Wednesday, August 28, 2013

ஜாக்கிரதை... இதைக் கவனிங்க முதல்ல..


இதைக் கவனிங்க முதல்ல..

ஆசையாக வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கும் காரில், சொட்டுச் சொட்டாக பெட்ரோல் கசிவதைப் பார்ப்போம். 'நாளைக்கு சரி செய்து விடலாம்... நாளைக்கு சரி செய்து விடலாம்' என ஒரு மாதமேகூட ஓடிவிடும். இதனால், வீணாவது பெட்ரோல் மட்டுமல்ல... பணமும்தான்!

1 நிமிடத்துக்கு, வீணாகும் பெட்ரோல் 2 மில்லி அப்படியானால், ஒரு நாளைக்கு? 2.880 லிட்டர் ஒரு மாதத்துக்கு... 86.4 லிட்டர் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 74.00 எனில், 86.4 லிட்டருக்கு ரூ. 6393.60



இதைக் கவனிங்க முதல்ல..

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வீடு மாற்றி வரும்போது, ஃபேனுக்கான ரெகுலேட்டரை மறந்து விட்டிருப்போம். புது வீடு வந்ததும் அவசரத்தில் ரெகுலேட்டரே இல்லாமல் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இப்படி ஓடுவதால் எவ்வளவு காசு வீண் தெரியுமோ..?!

ரெகுலேட்டர் இல்லாமல் நாள்

முழுக்க ஒரு ஃபேன் ஓடினால் வீணாகும் கரன்ட் 1 யூனிட் மாதத்துக்கு 30 யூனிட் 1 யூனிட் 1 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே... மாதம் 30 ரூபாய் வீண்.



இதைக் கவனிங்க முதல்ல..

ஒரு குண்டு பல்பு மாதம் முழுக்க எரிவதற்கு ஆகும் கரன்ட் செலவு 40 யூனிட் சி.எஃப்.எல் பல்ப் இதேபோல எரிந்தால் 10 யூனிட் மாதம் முழுக்க மிச்சமாகும் தொகை (ஒரு யூனிட் கரன்ட் 1 ரூபாய் என வைத்துக் கொண்டால்)... 30 ரூபாய்.



இதைக் கவனிங்க முதல்ல..

அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தும்போது துணிக்கு ஏற்ற வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். இதற்காக அயன்பாக்ஸில் உள்ள பட்டனை பயன்படுத்தத் தவறினால்... இழப்பு உங்களுக்குத்தான். 

உதாரணமாக நைலக்ஸ் துணிக்கான வெப்பத்தைப் பயன்படுத்தி காட்டன் டிரெஸ்ஸை அயர்ன் செய்தால், ஒருமுறைக்கு இருமுறையாக தேய்க்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 5 செட் டிரெஸ்ஸை இப்படி தேய்த்தால் வீணாகும் கரன்ட் 1/2 யூனிட் மாதத்துக்கு 15 யுனிட் மாதம் முழுக்க வீணாகும் தொகை 15 ரூபாய்.

எரிபொருள் சிக்கனம் உங்கள் பர்ஸூக்கு மட்டும் பாதுகாப்பானது அல்ல, நாட்டின் கஜானாவுக்கும்தான். இதில் சிக்கனம்... தேவை இக்கணம்!

Thursday, August 22, 2013

தலைவா கதை தயாரித்தது எப்படி..! புதிய தகவல்...!


தலைவா பட்டர் மசால் 

செஃப் .விஜய் 

நாயகன் - ஒரு கிலோ 

சர்க்கார் - அரை கிலோ 

பாம்பே -1 துண்டு 

தேவர்மகன் - 6 பல் 

இந்திரா - ஒரு தேக்கரண்டி 

பில்லா - அரை கப் 

புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன் 

பொல்லாதவன் - தேவையான அளவு 

கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் 
இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும். 

இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். 

பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். 

நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். 

நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். 

நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். 

தலைவா ரெடி...

எப்பூடி.... பேஸ்புக் அலம்பல்கள்...


இப்படி செய்யுங்க.. அப்புறம் பாருங்க...





நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் எண்ணெயில் பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக ஆகும்.

முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருருக்கம் மறையும்.

இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும்.

அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.

முருங்கை பிசின் பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.


சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து பூசி வந்தால் முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

கானாவாழை, மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமடையும்.

ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.

மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு நிறம் மாறி வழவழப்பாகும்.

வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி பின்னர் குளித்து வந்தால் உடல் சிவப்பாக மாறும்.

கோரைக் கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடல் பொலிவு உண்டாகும்.

அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகி வர உடல் அழகும், முக அழகும் கூடும். (படித்தது...)



Monday, August 19, 2013

இக்கால அரசியல்வாதிகள் யாராவது இப்படி இருக்கிறார்களா..?



கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், காமராஜர், தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவருக்கு கீழே, ராமையா என்று ஓர் அமைச்சர் பணிபுரிந்தார். விவசாயமோ, உணவு இலாகாவோ, அவர் பார்த்து வந்ததாக ஞாபகம்.

ராமையாவின் கீழே, ஸ்ரீனிவாசன் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இலாகாவின் முதன்மைச் செயலராக பணியில் இருந்தார். அவருக்கு கீழ், துணைச் செயலர்களும், இணைச் செயலர்களும், பல அதிகாரிகளும் இருந்தனர். 

