Thursday, December 26, 2013

பலிக்குமா கலைஞரின் இந்த கேடுகெட்ட வியூகம்


'காங்கிரசோடும் பா.ஜ.,வுடனும் கூட்டணி இல்லை' என, கருணாநிதி, தன் கட்சி பொதுக்குழுவில், அடித்து சத்தியம் செய்திருக்கிறார். 

கிராமப் புறத்தில், மொடாக் குடிகாரன், 'இனி, நான் குடிக்கமாட்டேன்' என, சத்தியம் செய்தால், 'இது எத்தனையாவது சத்தியம்?' என, பலரும் அவனை கிண்டலடிப்பர். அதுபோல் தான், கருணாநிதியின் சத்தியமும், கேலிக்குரியதாகி உள்ளது. 

ஒவ்வொரு முறையும், 'காங்கிரசுடன் உறவு முறிந்து விட்டது' என, கருணாநிதி அறிவிக்கும் போதெல்லாம், தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்து, காங்கிரசாரின் உருவ பொம்மையை கொளுத்தி விளையாடுவது வழக்கம். 

கொளுத்திய பட்டாசு அணைவதற்குள், பதவிக்காக, தன் குடும்ப நலனுக்காக, காங்கிரசோடு ஒட்டி உறவாடுகிற நிலையை, கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் எடுத்து விடுவார் கருணாநிதி. 

'இந்திராவிடம், தாயின் அன்பைப் பார்த்தேன், சோனியாவிடம், மகளின் பாசத்தைப் பார்க்கிறேன்' என, சில தினங்களுக்கு முன் உருகினார். சில மாதங்களுக்கு முன், மகள் கனிமொழியின் எம்.பி., பதவிக்காக சோனியாவை, 'மணிமேகலை' என்றார். 'பண்டார பரதேசிகள்' என, அழைத்த, பா.ஜ.,கட்சியுடன் தான், மத்தியில் பேரம் பேசி அமைச்சர் பதவி வாங்கினார். 

அது, காங்கிரசாய் இருந்தாலும், பா.ஜ.,வாக இருந்தாலும், வேறு வழியில் லை. இப்படி, 'உதார்' விட்டால், கிட்டே வரும் உதிரிக் கட்சிகளை வைத்து வென்று, பின், அவற்றை கழற்றி விட்டு, மத்தியில் ஒட்டிக் கொள்ளலாம் என்ற நரித்தந்திரம் தான், கருணாநிதி நினைப்பில் உள்ளது. 

அதனால் தான், 'மத்தியில் அந்தக் கட்சி வருமா? இந்தக் கட்சி வருமா?' என, ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமும் உட்கார்ந்து, கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்கு என்பது, மொத்த வழக்குகளையும், எப்படி குழிதோண்டி புதைப்பது என்பது தான். இதில், தமிழர் நலன், கட்சி நலன் என்பதெல்லாம், 'டுபாக்கூர்' தான்! 

எது எப்படி போனாலும், இனி வரும் காலங்கள், காங்கிரசுக்கு மட்டுமல்ல; தி.மு.க.,வுக்கும் தேய்பிறை தான். எத்தனை கூட்டல், கழித்தல், வகுத்தல் போட்டுப் பார்த்தாலும், கருணாநிதியின் கணக்கு, தப்பாகவே இருக்கும். இது சத்தியம். என்.மதியழகன், பெண்ணாடம், கடலூர்.

Tuesday, December 24, 2013

வாழ்க்கையில் முன்னேற இதுதான் வழியா?



*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.

*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

*ரகசியங்களைக் காப்பாற்று.

*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி

*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.

*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.

*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே.

Monday, December 23, 2013

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை


ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகிவிட்டது. 

அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை. 

இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப் பெருமைப்படுத்துவதாகவே இருக்கும். இப்போது அதிகமாக உலாவரும் ஒரு ரஜினி துணுக்கு இது.



ஒரு முறை அமிதாப் ரஜினியிடம் கேட்டார்... 'ரஜினி, உலகில் உங்களுக்குத் தெரியாத ஆளே கிடையாது என்கிறார்களே.. நிஜமா...' 

'எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க... சரி, ஏதாவதொரு ஒரு ஆள் பேர் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சவரான்னு பார்ப்போம்..." 

அமிதாப் கொஞ்சம் கடுப்புடன், "டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?" 'ஓ! என் பழைய நண்பராயிற்றே. வாங்க நேர்லயே போய்ப் பார்க்கலாம்...' என்றார் ரஜினி. 

இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத் தட்டினர். 
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார், 

'தலைவா, வாங்க வாங்க. நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்'. அமிதாப் அசந்து போனார். ஆனாலும் சந்தேகம். 

'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா ரஜினி?' என்று 

ரஜினி சொன்னார் "நன்றாகத் தெரியும்". இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். 

ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார், "என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி. ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !" அமிதாப் ஆடிப் போனார். 

இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்.. "போப்பைத் தெரியுமா?" ரஜினி சொன்னார்... "போப்பை நன்றாகத் தெரியும். பாபாஜி வழியில் தொடர்புண்டு," என்றார். 

இருவரும் வாடிகன் சென்றனர். போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. 

ரஜினி சொன்னார். "அமிதாப்ஜி, இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது. நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன், பாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். 

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி. திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. 

"என்ன ஆச்சு?" ரஜினி கேட்டார். அமிதாப் சொன்னார். "ஒப்புக்கிறேன் ரஜினி.. உலக சூப்பர் ஸ்டார் நீங்க. நீங்க போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. 

நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற ஒரு வெள்ளைக்காரர் கேட்டார்,

"பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!"

போப்பாண்டவரை தெரியாது.. ஆனால் ரஜினியை தெரியுமா..?



