நடிகர்கள் - கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாலிகா நாயர், ஷாலினி பாண்டே, இயக்கம் - நாக் அஸ்வின், ஒளிப்பதிவு - டேனி சா-லோ, இசை - மிக்கி ஜெ மேயர், தயாரிப்பு - வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ்.


1981ம் ஆண்டு மே 11ம் தேதி... பெங்களூருவில் நடிகை சாவித்திரி கோமாவில் விழுந்த நாளில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரைப் பற்றிய கட்டுரை எழுதப் பணிக்கப்படுகிறார் மக்கள்வானி பத்திரிக்கை நிருபர் மதுரவானி (சமந்தா). முன்பக்க தலைப்பு செய்தி எழுத வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சமந்தாவுக்கு கோமாவில் கிடக்கும் ஒரு பழைய நடிகையைப் பற்றி செய்தி சேகரிக்க விருப்பமில்லை. இருப்பினும் ஆசிரியரின் உத்தரவை ஏற்று, புகைப்படக்கலைஞர் ஆண்டனியுடன் (விஜய் தேவரகொண்டா) சாவித்திரியின் அண்ணா நகர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கிருந்து ஆரம்பமாகிறது சாவித்திரியின் வாழ்க்கை... 



முதல் காட்சியிலேயே நான் அசல் சாவித்திரி என அசத்துகிறார் கீர்த்தி சுரேஷ். குழந்தை சாவித்திரியில் தொடங்கி, அவர் எப்படி சினிமாவுக்குள் வந்தார், எங்கெல்லாம் வாய்ப்பு தேடி அழைந்தார், சாவித்திரிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு, அதை அவர் தக்க வைக்கத் தவறிய கதை, ஜெமினி கணேசனுடனான காதல், புகழின் உச்சி, ஜெமினியின் துரோகம், மதுவுக்கு அடிமையாகி கிடப்பது, அதில் இருந்து மீண்டு வருவது என ஒரு பெண் நிருபரின் பார்வையில் சாவித்திரியின் வாழ்க்கையை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.


இந்த படத்தை முழுவதுமாக தாங்கிப்பிடித்திருப்பவர்கள் கீர்த்தி சுரேஷூம், துல்கர் சல்மானும் தான். கீர்த்தி சுரேஷ் தன்னை சாவித்திரியாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் தெரிவதேயில்லை. அவ்வளவு இயல்பாக சாவித்திரியை உள்வாங்கி, வெளிக்காட்டி இருக்கிறார். 



சிரிப்பது, அழுவது, மாயா பஜார் ரங்காராவ் குறும்பு, தேவதாஸ் பார்வதி, ஜெமினியின் காதலி, மனைவி, மதுவுக்கு அடிமையானவள் என நமக்கு இன்னோரு சாவித்திரி கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. வருங்காலங்களில் சாவித்திரி என்றவுடன் கீர்த்தி சுரேஷின் முகம் நியாபகத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு சாவித்திரியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உங்களுக்கு நடிக்க வராதுன்னு இனி யாராலும் சொல்ல முடியாது கீர்த்தி. வாழ்த்துக்கள்.


ஜெமினி வேடத்தில் நடித்திருக்கும் துல்லகர் சல்மானும், அப்படியே அசல் ஜெமினியை திரையில் கொண்டு வந்திருக்கிறார். சாவித்திரியை காதலிப்பது, தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை சாவித்திரியிடம் சொல்வது, திருமணத்துக்குப் பிறகு ஈகோவில் வாழ்வை தொலைப்பது என பின்னியிருக்கிறார் மனிதர். சபாஷ் துல்கர். 


இவர்களைத் தாண்டி படத்தின் அத்தனை பெருமையும் போய் சேர வேண்டும் என்றால் அது ஒளிப்பதிவாளர் டேனி சா-லோவுக்கும், ஆடை வடிவமைப்பாளர்கள் கௌரங், அர்ச்சனா ராவ், இந்திராக்ஷி பட்னாயக் ஆகியோருக்கு தான். அவர்களின் அபாராமான உழைப்பு படத்தில் அப்படியே தெரிகிறது. கலை இயக்குனர் ஆவினாஷ் கொல்லாவின் செட் வேலைபாடுகளும் அற்புதமாக இருக்கிறது. விஜயவாஹினி ஸ்டுடியோ, ஜெமினி ஸ்டுடியோ, டிராம்ப் என அந்த கால மதராசுக்கு நம்மை அழைத்து சென்றிக்கிறார்.