ஒரு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஸ்ரீனிவாசன், சில கருத்துகளை முன் வைத்தார். அப்போது, அமைச்சர் ராமையா, "என்னைய்யா பேசறே நீ? உன் கருத்து சரியா இருக்கா? நீயெல்லாம் எப்படி ஐயா, ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ணினே?' என்று, மற்ற அதிகாரிகளின் முன்னிலையில், ஸ்ரீனிவாசனை கேவலப்படுத்தினார்.

இதனால், மனமுடைந்த ஸ்ரீனிவாசன், மூன்று மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் விட்டார். நான்கைந்து நாட்கள் விடுப்பு எடுத்து போனாலே, சொல்லிவிட்டுப் போகும் ஸ்ரீனிவாசன், தன்னிடம் சொல்லாமல், மூன்று மாத விடுப்பில் சென்றதும், "ஏதோ தவறு நடந்திருக்கும்' என்று, யூகித்த காமராஜர், அவர் இலாகாவிற்கு சென்று விசாரித்தார். 

உண்மை தெரிய வர, மிகுந்த கோபம் அடைந்த காமராஜர், சுற்றுப்பயணத்தில் இருந்த ராமையாவை, உடனே, தன்னை வந்து பார்க்கும்படி உத்தரவிட்டார். அதேபோல், ஸ்ரீனிவாசனுக்கும், போன் செய்து வரச் செய்தார்.

எந்த அதிகாரிகளின் முன், ஸ்ரீனிவாசனை, ராமையா அவமதித்தாரோ, அந்த அதிகாரிகளின் முன்னிலையில், அமைச்சரை பொரிந்து தள்ளி விட்டார் காமராஜர். "உனக்கு என்னய்யா தெரியும்? ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட நீ கெட்டிக்காரனா?


ஸ்ரீனிவாசனை, நீ ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ணினேன்னு கேட்டியாமே? உன்னால், ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ண முடியுமா? ஸ்ரீனிவாசன் வேலையை, ராஜினாமா பண்ணிட்டு, ஒரு கட்சியில் சேர்ந்து, எம்.எல்.ஏ., ஆகி அமைச்சராகலாம். ஆனா, நீ நெனைச்சா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆகிவிட முடியுமா? அடுத்த தேர்தல்ல நீ, தோத்தா வீட்டுல தான் இருக்கணும். ஆனா, ஸ்ரீனிவாசன், ரிடையர் ஆகிற வரைக்கும், அதிகாரியா இருக்கலாம். அவர் கிட்ட மன்னிப்பு கேளு...' என்றார். 

அமைச்சர் ராமையா மன்னிப்பு கேட்டார். பின், அதே இலாகாவில் ஸ்ரீனிவாசன் இருந்தால், ராமையா மறுபடியும் தொந்தரவு கொடுப்பார் என்பதால், ஸ்ரீனிவாசனை வேறு இலாகாவுக்கு மாற்றினார் காமராஜர். இது அந்தக் காலத்து நடப்பு. 

தனக்கும், தன் கட்சிக்காரர்களுக்கு வேண்டாத, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, உடனே மாற்றவோ, பணி இடைநீக்கம் செய்வதோ, இந்தக் கால அரசியல்.

உ.பி., அமைச்சர் அசம்கான் சொல்கிறார்... "நாங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம்; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் அல்ல...' என்று. அவருக்கு வேண்டப்பட்ட மண் திருடர்களை, மடக்கிய இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காவிற்கு, அசம்கான் விட்டிருக்கும் சவால் இது!

வரும், 2014 வரை, பொது மக்களும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்!

Sunday, August 18, 2013

இப்படி செய்தால் தெளிவு கிடைக்குமா.,?


அவர் ஒரு அரசியல்வாதி. ஊரில் பெரிய மனிதன். எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.

அவரும் சில பிரார்த்தனைகளையும். பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார். 

சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன், ''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.

உடனே குரு,''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.

அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது. ''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?'' என்று கேட்க, குருவும்,''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,'' என்றார்.

''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார். 

அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார். பத்து நிமிடம் ஆயிற்று. கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம். 

அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று, ''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?'' என்று கேட்டார்.

வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?'' என்று குரு கேட்க அவர் சொன்னார்,''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள். நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்'' உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார், ''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''

Saturday, August 17, 2013

பிரியாணி படத்தின் பாடல்கள் வெளியானது எப்படி...? பகீர் தகவல்கள்...




பிரியாணி படத்தின் எட்டுப் பாடல்களையும் பப்ளிசிட்டிக்காக சோனியே வெளியிட்ட ரகசியம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

கார்த்தி - ஹன்சிகா நடித்துள்ள பிரியாணி படத்துக்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். இது யுவனின் 100 வது படம் என்பதால், படத்தின் பாடல்களை அவரது பிறந்த நாளான ஆக 31-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் நேற்றே பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியாகிவிட்டன.





இதுகுறித்து விசாரித்ததில், இந்த வேலையைச் செய்தது, பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனமே என்பது தெரிய வந்துள்ளது.

ரஜினி நடித்த சிவாஜி படத்திலிருந்துதான் இந்தப் போக்கு ஆரம்பமானது. அந்தப் படத்தின் ஒரு கூடை சன் லைட் பாடலை இப்படித்தான் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினர்.

அதன் பிறகு பல பெரிய படங்களின் பாடல்கள் அல்லது வீடியோக்களை தயாரிப்பாளர்கள் அல்லது இசை வெளியீட்டு நிறுவனங்கள் அல்லது இயக்குநர்களே வெளியிடுவதும், பின்னர் போலீசில் புகார் செய்து ஸ்டன்ட் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது.