Wednesday, December 18, 2013

பாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்


இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் கொண்டிருக்கிறோம். 

உண்மையில் நல்ல சினிமாவுக்கு இலக்கணம் ஏதும் தேவையில்லை. கதை என்ற சட்டகம் எதுவும் கூட வேண்டாம். நிகழ்வுகள்... அதைப் பதிவு செய்யும் விதம், அதற்குத் தேவையான அளவு குறைந்தபட்ச தொழில்நுட்பம் இருந்தால் கூடப் போதும் என இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட ட்யூஷன் எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான பாலுமகேந்திரா, தனது தலைமுறைகள் மூலம். 


தமிழ், தமிழ் கிராமங்கள், தமிழர் அடையாளங்கள், தமிழர் பழக்க வழக்கங்கள் எல்லாம் தொலைந்து தொலைந்து தொலைந்து... நன்கு தமிழ் தெரிந்த கணவனும் மனைவியும் முற்றாக ஆங்கிலத்திலேயே உரையாடி, அடுத்த தலைமுறை பிள்ளையின் தாய் மொழியையும் கொல்லும் அவலம் பார்த்து ஆதங்கப்படும் ஒரு ஓய்வு பெற்ற பள்ளிக்கூட வாத்தியாரின் கிழப் பருவத்து நாட்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் பாலுமகேந்திரா. 

இந்த வாழ்க்கைக்கு இனி திரும்பத்தான் முடியுமா என்ற மலைப்பான கேள்வியுடன் கனத்த மவுனத்தைச் சுமந்து வெளியேறுகிறோம். உள்ளது உள்ளபடியான பதிவு இது. 

தாத்தாக்களின் கைகளைப் பிடித்து நடந்த நாட்கள், தாத்தாக்கள் செதுக்கிக் கொடுத்த பொம்மைகளுடன் பொழுது போக்கிய பால்யம், ஆறும் பசும் வயல்களும் சுத்தக் காற்றும் சுவாசித்த கிராமத்துத் தருணங்களை மனதில் தேக்கியிருக்கும் யாரையும் தலைமுறைகள் தளும்ப வைக்கும். 



இயக்குநர் பாலு மகேந்திராதான் இந்தப் படத்தின் முதன்மை பாத்திரம். வாழ்ந்திருக்கிறார். அந்தக் கண்களும், ஏக்கம் சுமந்த பார்வைகளும், ஒரு கலாச்சார சீரழிவைப் பார்த்து நிற்கும் கையாலாகாத்தனமும்.. கண்களிலேயே இன்னும் நிற்கின்றன! 

அவரது மகனாக நடித்திருக்கும் சசிகுமார், மருமகளாக வரும் ரம்யா சங்கர், ஊர் மனிதர்களாக தோன்றும் லட்சுமணன், அந்த பாதிரியார்.. எந்தப் பாத்திரத்தையும் சினிமாவில் பார்க்கிற உணர்வே இல்லை. பேரனாக வரும் சிறுவன் ஸ்ரீகாந்த் அற்புதம். 

ஒரு காட்சியில் வந்தாலும் படத்தில் நிறைந்திருக்கிறார் இயக்குநர் எம் சசிகுமார். படத்தில் இரண்டு காட்சிகளில் சசிகுமாரும் ரம்யாவும் முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள், அதுவும் குடும்ப விஷயங்களை. இத்தனைக்கும் கதைப்படி இருவருக்கும் தமிழ் நன்கு தெரியும். இந்தக் காட்சி மனதில் எரிச்சலைக் கிளப்புவது நிஜம். 

ஆனால், இதோ... பக்கத்து வீட்டில், மகன்- மகள் தமிழ் பேசிவிடக் கூடாது என்று தண்டனை முறையையே அறிவித்துள்ள பெற்றோரை நினைத்துப் பார்த்தால், பாலு மகேந்திரா சரியாகவே இந்த சமூக மாற்றங்களைக் கவனித்து வருகிறார் என்பது புரிந்தது. அதிகமில்லை, அளந்து அளந்து பேசும் பாலுமகேந்திராத்தனமான வசனங்கள்தான். 



ஆனால் அது போதுமானதாகவே இருக்கிறது இந்தப் படத்துக்கு.. வளவள என பேசாமல் காட்சிகளைப் பேச வைப்பதுதானே சினிமா மொழி! விறுவிறுப்பான திரைக்கதை இல்லை.. அதிரடியாக எந்தத் திருப்பமும் இல்லை. ஆனால் இவை ஏதுமில்லாமலேயே, தன் உணர்வுகளை ஒரு ரசிகனுக்குள் கடத்த முயலும் என்பதைக் காட்டியிருக்கிறார் பாலு. 

35 எம்எம்மில் மீண்டும் காட்சிகளைப் பார்ப்பது கொஞ்சம் புதுசாகத்தான் இருந்தது. அதுவே ஒரு எளிய கவிதைத்தனம் சேர்க்கிறது படத்துக்கு. இயற்கை தந்த ஒளியில், எந்த உறுத்தலான கூடுதல் நுட்பமும் சேர்க்காமல் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

இளையராஜாவின் இசை இந்தப் படத்தில் நிஜமான ஒரு சோதனை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். வசனங்கள் பேசும் இடங்களில் இசைக்கு வேலையில்லை. காற்றும், நதியும், பறவைகளும் சலசலத்து சங்கமிக்கும் காட்சிகளிலும் இசைக் கருவிகள் அமைதி காக்கின்றன. 

ஆனால் பாத்திரங்கள் பேசிக் கொள்ளாத காட்சிகளில் மட்டும் உறுத்தாமல் ஒரு தென்றலைப் போல வந்து போகிறது ராஜாவின் இசை... எது நிஜமான பின்னணி இசை என்பதற்கு இளம் தலைமுறையினருக்கு வகுப்பெடுத்திருக்கிறார் இசைஞானி! 