இந்த படக்குழுவின் கேப்டன் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு பாராட்டுக்கள் பல. இளையதலைமுறையின் பார்வையில் ஒரு அற்புதமான நடிகையின் வாழ்க்கையை மிகத் துல்லியமாக காட்டியிருக்கிறார். ஆனால் தெலுங்கு ஆடியன்சை மட்டுமே மனதில் வைத்து படத்தை எடுத்திருப்பார் போல. 

சாவித்திரி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது பாசமலர் படம் தான். ஆனால் ஏதோ ஒரு நகரும் மேகம் போல, மலர்ந்தும் மலராத பாடலின் இரு வரிகளுடன் கடந்து போய்விடுகிறது பாசமலர் படத்தைப் பற்றிய காட்சிகள். அதை கொஞ்சம் அதிகமாக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 


கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்காகவே இன்னொருமுறை பார்க்கலாம் 'நடிகையர் திலகம்'.  (Thanks Tamil One India)

இதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்...



கல்வி, தெளிவை மட்டும் தருமே அன்றி, அறிவை தராது என்பதை, கல்வியாளர்கள் உணர வேண்டும். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவை பெற முடியாது. புரிதலின்றி பயிலும் எவ்வகை கல்வியானாலும், மாணவர்கள் கரை சேர முடியாது.

சுதந்திரம் பெற்ற ஓராண்டிலேயே, சீனா, தன் மக்களை தாய் மொழியில் படிக்க செய்து, இந்தியாவை விட, 20 ஆண்டுகள் முன்னேறி விட்டது. தாய் மொழியை புறம் தள்ளி, புரிதல் படாத ஆங்கில மொழியை கட்டி அழுது, இன்னும் முன்னேற முடியாமல் தவிக்கிறோம்.

இன்று, ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்கும், எல்லா தனியார் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக அசுர வேகத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன; அதற்காக, அப்பள்ளிகள், 60 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளன. 

ஒரு மாணவன், சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர வேண்டும் எனில், குறைந்தபட்சம், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்தாக வேண்டும். அங்கு, ஏழைகள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. வசதி படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே முன்னேற வேண்டுமா...

மாநிலத்தில், 884 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 34 மேல்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில், வேதியியலில், 421; பொருளாதாரத்தில், 370; வணிகவியலில், 215; இயற்பியலில், 156; தமிழில், 284; மற்ற துறைகளில், 194 என, 1,640 பயிற்சி பெற்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன; இதே கதி தான், உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளது.

'மந்தைகளில் பயணிக்கும் செம்மறி ஆடுகளை பின் தொடர்ந்து, குருட்டு ஆடுகள் செல்லுமாம்' என்ற அடைமொழியை பின்பற்றுவது போல் தான், இன்றைய கல்வி நிலை உள்ளது.

டாக்டர் அப்துல் கலாம், சிவன், அண்ணாதுரை போன்றோர் எல்லாம், தமிழ் மொழி வாயிலாக, கல்வி கற்று தான் விஞ்ஞானிகளாகினர். இதை புரிந்து, தமிழர்கள், தாய் மொழியை அரவணைப்பரா?
சிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரம்

Wednesday, May 9, 2018

இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும்...?

இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது. 


இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை?

"தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலை தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக சாப்பாட்டுக்கு முன், இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புக்களை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக் கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு உடனடியாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புக்கள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்." என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.


இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:

"சித்த மருத்துவத்தில் இளநீர், 'பூலோகக் கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏ, சி, பி, கே போன்ற வைட்டமின்களும், சோடியம், பொட்டாசியம் கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. 

ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். 

இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புக்களைச் சரி செய்யும். 

உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் மூத்திர எரிச்சலைச் சரிசெய்யும். ஏற்படும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. " என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்...

Sunday, May 6, 2018

‘1100 ஜிபி இலவச டேட்டா’ - ஜியோ அடுத்த அதிரடி...



மொபைல் போன் சேவையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ‘கட்டிப்போட்ட’ ஜியோ நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துகிறது. மக்களை ஈர்க்கும் விதமாக 1100 ஜிபி இலவச டேட்டா வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.


2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது.

இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன.

பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிந்த நிலையில், 17 கோடி வாடிக்கையாளர்களுக்கு சலுகையை நீடித்தது.

இந்நிலையில் பிராட்பேண்ட் சேவையை விரிவு படுத்த ஜியோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டே சில குறிப்பட்ட நரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது.

ஜியோ பைபரில் இருந்து வீடுகளுக்கு இந்த சேவை இணைப்பு வழங்கப்படுகிறது. அகமதாபாத், ஜாம்நகர், மும்பை, டெல்லியில் உள்ள இந்த சேவை விரைவில் விரிவு படுத்தப்படுகிறது. சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ள ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர அதிகபட்சமாக 1100 ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும். எனினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வ நடைபெறும் என கூறப்படுகிறது.

Wednesday, May 2, 2018

இது நியாயமா ஸ்டாலின் அவர்களே



'தி.மு.க., ஆட்சி அமைந்ததும், லோக் ஆயுக்தா அமைக்கப்படும்; இன்றைய அமைச்சர்கள் அத்தனை பேரும், கம்பி எண்ணப் போவது உறுதி' எனக் கூறியுள்ளார், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்! அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்; தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மட்டும் உத்தமர்கள் என்பது போல், அவர் பேசியிருக்கிறார். 

முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பல தலைமுறைக்கு கோடி கோடியாக சொத்துகளை குவித்திருப்பது, உலகத்துக்கே தெரியும்.தமிழகம் உட்பட சில மாநிலங்கள், லோக்பால் அமைப்பதில் ஆர்வம் காட்டாமல் காலம் தாழ்த்தி வருகின்றன; இது, வேதனைப்பட வைக்கிறது.

மக்களின் பாதுகாவலர் என்ற பொருள் உணர்த்தும், 'லோக்பால்' என்ற அமைப்பை, நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.மொரார்ஜி தேசாய் தலைமையில், அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம், லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, 1966ல், அன்றைய மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.கடந்த, 1968 முதல், 2013 வரை, எட்டு முறை பார்லிமென்டில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டும், லோக்பால் அமைக்கப்படவில்லை. 

நாடு சுதந்திரம் பெற்ற அன்றே, ஊழல் தலைதுாக்க துவங்கி விட்டது.ராணுவ ஜீப் ஊழல், நகர்வாலா பேங்க் ஊழல், போபர்ஸ் ஊழல் முத்திரை தாள் ஊழல், காமன்வெல்த் ஊழல், கிரானைட் ஊழல் என, பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது...லோக்பால் திட்டம் செயல் வடிவம் பெற்றிருந்தால், நாட்டில் லாலு பிரசாத்களும், கேதான் தேசாய்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்ற நிலை மாறி இருக்கும்.

அரசியல்வாதிகளின் மூலம், கோவில் சொத்துகளும், நாட்டின் வளங்களும் கொள்ளை போவது, தடுக்கப்பட்டு இருக்கும்!கோடிகளை குவிக்க நினைக்கும் அமைச்சர்களுக்கு, சிறிதாவது பயம் இருந்து இருக்கும். லோக்பால் விஷயத்தில், தமிழக அரசின் சப்பைக்கட்டு, நீதிமன்றத்தில் எடுபடவில்லை.'லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து, ஜூன் மாதத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் கெடு விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா நிறுவப்பட்டு, நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட்டால், ஆட்டம் போடும் அரசியல்வாதிகள் கொட்டம் அடங்கி விடும்!
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...