இந்த முறை இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, பிரியாணி படத்தின் அத்தனைப் பாடல்களையும் பாடலின் வெளியீட்டு உரிமை பெற்ற சோனி நிறுவனமே வெளியிட்டுவிட்டது. ஆனால் இது தெரியாமல் அல்லது காட்டிக் கொள்ளாமல் "அப்படியே ஷாக்காகிட்டேன்," என்று கூறியுள்ளார் யுவன்.

ஏன் இப்படி?

எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான். இன்னொரு முக்கிய விஷயம், இந்தப் பாடல்களை இணையத்தில் டவுன்லோடு செய்வதன் மூலம் பாடல் வெளியிடும் நிறுவனத்துக்கு வருமானமும் கிடைக்கிறது என்கிறார்கள்.

தங்களுக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லை என்பதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என யாருமே அலட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கின்றனர்.

இல்லாவிட்டால் இந்நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் பிரஸ் மீட் கூட்டியிருப்பார்களே.. 

ஆனாலும் யுவனுக்காக அவரது பிறந்த நாளன்று பாடல் வெளியீட்டை நடத்தப் போகிறார்களாம்!

Friday, August 16, 2013

பானை போன்ற வயிறு! என்னென்ன செய்தால் குறைக்கலாம்!!!



உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய் கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலை யை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானை போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம். Thanks Facebook.

Thursday, August 15, 2013

இது என்ன கொடுமை கடவுளே


ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள் ‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

நான் ‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான். நான் கடவுளின் தூதுவன் என்றான் கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’ என்று கேட்க ‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’ என்றான் கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள். இப்போதும் அவன் சிரித்தான்.

‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’ என் ஊரார்கள் கேட்க 

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?’’

மக்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’ என்றான் 

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று பார்த்தான் அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’ ன்னு கேட்டான் 

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே! நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்? 

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.

அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’ 

‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’

Tuesday, August 13, 2013

தினந்தோரும் பேஸ்புக்கில் இதுதாங்க நடக்குது...


முகநூலில் நம் அன்றாடப் பணிகள்...

1. பதிவிடுவது

2.நமக்குப் பிடித்த பதிவிற்கு லைக் இடுவது.

3. குறிப்பிடத்தக்க பதிவுகளுக்கு கமெண்ட் இடுவது

4. நம் பதிவிற்கு லைக் இடும் நண்பர்களின் பதிவிற்கு லைக் இடுவது.

5. நம் பதிவில் கமெண்டுக்கு பதில் மற்றும் லைக் இடுவது.

6.நோடிபிகேசன் செக் செய்வது

7. பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது

8. இன்பாக்ஸ் கேள்விகளுக்கு பதில் சொல்வது

9. தேவையற்ற அநாகரீக நட்புகளை களை எடுப்பது.

10. பேஜ் களை பார்வையிடுவது.

11. க்ரூப்களை மைந்தின் பண்ணுவது

12. க்ரூப் சேட்டை சமாளிப்பது.

13.அக்கம் பக்கம் நடக்கும் பஞ்சயத்துகளுக்கு தீர்ப்பு எழுதுவது

14. கோப போராளி நண்பர்களை சமாதனம் செய்வது.

15. க்ரூபில் மாட்டிக் கொள்ளும் நண்பனைக் காப்பாற்றுவது

## யே யப்பா எவ்வளவு உழைப்பு.
இவ்வளவும் அந்த ஒற்றை லைக் தரும் சந்தோசத்திற்காகவா?

இதுவும் முகநூலில் பிடித்ததுதான்...!

நீதிக்கே ஓய்வா...? நாம என்ன வெள்ளைக்காரனா...?


"நீதி மன்றங்களுக்கு, கோடை விடுமுறை விடப்படுவதால், தீர்ப்புகள் தாமதமாகின்றன என்ற கருத்து தவறு' என்று, நீதிபதிகள் கூறுகின்றனர். 

ஐ.ஐ.டி.,யில், பணி நியமனங்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக, ஆசிரியை ஒருவர், வழக்கு தொடர்ந்தார். 1997-98 கால கட்டத்தில், இந்த வழக்கு ஆரம்பமானது. 2013 ஜூலை, 25ம் தேதி, இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வழக்கு தொடரப்பட்ட நாள் முதல், இன்றைய தினம் வரை நடைபெற்ற, ஐ.ஐ.டி., பணி நியமனங்களை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று. ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இது மிகச் சரியானதே. 

ஆனால், வழக்குத் தொடுத்த ஆசிரியை, நியாயம் கிடைக்காமல், பணி ஓய்வு பெற்று விட்டார். தவறான வழிகளில், பணி நியமனம் பெற்ற பலர், சம்பளம், சலுகைகள் அனுபவித்து, ஓய்வு பெற்று விட்டனர். 



ஆனால், வழக்கு தொடர்ந்தவரோ பாதிக்கப்பட்டு உள்ளார். "தாமதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு, மறுக்கப்பட்ட தீர்ப்புக்குச் சமம்!' ஆங்கிலேயர்களால், கோடை நாட்களில், பணி செய்ய இயலாது. நம் தட்பவெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, அவர்கள், நம்மை ஆளும் போது, கோடை விடுமுறையை விரும்பினர். 

குழந்தைகளால், கோடையில், பள்ளிக்குச் செல்ல முடியாது. எனவே, கோடை விடுமுறை அவசியம். மற்ற அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும், பணி செய்து கொண்டு தானே இருக்கின்றனர். 

எனவே, காலை, 10:30 மணிக்கு வந்து, 1:30 மணி வரையும்; 2:30க்கு வந்து, மாலை, 5:30 வரையும் பணி செய்யும், இந்திய நீதிபதிகளுக்கு, கோடை விடுமுறை தேவையில்லை. தேவைப்படுபவர்கள், விடுப்பு எடுத்துக் கொள்ளலாமே. 