'அய்யோ தமிழும் தமிழ் கிராமங்களும் கலாச்சாரமும் அழிகிறதே... வீறு கொண்டெழுங்கள்' என்ற பிரச்சார தொனி இல்லாமல், ஆனால் அந்த மாதிரி உணர்வை பார்க்கும் நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள். வணிக ரீதியிலான பலன்களை இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டு, இந்தப் படத்துக்கு தயாரிப்பாளராக முன்வந்த சசிகுமார் பாராட்டுக்குரியவர்.

நன்றி ஒன் இந்தியா

Friday, November 29, 2013

தலைவா... வெற்றிகரமான நூறாவது நாளா..? அடங்கமாட்டாங்கபோல...



தமிழ் சினிமாவில் ஒரு வியாதி.... படம் அட்டர் ப்ளாப் என்று அப்பட்டமாகத் தெரிந்த பிறகும், இதை பெருமை பீத்தலுக்காக 100 நாள் வரை ஓட்டுவது.

இந்த ட்ரெண்டை தமிழில் ஆரம்பித்தது யாராக இருந்தாலும், அதிகமாகப் பயன்படுத்திய சாட்சாத் நம்ம விஜய்தான் (பேன்ஸ்ன்ற பேர்ல குதிக்காம, நிதானமா யோசிங்கப்பா!).

முதன் முதலில் விஜய் நடித்த நாளைய தீர்ப்பில் ஆரம்பித்தது இந்த நூறு நாள் ஓட்டும் அழுகுணி ஆட்டம்.




அப்போதெல்லாம் இதற்கென்றே நகரில் சில அரங்குகள் இருந்தன. மோட்சம், கிருஷ்ணவேணி, கமலா, இப்போது கோபிகிருஷ்ணா, ராதா... சில நேரங்களில் தேவி பாலா அல்லது கலா இவற்றில் ஏதாவது ஒரு உப்புமா படம் 100 நாள் காலைக் காட்சியாக ஓடி, அந்த ஆண்டின் நூறு நாள் பட லிஸ்டில் இடம் பிடித்துவிடும்.

விஜய் நடித்த விஷ்ணு, தேவா, செந்தூரபாண்டி, மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், ஒன்ஸ்மோர், நிலாவே வா, என்றென்றும் காதல் போன்ற படங்களின் நூறு நாள் ஓட்டம், மேற்கூறிய திரையரங்குகள் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கும்.

விஜய் பெரிய நடிகராகி, சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுக்க ஆரம்பித்த பிறகும்கூட இந்த பழக்கத்தை அவரால் அல்லது அவர் தந்தையால் விடவே முடியவில்லை. சச்சின் என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம். அந்தப் படத்தை வீம்புக்காக கமலா தியேட்டரில் மட்டும் 
நூறு நாட்கள் ஓட்டினார்கள். நூறாவது நாளன்று அந்தத் தியேட்டரில் பதினாறு பேர்தான் இருந்தார்கள்.

நூறாவது நாளிலேயே இந்த நிலை என்றால், அடுத்த நூறு நாட்கள் எப்படி இருந்திருக்கும்! காலக் கொடுமை... அப்படியும் இன்னும் நூறு நாட்கள் ஓட்டி, அதை இருநூறு நாட்கள் ஓடிய படமாகக் காட்டினார்கள்.

இதோ இப்போது தலைவா படம்... 

இந்தப் படம் எப்படி வெளியானது என சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். வெளி மாநிலங்களிலெல்லாம் ரிலீசாகி, படம் தேறாது என எல்லோரும் ஒருமனதாக பிறகுதான் தமிழகத்தில் வெளியிட முடிந்தது.

வெளியான முதல் வாரமே பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள். ஆனால் அசராமல் தரணியெங்கும் அதிரடி வெற்றி என்ற அறிவிப்போடு 10வது நாள் போஸ்டர் அடித்தார்கள். சென்னையில் நான்கைந்து அரங்குகளில் கூட ஓடாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்கள் பெயரைப் போட்டு மகத்தான 25வது நாள் என அடுத்த விளம்பரத்தையும் வெளியிட்டார்கள்.

சரி இத்தோடு விட்டுவிடுவார்கள் என்று பார்த்தால், பேபி ஆல்பட் தியேட்டர் பெயரைப் போட்டு வெற்றிகரமான 50 வது நாள் என போஸ்டர்- பேப்பர் விளம்பரங்கள்!

இந்த நிலையில்தான் படத்தை நூறு நாட்கள் ஓட்டாமல் விடப்போவதில்லை என்பதில் தீவிரமாக உள்ளார்களாம். அதாவது ஜனங்க பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பணம் கொடுத்தாவது படத்தை நூறு நாட்கள் வரை ஓட்டுவது!

விஜய் படங்கள் என்றல்ல... மக்களிடம் தோற்றுப் போன பெரிய நட்சத்திரங்களின் குப்பைப் படங்களை வெட்டியாக ஓட்டும் அத்தனைப் பேருக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.

எதுக்கு இதெல்லாம்.... பேசாம தியேட்டர் பெயரே போடாமல் (ரிலீசாகி) வெற்றிகரமான 100வது நாள்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கிங்கப்பா!

Tuesday, November 12, 2013

நீங்கள் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின்



1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு, குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும்.இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப் போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்.  
Thanks : Tamil News

Friday, November 1, 2013

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்



எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ, சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
 
* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும், திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.