தற்போதைய பள்ளி, கல்லூரிகள், இரண்டு, "ஷிப்டு'களில் செயல்படுகின்றன. அதுபோல, இரண்டு அல்லது மூன்று, "ஷிப்ட்'டுகளில், நீதிமன்றங்கள் வேலை செய்து, தேங்கியுள்ள வழக்குகளை, உடனடியாக முடித்து, தீர்ப்புகளை வழங்க வேண்டும். இதுவே, மக்கள் எதிர்பார்ப்பு.

Monday, August 12, 2013

இதுதாங்க மனைவி அகராதி...!


உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்

மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க

மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை

மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்

மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.

மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்

மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்

மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.

மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு

மனைவி : சரி
அர்த்தம் : நோ..

மனைவி : நோ
அர்த்தம் : சரி

மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க

மனைவி ; ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு..

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்.

ரசித்தது

Sunday, August 11, 2013

ஜெயலலிதாவும் இதற்குமுன் அம்மா தொழிலைத்தானே செய்தார் - கருணாநிதி


பெரும்பாலும் பெற்றோர் ஈடுபடுகின்ற பணியிலே தான் வாரிசுகளும் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். குறிப்பாக ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால் கூட, அவருடைய அன்னையார் திரைப்படத்திலே நடித்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் திரைப்படத்திலே நடிக்கவில்லையா? அதன் பிறகு தானே அவர்தன் தொழிலை மாற்றிக் கொண்டு அரசியலுக்கு வந்தார் என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட மிக நீளமான அறிக்கைக்குப் பதில் அறிக்கையாக தானும் ஒரு நீளமான பதிலறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அந்த கேள்வி பதில் பாணி அறிக்கை... 

கேள்வி: தங்கள் மகளை வெற்றி பெறச் செய்வதற்காக காங்கிரஸ்கட்சிக்கு நீங்கள் தூது அனுப்பியபோது, "பார்லிமெண்டில் உணவு மசோதா,நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற காங்கிரஸ் முயற்சிஎடுக்கும்போது குறுக்கே நிற்கக் கூடாது" என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி விதித்ததாகவும், நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்ததாகவும், அதில் உள்ள உண்மைநிலையை நீங்கள் தான் விளக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தன்அறிக்கையில் கேட்டிருக்கிறாரே?

கருணாநிதி: பாவம், ஒரு முதலமைச்சர், தன்னிடமுள்ள நிர்வாக இயந்திரங்களின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஏடுகளிலே வெளிவரும் யூகச் செய்திகளை நம்பி அரசியலை நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டாரே? முதல்வர் கூறியுள்ள பத்திரிகைச் செய்திகள்அனைத்தும் உண்மைக்கு மாறானவை. அதிலே எள்ளளவு கூட உண்மையில்லை. காங்கிரசும் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. காங்கிரஸ்கட்சியின் பொறுப்பாளர், முகுல் வாஸ்னிக் அவர்களே இதைப் பற்றி,காங்கிரஸ் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்பதை அந்தநேரத்திலேயே தெளிவுபடுத்தி; அது ஏடுகளிலேயே வெளிவந்திருக்கிறது. 

கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இன்று (11-8-2013) விடுத்துள்ளஅறிக்கைகளில், உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கான திருத்தங்களை திமுக நாடாளுமன்றத்தில் அளிக்குமா? அளிக்காதா? என்று கேட்டிருக்கிறாரே? 

கருணாநிதி: முதல்வரா இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்? கடந்த 7-8-2013 அன்றே இந்த மசோதாவிற்கான திருத்தங்களை திமுக சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கொடுத்துவிட்டாரே! அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் ஒரு முதல்வர் 10ஆம்தேதி அறிக்கையிலே; அதை ஒரு கேள்வியாக என்னிடம் கேட்டிருக்கிறாரே,அதற்காக நான் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை! பாவம்! அந்தச்செய்தி கொடநாடு வரையிலே எட்டவில்லை போலும்! 


கேள்வி: நீங்கள் முன்பு கொடுத்த அறிக்கையிலே, "மசோதாவினை திமுக எதிர்க்கும் என்ற வாசகங்கள் இடம் பெறவில்லை" என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? 

கருணாநிதி: அவர் கூறுகின்ற எனது அறிக்கையிலே எங்கேயாவது மசோதாவினை திமுக ஆதரிக்கும் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறதா? ஜெயலலிதா 2-8-2013 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தை முடிக்கும் போதுகூட; "மசோதாவை அதிமுக எதிர்க்கும்" என்று தெரிவித்திருக்கிறாரா என்றால் கிடையாது, கிடையாது, கிடையவே கிடையாது. 

மாறாக கடைசி பத்திஎன்னவென்றால், "Hence, I strongly urge you to ensure that the concerns of Tamil Nadu are addressed through the inclusion of the appropriate amendments in the Bill that the Government of India intends to place before Parliament to replace the Food Security Ordinance" என்பது தான். அதாவது இந்த மசோதாவில் தேவையானதிருத்தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதையே தான் நானும் என்னுடைய "உடன்பிறப்பு" மடலில், "அவசர, அவசியமான திருத்தங்களுடன் மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்ப கொண்டு வர மத்திய அரசு முன்வரவேண்டும். மாநில உரிமைகளுக்கு இம்மியளவு பாதிப்பும் ஏற்படாமல், இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே திராவிட முன்னேற்றக் கழகம் அதனை ஆதரிக்கும்" என்று எழுதியிருக்கிறேன். 

கேள்வி :- இதே வடிவில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீது வாக்கெடுப்புநடைபெற்றால், தி.மு.க. அதற்கு எதிராக வாக்களிக்குமா என்று ஜெயலலிதாகேள்வி கேட்டிருக்கிறாரே? 

கருணாநிதி: தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்துத் தெரிவித்துள்ள, முக்கியமான திருத்தங்களைத் தாங்கி வெளிவருமானால் அப்போது அதனை திமுக ஆதரிக்கும்! திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல்,இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்தால் அப்போது அந்த மசோதாவினை திமுக எதிர்க்கும். முதல்வர் ஜெயலலிதா இனியாவது தெளிவு பெறுவாரா? 

கேள்வி: உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நீங்கள் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக திரும்பத் திரும்ப எழுதிய பிறகும் முதல்வர் ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதைப் பற்றி? 

கருணாநிதி: பொதுவாக அவருக்கு அன்றாடம், அவர் பெயரில் ஏதாவதுஅறிவிப்பு வெளிவரவேண்டும்; அல்லது அறிக்கை வெளி வரவேண்டும். பேரவை நடைபெற்றாலாவது, 110வது விதியின் கீழ் ஏதாவது அறிக்கையைப் படிக்கலாம். தற்போது அதற்கு வழியில்லை என்பதால், தினமும் ஏதாவது அறிக்கை விடுகிறார். உணவுப் பாதுகாப்பு மசோதாவில் பல சாதக பாதகங்கள் இருக்கலாம். அதனால் தான் தொடக்கத்திலேயே அதைப்பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கலந்து பேசுவோம் என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தச் சட்டத்தினால் வரக் கூடிய பாதகங்களை முதலமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

மசோதாவின் நன்மைகளை மத்திய அரசின் சார்பில் கூறுகிறார்கள். இதிலேமுக்கியமாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு விடக் கூடாது என்பதைத் தான்நான் சுட்டிக் காட்டியுள்ளேன். அதையும் மீறி இந்த மசோதா இப்போதுள்ள வடிவிலேயே கொண்டு வரப்படுமேயானால் அதை நாங்கள் ஏற்க முடியாதுஎன்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். இதற்குப் பிறகும் கிராமங்களில் "காமன்" பண்டிகைகளில் எரிந்த கட்சி - எரியாத கட்சி என்றுபோட்டி போட்டுக் கொண்டு பாடுகின்ற அதே "மெட்"டில் ஜெயலலிதா அறிக்கைவிட்டுக் கொண்டிருப்பது கண்டிக்கத் தக்கது மாத்திரமல்ல; ஒரு முதல்வர் இந்த அளவிற்கு இறங்கியிருக்கிறாரே என்ற வருத்தத்தையும் தரத் தக்கதுமாகும்.

கேள்வி: குடும்பத்தினரைப் பற்றி ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் சுட்டிக் காட்டுவதைப் பற்றி நீங்கள் கேட்டதற்கு, உங்கள் குடும்பத்தில் மகன்கள், மகள், பேரன் என எல்லோருமே அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், கழகமே குடும்பம் என்றிருந்த நிலைமை மாறி குடும்பமே கழகம் என்று ஆகி விட்ட நிலையில் குடும்பத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பது எப்படி என்று ஜெயலலிதா கேட்கிறாரே?

கருணாநிதி: குடும்பத்திலே உள்ளவர்கள் அரசியலிலே ஈடுபட்டிருக்கும்போது, அவர்கள் தவறு செய்தால், அதைப்பற்றிப் பேசுவதிலே தவறில்லை. ஆனால் இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டிப் பேசக் கூடாதல்லவா? மேலும் நான் அரசியலிலே இருப்பதால், என்னுடைய குடும்பத்தினரில் சிலர் அரசியலிலே ஈடுபடுகிறார்கள்.

இந்திய அரசியலில் எடுத்துக் கொண்டால் நேரு குடும்பத்திலே தொடங்கி, அரசியல் தலைவர்கள் பலரது குடும்பங்களில், அவரவர் குடும்பத்தினர் அரசியலில் ஈடுபட்டுத் தான் வருகிறார்கள். என் குடும்பம் மட்டும் என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை! பெரும்பாலும் பெற்றோர் ஈடுபடுகின்ற பணியிலே தான் வாரிசுகளும் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். குறிப்பாக ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால் கூட, அவருடைய அன்னையார் திரைப்படத்திலே நடித்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் திரைப்படத்திலே நடிக்கவில்லையா? அதன் பிறகு தானே அவர்தன் தொழிலை மாற்றிக் கொண்டு அரசியலுக்கு வந்தார்! 

கேள்வி: சில்லரை வணிகத்தில் அந்நியப் பெரும் நிறுவனங்களைஅனுமதிக்க முடிவு செய்த இந்திய அரசைக் கண்டித்து நீங்கள் கூறிய போதிலும், நாடாளுமன்றத்தில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக திமுகஉறுப்பினர்கள் வாக்களித்ததைச் சுட்டிக்காட்டி, இது துரோகம் இல்லையா? இரட்டை வேடம் இல்லையா? என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே? 