***********************************

Thursday, October 31, 2013

ஆரம்பம் அதிரடி சினிமா விமர்சனம்


அதிரடியாக வந்திருக்கும் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தைப்பார்த்து நம் பதிவர்களிள் எழுதிய விமர்சனங்களின் தொகுப்பு....


ஆரம்பம் அதிரடி சினிமா விமர்சனம்

கவிதைவீதி செளந்தர்

ஆரம்பம் - சினிமா விமர்சனம் 

ஆரூர் மூனா
மணிமாறன்

Monday, October 28, 2013

இந்த புகைப்பிடித்தால் முதுமை வராது...! நீதிமன்றம் சந்தித்த விசித்திர வழக்கு




ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..


அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,

ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

2 உங்களுக்கு முதுமையே வராது

3 பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்காடினார்.

நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் .

"இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்

அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"

"திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்"

"ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்"

2 வது என்ன சொன்னேன்

முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?

3 வது என்னசொன்னேன்

பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நட்ச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது"

Sunday, October 27, 2013

பொடுகை நீக்க இதை முயற்சி செய்யுங்க




வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், உடல் உஷ்ணம் குறைவதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும்.

வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால், பொடுகு வராமல் தடுக்கலாம்.

வெந்தயத்தை தேங்காய் எண்ணெயோடு சிறிது சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனையை நீக்கலாம்.

தலைக்கு குளிக்கும் போது, சிறிது தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்த்து வாரம் ஒரு முறை குளித்தால், பொடுகு மறையும்.

துளசி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து, சிறிது எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகு நீங்கும்.

தலைக்கு குளிக்கும் போது, இறுதியாக குளிக்கும் தண்ணீரில், சிறிது வினிகர் கலந்து தலைக்கு ஊற்றி குளித்தால், பொடுகு வராமல் இருக்கும்.

தேங்காய் எண்ணெயில் வசம்பை நன்கு பவுடராக்கி, அதில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்

Saturday, October 26, 2013

அடக்கடவுளே...! நம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க...


ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். 

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது. 

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு, 

"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார். 

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்… 

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார். 

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம். 

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், 

"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

Friday, October 25, 2013

சுட்டக் கதை


ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டிலிருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்தது.

அந்த திருமண விழாவில் ஒரு எலி சந்தோஷமாக நாட்டியமாடியது.
இதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.

"என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்? "
என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

அதைக் கேட்ட எலி,

"சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்." 
என்றது.

***********************************



விறகுவெட்டியும் தேவதையும் கதையும் சிறு வயதில் பள்ளிபுத்தகத்தில் படித்திருக்கிறோம்.

அதே விறகுவெட்டி தன் மனைவியை தெலைத்துவிட்டு குளக்கரைக்கு சென்று தேவதையிடம் தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு வேண்டினான்.

அவன் முன் தோன்றிய தேவதையும் ஒரு நடிகையை காட்டி இவளா உன் மனைவி என்றது. உடனே அவனும் ஆம் என்றான் அவன் பொய் சொல்லுவதைக் கண்டு கோபப்பட்ட தேவதை முதலில் நல்லவனாக இருந்த நீ இப்படி மாறிவிட்டாயே என்றது.

அதற்கு அவன் அப்படி இல்லை நீ முதலில் காட்டிய நடிகையை நான் இல்லை என்றால் வேறு இருவரையும் காட்டுவாய்,கடைசியில் என் மனைவியும் காட்டும் போது நான் ஆம் என்றதும், முன்பு கோடலிகளை கொடுத்தது போல நாலு பேரையையும் என்க்கே கொடுப்பாய் என்னால் ஒருத்தியவே சமளிக்க முடியவில்லை இதில் நாலு பேர என்றான்

**********************************


ஓரு குளத்தில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பிடித்த மீன்களை ஒரு கூடையில் வைத்து இருந்தனர். 

அங்கு வந்த பருந்து அதில் இருந்த மீன் ஒன்றை கவ்வி பறந்து சென்றது, அதை கவனித்த காக்கா கூட்டம் அந்த பருந்தை விரட்டியது. அந்த பருந்து வளைந்து, நெளிந்து பறந்து சென்றது. 

மீன் எடையால் அதால் மேலேழும்பி பறக்க முடியவில்லை, காக்கா கூட்டமும் விடுவதாக இல்லை.

கடைசில் அந்த பருந்து மீனை விட்டுவிட்டு பறந்து சென்றது.

காக்கா கூட்டமும் பருந்தை விட்டு மீனை நோக்கி பறந்தன. பருந்தும் நிம்மதியாக பறந்து சென்றது.

நாமும் பிரச்சனைகளை விட்டு விட்டால் நிம்மதியாக வாழலாம்..

*********************************

இதெல்லாம் உடல் எடையை குறிப்பதற்கான எளிய வழி



* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

* காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

* தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

* அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

* கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

* காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.


Wednesday, October 23, 2013

தவறான செய்தி பரப்புவதா... பத்திரிக்கையாளர்களை சீறும் விஜய்


நடிகர் விஜய் புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இதுதொடர்பாக தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிரபல தமிழ் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி விஜய்யின் தீவிர ரசிகர்களிடையே ஆனந்தத்தையும் கட்சி சார்பற்ற நிலையில் அவரது நடிப்பை மட்டுமே கண்டு ரசிக்கும் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், 'சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள். 

கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் 'ஜில்லா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.

இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். 

ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று விஜய் கூறியுள்ளார்.