கருணாநிதி: நான் அப்போதே வெளியிட்ட எனது அறிக்கையின் தொடக்கத்திலேயே தெளிவாக சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறேன். தமிழகத்திலே அப்படிப்பட்ட நிலை இல்லை என்று தமிழக முதல்வரே சொல்லி விட்டதால், இங்கேயுள்ள சிறு வணிகர்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவிதமானஆபத்தும் ஏற்படாது என்பதால்தான், மத்தியில் நிலையான அரசு வேண்டும்என்பதை மட்டும் கருதி இந்தப் பிரச்சினையில் மத்திய அரசை தி.மு. கழகம்ஆதரிக்கும் என்று தெரிவித்திருக்கிறேன். அப்போது மாத்திரமல்ல; அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளிலே கூட சில்லரை வணிகத்தில் அன்னியமுதலீட்டினை எதிர்த்துத் தான் கருத்துகளை வெளியிட்டிருக்கிறேன். 

அப்போது தி.மு. கழகம் காங்கிரஸ் கட்சியோடு ஓரணியில் இருந்து, மத்திய ஆட்சியில்கூட்டுப் பொறுப்போடு செயல் பட்டதால், கூட்டணிக்குத் துரோகம் செய்யாமல் வாக்குப் பதிவின் போது அவ்வாறு நடந்து கொண்டது என்பதை அப்போதும்,இப்போதும் தெளிவாக்கிட விரும்புகிறேன். அதற்கான காரணத்தையும்அப்போதே விளக்கியிருக்கிறேன். இது ஒன்றும் துரோகமோ, இரட்டை வேடமோகிடையாது. கூட்டணிக் கட்சியை ஆதரிக்காமல் விட்டிருந்தால் தான் அதுஅரசியல் துரோகமாகக் கருதப்படும். இவ்வாறு கூறியுள்ளார். 

கேள்வி :- நீங்கள் தெளிவாக நீண்ட விளக்கங்கள் அளித்த பிறகும்,அதைப் படிக்காமலேயே முதல்வர் ஜெயலலிதா ஏழு கேள்விகளைக்கேட்டிருக்கிறாரே? அதில் உணவு பாதுகாப்புச் சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் அரிசி ஒரு லட்சம் டன் அளவுக்கு குறைக்கப்பட்டு விடும் என்பது தெரியுமா? தெரியாதா? என்றெல்லாம் கேட்டிருக்கிறாரே? 

கருணாநிதி: முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ள ஏழு கேள்விகளுக்கும்அவர் கேள்வி கேட்பதற்கு முன்பே நான் பதிலளித்திருக்கிறேன். அந்தப் பதிலைமுழுமையாகப் படிக்காமலேயே திரும்பவும் அதைக் கேட்டால் நான் என்ன செய்வது? உதாரணமாக, நான் என்னுடைய அறிக்கையில், "தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை இந்த மசோதா காரணமாகத் தமிழகத்தில் ஏற்கனவேநடைமுறையில் இருந்து வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு எந்த வகையிலும் ஊனம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும், யாருக்கும் பாதிப்பு கூடாதுஎன்பதிலும், மாநில உரிமைகள் பறி போய் விடக் கூடாது என்பதிலும் உறுதியாகஇருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறேன். 

இதற்கு மேலும் முதல்வர் தெளிவு பெறவில்லையே; ஏன் என்று தான் புரியவில்லை. தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம்; ஆனால் தூங்குவதைப் போல பாசாங்கு செய்யும் லலிதாக்களை எழுப்பவே முடியாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Friday, August 9, 2013

இதை கல்யாணம் ஆகாத ஆண்கள் பெண்கள் மட்டும் படிக்கவும்


கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

அவள் விகடனில் இருந்தது. . !

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . ! 

சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . ! மளிகை கடை லிஸ்ட் போல நீண்டன பாயின்ட்ஸ். . !

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . !
2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . !
3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . !
(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . !
4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . !
5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள்
அவர் சமைக்கணும். . !
6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . !
7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். . !சமயத்துல 'வாடா போடா’வையும்
ஜாலியா ரசிக்கணும். . !
8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ
அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . !
9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.! 
10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . !
11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . ! 
12.முக்கியமான பாயின்ட். . !மாமியார் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . !

சவிதா, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி:

1.''மாப்பிள்ளை ஃபேர் மாநிறம்னு எப்படி இருந்தாலும் ஓ.கே. . ! ஆனா
பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். . ! அன்பு காட்டுறதுல
பணக்காரங்களா இருந்தா போதும். . !
2.அப்புறம் ஒரு சின்ன ஆசை உண்டு. . !அவர் ஒரு 'யமஹா ஆர் 120’ வண்டி
வெச்சுருக்கணும் அல்லது வாங்கணும். . !இதுவரைக்கும் யார் கூடவும் நான்
பைக்ல போனதில்ல. . !பைக்ல பின்னாடி உட்கார்ந்து போற த்ரில்லை அவர் எனக்குக் காட்டணும். . !
3.குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். . ! குவார்டர்லி, ஹாஃப் இயர்லி,
சம்மர் லீவுக்கு அவரோட சொந்தக்காரங்க பசங்க, என்னோட சொந்தக்காரங்க
பசங்கனு எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கு கூப்பிட்டு, அமர்களம்
பண்ணணும். . !
4.ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றது, தீம் பார்க் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறது,
டிராவல் அரேஞ்மென்ட் பண்றதுனு எல்லாம் அவர் சப்போர்ட்டிவ்வா
இருக்கணும். . !
5.அப்புறம் அடிக்கடி அவர் வேஷ்டி கட்டணும். . ! ஆனா, புடவை கட்டச் சொல்லி
என்னை கம்பல் பண்ணக்கூடாது. . !
6.அவங்க அம்மா பேசுறதைக் காதால கேட்கலாம். . ! ஆனா ஃபாலோ பண்ணக் கூடாது. . !
7.மீனாட்சி ஆட்சிதான் இருக்கணும் வீட்டுல. . !

லீலாவதி, எம்.காம் சென்னைப் பல்கலைக்கழகம்:

1.''மாமனார், மாமியார் கூட இருக்கறதுல பிரச்னை இல்ல. . ! ஆனா மொத்தமா பெரிய கூட்டுக்குடும்பம் வேண்டவே வேண்டாம். . !
2.மாமியாரையும் மாமனாரையும் முடிஞ்சளவு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். . !
3.மாசம் ஒருமுறை ஜாலியா வெளிய கூட்டிட்டுப் போவேன். . !
4.மாமியாரை சுடிதாரும், மாமனாரை ஜீன்ஸும் போட வெச்சு
சந்தோஷப்படுத்துவேன். . !
5.கணவரைப் பொறுத்தவரைக்கும், கலகல டைப்பா இருக்கணும். . !
6.மீசை கண்டிப்பா இருக்கணும்ங்கிறதை, அண்டர்லைன் பண்ணிடுங்க. . ! 7.கிச்சன்ல இருந்து ஹால் வரைக்கும்
பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக்கிட்டு வர்ற பழக்கம் எல்லாம் எனக்கு உண்டு. . !
அதை எல்லாம் ரசிக்கணும். . !
8.வாரம் ஒருமுறை பீச், தியேட்டர்னு அவுட்டிங் கூட்டிட்டுப் போகணும். . !
9.கொஞ்சம் அதிகமா பேசுவேன். . !அதனால அவர் அமைதியானவரா
இருக்கணும். . !
10.சண்டை போடுறப்போ, அவர்தான் 'ஸாரி’ கேட்கணும். . ! 

கொஞ்சமாவது மனசட்சின்கிறது இருக்கா? இந்த பொண்ணுங்களுக்கு!!!

Thursday, August 8, 2013

டாஸ்மாக் போல இதுக்கும் அரசே விலை நிர்ணயிக்குமா...?



இன்று, மனிதனின் வாழ்க்கையில், முக்கிய அங்கம் வகிப்பது மருந்து. ஒரு நாள் உணவில்லாமல், மனைவி இல்லாமல் கூட இருக்க முடியும். ஆனால், மருந்தில்லாமல் வாழ முடியாது. நோய்கள் பெருகி, அதற்கேற்றாற்போல் மருந்துகளின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. 

ஆனால், மருந்துகளின் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதி, இதய நோய், சிறுநீரக பிரச்னை, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு, வாழ்நாள் முழுவதும், மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும். 

இந்த மருந்துகளை வாங்கும் போது, அதன் விலையைக் கேட்டால், தலைச் சுற்றல் வருகிறது. சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தும், "இன்சுலின்' முன்பு, 70 ரூபாய்க்கு விற்றது, இன்று, 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வயதானவர்கள் இரண்டு பேருக்கு, குறைந்தபட்சம், மாதம், 4,000 முதல், 5,000 ரூபாய் வரை, மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது. 

பெரும்பாலான மருந்து கடைகளில், எம்.ஆர்.பி., விலைக்கு மேல், 6 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். இதை, யாருமே கண்டு கொள்வதில்லை.

அரசு, உப்புச் சப்பில்லாத சாதாரண விஷயங்களுக்கெல்லாம், முக்கியத்துவம் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும் போது, மருந்து விஷயத்தை, ஏன் கவனிக்காமல் விட்டு வைத்துள்ளது?

"அத்தியாவசிய மருந்துகளின் விலைகள், கணிசமாகக் குறைக்கப்படும்' என்று, 2006 முதல், அரசு சொல்லிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், மாதா மாதம், விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 



இந்த லட்சணத்தில், போலி மருந்து தயாரித்து, மக்களை ஏமாற்றி, கொள்ளை லாபம் அடிக்கும் கும்பல் வேறு. மகாராஷ்டிராவில் விற்கப்படும் மருந்துகளில், 40 சதவீதம், போலி மருந்துகள் தான் என்று, மருந்துக் கடைக்காரர்களே கூறு கின்றனர். இதெல்லாம், அரசுக்குத் தெரியாதா? 

மத்திய அரசு, உடனடியாக, இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, போலிகளைக் கண்டறிந்து, கைது செய்ய வேண்டும். முக்கியமான மருந்துகளுக்கு, அரசே விலையை நிர்ணயித்து, மருந்து கம்பெனிகளுடன் கலந்து பேசி, முடிவெடுக்க வேண்டும். நிர்ணய விலைக்கு மேல் விற்கும் மருந்துக் கடைகளுக்கு, "சீல்' வைக்க வேண்டும்.

Wednesday, August 7, 2013

வீட்டில் பறவை வளர்த்தால் இப்படித்தான் ஆகுமா?

 
வீட்டில் செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் வரும் பதில் என்னவாக இருக்கும். கண்டிப்பாக நாய் அல்லது பூனைகள் தான் பலரின் குரலாக இருக்கும். நம்மில் அநேகமாக பல பேர் நாய்களையும் பூனைகளையும் தான் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆசைப்படுவோம். நீங்களும் அதையே தான் செய்ய வேண்டுமா? தேவையில்லையே! தைரியமாக இந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். 
 
சரி, பின் என்ன வளர்க்கலாம் என்று தானே கேட்கிறீர்கள்? ஏன் நீங்கள் ஒரு பறவையை செல்லப்பிராணியாக தேர்ந்தெடுக்க கூடாது? நீங்கள் நினைப்பதைப் போல் இது குளறுபடியாக இல்லாமல், உங்களுக்கு பல மடங்கு கேளிக்கையை கொட்டி கொடுக்கும். ஒரு பறவையை செல்லப்பிராணியாக வளர்க்க நமக்கு தேவையானதெல்லாம் அதனுடைய கூண்டை அமைக்க ஒரு சிறிய இடம் மட்டுமே. 
 