Wednesday, October 16, 2013

ஆரம்பம் திரைப்படம்... அஜீத் போட்ட அதிரடி உத்தரவுகள்


ன்னைப் புகழ்வது மாதிரி வசனங்களை யாரும் பேச வேண்டாம். பஞ்ச் வசனங்களோ காட்சிகளோ எனக்கும் வேண்டாம், என்று ஆரம்பம் படம் தொடங்கும் முன்பே கண்டிஷன் போட்டுவிட்டாராம் அஜீத். அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆரம்பம்'. இப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

படம் விரைவில் வெளியாக உள்ளதால், ஆரம்பம் படத்தின் புரமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. இப்படத்தின் கதாசிரியர்களான சுபா படத்தில் பணியாற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

அவர்கள் கூறுகையில், "இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது, அப்படம் அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு கதைக் கருவை அவரிடம் பகிர்ந்துகொள்ள முதன்முதலாக அஜீத்தை சந்தித்தோம்.


அவரது எளிமை எங்களைக் கவர்ந்தது. ஒரு நட்சத்திரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பூட்டியது. அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது.


படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்கக்கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.


அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்டபிறகுதான் அஜீத்துக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னிம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.



படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடற்பயிற்சி செய்தார். அவரது இந்த கடமை உணர்ச்சிதான் அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது.



நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணிபுரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ‘ஆரம்பம்' படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை. எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும்போதுதான் அவருடைய ரசிகர்கள் வட்டாரம் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புரிகிறது. 



ஏராளமான பொருட்செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம் , யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும் அஜீத்துக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அதற்கு இந்த படம் தான் ஆரம்பம்," என்றனர்

இதெல்லாம் நம்புகிறமாதிரி இல்லையே


உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள். அதாவது அவர்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்கள்.

1)ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

2)சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

3)கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

4)எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

5)என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

6) படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

7) ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

8) சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

9)அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

10)தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

*********************************

"எந்த மனிதனும் தன் மரியாதைக்குக் கேடு நேரும் வகையில் நன்றியுடன் இருக்க முடியாது. எந்த நாடும் தன் சுதந்திரத்திற்குக் கேடு நேரும் வரையில் நன்றியுடன் இருக்க முடியாது!"

- - தோழர் சே குவேரா


Tuesday, October 15, 2013

மறதிக்கு காரணம் இதுதாங்க.. சொன்னா நம்பனும்


சத்தான உணவை, சரியான அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நோய்க்கு இடமில்லை. அனைத்து மருத்துவ முறைகளும் வலியுறுத்துவது இதைத் தான். இப்போதெல்லாம், எது கிடைத்தாலும் உட்கொள்வது வழக்கமாகி விட்டது. அதிலும் "பாஸ்ட் புட்' வகைகள் எந்த சுவையிலிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் "உள்ளே' தள்ளுகிறோம். இதனால் உடற்பருமனில் துவங்கி, எல்லா வகையான வியாதிகளும் வரிசைகட்டி நிற்கின்றன.சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

அவை:

இனிப்பு வகைகள்:


இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. மூளை, ஞாபக சக்தி ஆகியவற்றை கெடுக்கிறது. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கற்பதில் குறைபாடு உண்டாகிறது. இனிப்பினால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேற்கூறிய வியாதிகள் அனைத்தும் வருகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செயற்கை இனிப்புகளை நாடுகின்றனர். அதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் எடை குறைய வாய்ப்புண்டு. இருப்பினும் உடலுக்கு வேறு பல தீங்குகள் ஏற்படுகின்றன. மூளை பாதிப்பு, செயல்பாட்டில் மந்தம் ஆகியவை ஏற்படுகின்றன.


"ஜங் புட்':

கனடாவில் உள்ள மான்டெரல் பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், "ஜங் புட்'களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது. இந்த வகை உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன.


வறுத்த உணவுகள்:

வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப்பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால் சிறந்த எண்ணெய் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இதிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.


அதிக உப்புள்ள உணவுகள்:

உப்பு மனிதனின், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயம் இயங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்புள்ள உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் அறிவாற்றல், சிந்தனைத்திறன், புத்திக் கூர்மை ஆகியவை பாதிக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிக உப்பை பயன்படுத்துவோருக்கும் உண்டாகும். இதனால் உப்பின் அளவை சிறுவயதிலிருந்தே குறைத்து உண்டு வர வேண்டும். வயதானவர்கள் உப்பை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நலம். அதிலும் சிறந்த உப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட புரோட்டின் உணவுகள்:


உடலின் செயல்பாட்டுக்கும், தசை வளர்ச்சிக்கும் புரோட்டின் முக்கியம். இருப்பினும் பதப்படுத்தப்பட்ட புரோட்டின் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையான புரோட்டின் உணவுகளே உடலுக்கு நன்மை பயக்கும். செயற்கை புரோட்டின் உணவுகள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூளை செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி ஞாபக மறதியை அதிகரிக்கும்.


கொழுப்பு உணவுகள்:

அறிவை மழுங்கடிக்கும் உணவுகளில் முதன்மையானது கொழுப்புகள். அதிக உடல் எடை மற்றும் இதய நோய்களுக்கு முக்கிய காரணம் கொழுப்பு உணவுகளே. எனவே கொழுப்பு எந்த வடிவத்திலிருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு, மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகவும், மூளையை சுருங்கவும் செய்கிறது. உடலுக்கு அனைத்து வகையான தீங்குகளையும் கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது கொழுப்பு உணவுகள். முறையற்ற உணவுப்பழக்கத்தால் கொழுப்பு கூடுகிறது. உணவில் கட்டுப்பாட்டை கடைபிடித்து, உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.


சோடா:

சோடா, குளிர்பானங்களை அதிகளவு அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஞாபக மறதியை அதிகரிக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கையான இனிப்புகள் உடலின் எடையை கூட்டும். அதிக குளிர்ச்சி மற்றும் சோடாவில் உள்ள ஆசிட் பற்கள், கிட்னியை பாதிக்கும். நுரையீரலில் பாதிப்பை உண்டாக்கி ஆஸ்துமா மற்றும் இதயநோய்கள் ஏற்படவும் வழிவகுக்கும். எலும்புகள் வலுவிழந்து போகும். சோடாவில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை. சோடா அருந்துவதால் பசியின்மை, மந்தம் ஆகியவையும் ஏற்படும். இயற்கையான பழரசங்களை அருந்துவதே உடலுக்கு நன்மை. கண்ணைக் கவரும் வண்ணத்தில் கிடைக்கும் பானங்களால் தீமையே ஏற்படும்.


நிகோடின்:

நிகோடின் உணவு வகையைச் சேர்ந்தது இல்லை. இருப்பினும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், மூளையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் அளவை நிகோடின் தடுக்கிறது. நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கிறது. நிகோடின் ரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, மூளை செயல்பாட்டை தடுக்கிறது. புகைபிடிப்பதால் உடலுக்கு தீமை மட்டுமே ஏற்படுகிறது. இருப்பினும் அதை தொடர்ந்து செய்வது, நமது உடலுக்கு நாமே தீ வைத்துக் கொள்வதற்கு சமம்.


ஆல்கஹால்:

நவீன உலகில் மது அருந்துவது புது கலாசாரமாக மாறி விட்டது. இது மிகவும் அபாயகரமானது. மது அருந்துவதால் உடல் நலம் மட்டுல்லாது மனநலமும் பாதிக்கப்படும். மது அருந்துவது முதலில் கல்லீரலை பாதித்து, ஆயுட்காலத்தை குறைக்கிறது. மூளையில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பம், மறதி உண்டாகிறது. தெளிவான சிந்தனை பாதிக்கப்படுகிறது. அதிகம் மது அருந்துவோருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. பரிட்சயமான நபர்களின் பெயர், சொந்த பொருட்கள் கூட மறந்து விடும். மதுவை தொடர்ந்து அருந்துபவர்கள் தங்களது முடிவை தானே தேடிக் கொள்கின்றனர். மது அருந்துவோர் அதை விட்டுவிட்டால், புதுவாழ்வு பெற்றதாக அவர்களே உணர்வர்.

Monday, October 14, 2013

அஜித் -ன் ஆரம்பம்... ஆரம்பித்து விட்டது வழக்கு வில்லங்கம்...


தீபாவளிக்கு முன்கூட்டியே வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கு, எதிர்ப்பார்த்தபடியே வழக்குகளும் ஆரம்பமாகிவிட்டன. 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தனக்கு வட்டியுடன் சேர்த்து ரூ 4.6 கோடி தர வேண்டியிருப்பதாக சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனு விவரம்: 

எனது மகன் பி.ஆனந்தகிருஷ்ணன் சார்பில் இந்த மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி, 'கேடி' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ. 1.50 கோடி கடன் வாங்கினார். 

இந்தப் பணத்தை 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. தற்போது நடிகர்கள் அஜித், நயன்தாரா, ஆர்யா உள்பட பலர் நடித்துள்ள 'ஆரம்பம்' திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். 

வரும் தீபாவளியன்று இந்தப் படத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், என் மகனிடம் இருந்து வாங்கிய கடன் ரூ. 1.50 கோடி மற்றும் அதற்குரிய வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ. 4.60 கோடி தரவேண்டும் என அக்டோபர் 5-ஆம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். 

அந்த நோட்டீஸூக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. அதனால், என் மகனிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் 'ஆரம்பம்' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். 

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் நித்தேஷ் நட்ராஜ், வைபவ் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகினர். இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

அக்டோபர் 31-ம் தேதி ஆரம்பம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தியேட்டர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த புதிய நெருக்கடி எழுந்துள்ளது

Wednesday, October 9, 2013

வில்லனாக விஸ்வரூபமெடுக்கும் கமல்ஹாசன்


விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படத்துக்கு உத்தம வில்லன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார். 

லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம். 

ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார் இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார். 

கமல்  படத்தை இயக்குவது குறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், "கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது. ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் ‘சதிலீலாவதி' படத்தை ரீமேக் செய்து இயக்கினேன். தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன். மெகா பட்ஜெட் படமாக தயாராகிறது. 

இப்படத்துக்கு ‘உத்தம வில்லன்' என பெயர் வைத்துள்ளோம். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. நானும் கமலும் பலதடவை சந்தித்து பேசி இதன் கதையை தயார் செய்துள்ளோம். 

காமெடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் அனைத்தும் படத்தில் இருக்கும். கமல் இதுவரை நடிக்காத பாத்திரம் என எதுவும் இல்லை. ஆனால் இதில் அவர் நடிப்பது ரசிகர்களை ரொம்ப கவரும் வேடமாக இருக்கும்," என்றார்.

Tuesday, October 8, 2013

இனிமேல் அரசியல் இப்படித்தான் இருக்குமா...?


தமிழக முதல்வராக , காமராஜர் இருந்த போது, அவரது பேரன், மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு, மருத்துவக்கல்லுரியில் சேருவதற்கு, அவரிடம், சிபாரிசு செய்யச் சொன்னார். 

அதற்கு, காமராஜர், 'நீ என்ன மதிப்பெண் பெற்றுள்ளாயோ, அதற்கு தகுந்த படிப்பில் சேர்ந்து படித்துக் கொள்' என்று, சிபாரிசு செய்ய மறுத்து விட்டார். ஆனால், இன்றைய அரசியல்வாதிகள், எப்படி தங்களது அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர்? 

பிரதமர் வி பி சிங் அமைச்சரவையில், முன்பு சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவரும், தற்போது, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யுமாக இருப்பவருமான, ரஷீத் மசூத், தன் மருமகள் உட்பட, ஒன்பது மாணவர்களுக்கு, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ், தகுதியில்லாதவர்களுக்கு மருத்துவக் கல்லுாரி அட்மிஷன், லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இப்படி, நாடு முழுவதும், கடந்த, 30 ஆண்டுகளில், பல துறைகளில் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளன. பலருக்கு, அரசு வேலைகளும், பலருக்கு மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில், பல கல்லுாரி படிப்புகளுக்கான சீட்டுகளும் லஞ்சம் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சிக்கியவர், எம்.பி., ரஷீத் மட்டுமே. அதிலும், இன்று மத்தியில் ஆளும் காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியில், ஊழல் என்பது, ராணுவம் வரை புரையோடி கிடக்கிறது. 

இதில், வேடிக்கை என்னவெனில், 'ரஷீத் மசூத் குற்றவாளி' என, நீதிமன்றம் அறிவித்த பின், தண்டனை அளிக்க, சிறப்பு நீதிமன்றம் கூடிய போது, அவரது வழக்கறிஞர், 'என் கட்சிக்காரர், இந்த நாட்டுக்காக, பல ஆண்டுகள் சேவை புரிந்தவர். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. \

தண்டனை விஷயத்தில், அவருக்கு கருணை காட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார். ரஷீத் மசூத், 30 ஆண்டுகளாக, அரசியலில் இருப்பவர். ஆனால், சிக்கிக் கொண்டது என்னவோ, இந்த ஊழல் வழக்கில் தான். இன்னும், சிறை செல்ல வேண்டியவர்கள், பலர் உள்ளனர். 

இவர்களா, காமராஜர் ஆட்சியை தரப் போகின்றனர்? தற்போதைய சூழலில், ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை, அரசு கையகப்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

Saturday, October 5, 2013

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!


உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!!

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

Thursday, October 3, 2013

யானைகளை கண்டிப்பாக பாதுகாக்கனும்... ஏன் தெரியுமா..?



பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம், குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை. 

உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு. 

தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும். வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனிஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் குள்ளமானவை. கூட்டமாக வாழக்கூடியவை. 

ஆண் யானை பருவ வயதை (15) அடைந்தவுடன், மற்ற யானைகளால் தனியே விரட்டிவிடப்படும். இப்படி விரட்டப்பட்ட "பேச்சிலர்கள்' தனிக்கூட்டமாக வாழும். வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டி. குட்டிகளை கண்டிப்புடன் வளர்க்கக்கூடியவை. அடுத்து "சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு "பதவிக்கு" வரும். 

யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். பெரும்பாலும் ஆண் யானைக்குதான் தந்தம் இருக்கும். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத யானைகளை "மக்னா' என்கின்றனர். 

யானையின் வால் அடிப்பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், "வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.உணவு, தண்ணீர், நிழல் போன்றவற்றை கணக்கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை காட்டை சுற்றி வரும்.

 இயற்கையாகவே ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புல் தேவை. சராசரியாக யானையின் எடை 4000 கிலோ. தோலின் எடை மட்டும் ஆயிரம் கிலோ. தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும். நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் "டென்ஷன்' ஆகும். மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் "எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக யானை கருதப்படுகிறது. ஞாபகசக்தி அதிகம். 


மதம் பிடிப்பது ஏன்?

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் மதம் என்கிறார்கள். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். அதிகபட்சம் 45 வயது வரை மதம் பிடிக்கும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும். மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். யானைகள் சந்திக்கும்


சவால்கள் :

பரவலான மலைப்பகுதிகள் இல்லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. 

ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன. இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு திரும்பிக் கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அதை உண்ணும் யானை, ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. 


யானையை பாதுகாப்பது முக்கியம் :

யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகளை விரும்பி உண்ணும். அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் போன்றவை உண்ணும். மரக்கிளைகளை உடைத்து செடிகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி முயல் போன்ற சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.

இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கும் யானைகளை பாதுகாப்பது நமது கடமை. அதேசமயம் இயற்கை வனங்களை அழிக்காமல், ரசித்து, அதோடு ஒன்றி வாழ்வது சுற்றுச்சூழலுக்கு செய்யும் நாம் செய்யும் பேருதவி. 

Thanks - டாக்டர் கலைவாணன்,
யானைகள் நல மருத்துவர், தேனி.
மொபைல்: 94434 61712 

Wednesday, October 2, 2013

சிரிங்க! கூடவேகொஞ்சம் சிந்தியுங்க!!


ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...
அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு. 

காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு,  அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க. 

அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.

என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்... (ரசித்தது)

Tuesday, October 1, 2013

சர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!


உலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பெயர், ஒன்று கூட இடம்பெற­வில்லை. எப்­படி, தர­வ­ரி­சைப்­பட்­டி­யலை பட்­டியல் இடு­கின்­றனர்? 

பல்­க­லைக்­க­ழ­கத்தில் பணி­யாற்றும் ஆசி­ரி­யர்­களின் தகுதி. உல­க­ளவில் புகழ் பெற்­றுள்ள இதழ்­களில், அவர்கள் எழு­திய கட்­டுரை. அக்­கட்­­­­­டு­­­­­ரை­கள், உல­க­ளவு அறி­ஞர்­களால் அங்­கீ­கரிக்­கப்­பட்­டவை. புதிய கண்­டு­பி­டிப்­பு­களின் ஆய்வு அறிக்கை. அப்­பல்­கலைக் கழ­கத்தில் பயிலும், அன்­னிய நாட்டு மாண­வர்­களின் எண்­ணிக்கை. இந்த வகை தகு­தியை வைத்து, தர­வ­ரிசை நிர்­ண­யிக்­கப்­பட்­டன. 


சுதந்­திரம் பெற்று, 66 ஆண்டு கடந்தும், இன்னும் மர­ணப்­ப­டுக்­கை­யி­லி­ருந்து கல்வி எழ அடம்­பி­டிக்கக் ­காரணம், நாம் கல்­வியை போதிக்கக் கூடிய சரி­யான ஆசி­ரியர்­களை தேர்வு செய்­ய­வில்லை என்­பதும், நம்­ கல்வி முறை அறிவை துாண்டும் வித­மாக இல்­லாமல், பியூன் வேலைக்கு தகு­தி­யான முறையில் உள்­ளது என்­பதை மறுப்­ப­­­­­தற்கு இல்லை. 




உல­க­கெங்கும், ஒரு ஆசி­ரி­யருக்கு, 20 மாணவர் என்ற விகிதம் உள்­ளது. ஆனால், இங்கு ஆசி­ரி­ய­ருக்கு, 80 என்ற விகி­தத்தில், 1:80 நிலையில் உள்­ளது. இது தவிர பெரும்­பா­லான கல்­விக்­கூ­டங்­களில், கட்­டட அமைப்பு, விளை­யா­டுத்­திடல், சுகா­தார வசதி, குடிநீர், நுாலகம் ேபான்­றவை இல்லை.


அடிப்­படை கல்­வியை ஒழுங்­கான முறையில் அளிக்­காத ­போது, இவர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்தில் என்ன சாதித்து விட­மு­டியும்? ஆசி­ரியர் தகுதி தேர்வு, எப்­படி நடத்­தப்­ப­டு­கி­­­­­றது இங்கே? ஒருவர் அப்­பட்­டத்­திற்­கான தகுதி ­இருக்­கி­றதோ, இல்­­­­­லையோ கையில், பி.ஏ., – எம்.ஏ., – ­எம்.எஸ்சி., என்ற பட்­டத்­துடன், பி.எட்., பட்­டத்­தையும் சேர்த்து சுமக்­கிறோம்.


அரசு இப்­ப­டிப்­பட்ட பட்­டங்­களை நம்­பாமல், அரசு எதற்கும் பயன்­ப­டாத தேர்வு முறையை புகுத்தி, ‘மம்தா பானர்­ஜியின் தாயார் பெயர் என்ன?’ என்ற கேள்­விக்கு யார் சரி­யாக பதிலை அளிக்­கின்றனரோ, அவர்களையே அதி­புத்­தி­சா­லி­க­ளாக நினைத்து, அவர்­க­ளிடம் மாண­வர்­களை ஒப்­ப­டைத்தால், மாணவர் எப்­படி உருப்­ப­டுவர்? 



கடந்த, 1948ல் நம் நாட்டைப் போலவே, நம் எதிரி நாடான சீனா இருந்­தது. ஆனால், அந்­நாட்டில் இயங்கும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் முதல் பத்து இடத்தில் இடம் பெற்­ற­தற்கு என்ன காரணம்? அங்கு, தாய்­மொ­ழி­யா­கிய சீன மொழி­யையே ஆரம்ப கல்வியில் துவங்கி, பல்கலைக்கழகம் வரை படித்து, படிப்பின் தன்­மையை புரிந்து கொண்டு, அவர்கள் நம்மை விட எல்லா வகை­யிலும் முன்­னேற்றம் கண்­டுள்­ளனர்! 


இங்கே படிக்கும் பாடமே எது­வுமே புரி­தல்­ப­டாத மனப்­பாடம் செய்து, செய்த மனப்­பா­டத்தை அப்­ப­டியே ஒரு­வரி பிறழாமல் எழுதி விடுவர். ஒரு வாரம் கழித்து அப்­பா­டத்தை பற்றி கேட்டால் கையை பிசைந்து நிற்பர். எம்.பில்., – பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சிக் கட்­டு­ரைகள், யாரோ ஒருவர் எழுதி தர, அவ­ரிடம் ஒரு குறிப்­பிட்ட பட்­டத்­திற்கு, பணம் கை மாறி­ய­வுடன், அம்­மா­ணவன் இப்­பட்­டத்­திற்கு தகுதியானவர் என்று இங்குள்ள கீழ்தரமான நிலையை அறிந்த பிரான்ஸ் போன்ற நாடுகள், நம் நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்கள் அளிக்கும் முனைவர் பட்­டத்தை துாக்கி குப்­பையில் போட்டு விடுகின்றன. 


நம் ஆசி­ரி­யர்­களில், 100க்கு, 90 பேர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தகு­தியே இல்­லா­த­வர்கள் என்­பதை உறு­தி­யாக அறி­யலாம். மாத ஊதியம் மட்டும் இவர்­க­ளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை அரசு கொட்டி அழு­கி­றது. உடல் ஊன­முற்­ற­வனை, ராணுவ வீர­ராக தேர்வு செய்து, லடாக் பகு­தியில் பாது­காப்­பிற்கு நிறுத்­து­வது எப்­படி முட்­டாள்­த­ன­மா­னதோ, அதே போல் தான், ஆசி­ரி­ய­ராக தேர்வு செய்யும் தேர்வு முறையும். 


சீனர்கள் நமக்கு எதி­ரி­யாக இருக்­கலாம். ஆனால், அவர்­க­ளிடம், பால பாடம் படித்து, நம் கல்­வி­யா­ளர்கள் கல்­வி­மு­றையை மாற்­றினால் நல்­லது. இல்­லையேல், ஏட்டு சுரைக்காய் கறிக்கு உத­வாத நிலையில் நம் கல்­வியை சமா­தியில் அடக்கம் செய்­யலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...