மேலும் பல பேர் பறவையை ஒரு செல்லப்பிராணியாகவே பார்ப்பதில்லை. அதனால் அதனை உங்கள் வீட்டில் வளர்க்க நீங்கள் தனியாக அதற்கென்று கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை. 
 
 
 
வீட்டில் பறவை வளர்க்க காரணங்கள்: 
 
1. குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும் : 
 
பொதுவாக செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் பறவைகளின் மீது நல்ல மதிப்பு கிடையாது. அதிலும் சில நாய் அல்லது பூனை விரும்பிகளை பொறுத்தவரை பறவைகள் என்பது அசிங்கமான, விரும்பத்தகாத ஒரு இனமாகும்; அது வீட்டில் இருப்பதை விட வெளியிலேயே இருப்பது நல்லது என்று எண்ணுவர். ஆனால் நாய் அல்லது பூனை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு பறவைகள் தான் சரியான செல்லப்பிராணி. 
 
2. மலிவாக கிடைக்கும் உணவுகள்: 
 
நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவின் செலவு ஆதிகம். ஆனால் பறவைகளுக்கு மிகவும் குறைவே. அவைகள் உயிர் வாழ தேவையானதெல்லாம் தினசரி சிறு அளவு உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே. பறவைகளுக்கென்று நல்ல தரமான மாத்திரை வடிவிலான உணவு கொடுக்கப்பட வேண்டும். வேண்டுமெனில் அதனுடன் சேர்த்து சிறு பழங்களையும், காய்கறிகளையும் அதற்கு தீனியாக போடலாம். 
 
3 அறிவாளிகள்: 
 
ஒருவரை "பறவையின் புத்தி" என்று புகழ்வது, அவரை அவமரியாதை செய்வதைப் போல் இருக்கலாம். ஆனால் உண்மையில் விலங்கு இனத்திலேயே புத்திக்கூர்மை அதிகமாக இருப்பது பறவைகளுக்குத் தான். யோசித்து பாருங்களேன், மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் பறவைகள் தான் நாம் செய்வதையும், பேசுவதையும் திரும்பச் செய்ய முயற்சி செய்யும். 
 
 
 
4. குறைந்த பராமரிப்புச் செலவு: 
 
நாய்கள் மற்றும் பூனைகளைப் போல பறவைகளுக்கு அதிக கவனம் செலுத்த தேவையில்லை. அதற்கு நடை பயிற்சியையோ, வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையோ அல்லது அவைகளை சந்தோஷப்படுத்தும் கேளிக்கைகளைளோ செய்யத் தேவையில்லை. மேலும் நாய்களின் கழிவை சுத்தம் செய்வதை காட்டிலும், பறவைகளின் கூண்டை சுத்தப்படுத்துவது எளிது. 
 
5. சிறிய இடத்திற்கு சரியான தேர்வு: 
 
ஒரு சின்ன அபார்ட்மெண்ட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் வளர்ப்பதற்கு நாயும், பூனையும் சரியாக இருக்காது. ஏனெனில் அவைகள் ஓடவும், விளையாடவும் வீட்டில் போதிய இடம் இருக்காது. அதுவே பறவை என்றால், அதனை வளர்க்க ஒரு சிறிய கூண்டு மட்டும் போதுமானது. 
 
6. மனிதர்களிடம் நன்கு பழகக் கூடியவை: 
 
மனிதர்களிடம் நன்கு பழகக் கூடியவை பறவைகள். நாய்கள் மற்றும் பூனைகளை காட்டிலும் பறவைகள், அதனை வளர்ப்பவரிடம் அதிகமாக ஒன்றிவிடும். மேலும் அன்றைய நாளை பற்றிய குறைகளை நீங்கள் கூறும் போது, அதை கேட்பதற்கு நிச்சயம் உங்கள் பறவை செவி சாய்க்கும். கேட்பது மட்டுமல்லாது, உங்களுக்கு ஆறுதலாக கீச்சிடவும் செய்யும்.

இன்னும் தங்களுக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருந்தால் கூறுங்கள்..!

Tuesday, August 6, 2013

பாய் போட்டு படுக்கிறீர்களா..? இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கங்க...!



படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
படித்தது.

Monday, August 5, 2013

சேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...!

""என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறிக்க பார்க்கின்றனர்,'' என, இயக்குனர் சேரன் தெரிவித்தார்.


திரைப்பட இயக்குனர் சேரனின் இளைய மகள், தாமினி. உதவி இயக்குனர் சந்துரு (எ) சந்திரசேகரனை காதலித்ததால் பிரச்னை ஏற்பட்டது.


மிரட்டல்:

கடந்த, 2ம் தேதி, திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் அளித்த தாமினி, ""தந்தை சேரன், அடியாட்களை வைத்து என் காதலனை மிரட்டுகிறார்; என் காதலை தடுக்கிறார். போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார். பதிலுக்கு சேரனும், நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதையடுத்து, இருதரப்பினரையும் அழைத்து, நேற்று முன்தினம் இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர். தாமினி இறுதிவரை பிடிவாதமாக இருந்ததால், அவரை, மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பினர்.


இந்நிலையில், சேரன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர், பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது: நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா, தியேட்டர் ஊழியர். அம்மா, ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனை வரக்கூடாது என, நினைத்தேன். சுதந்திரமாக வளர்த்தேன். காதலித்தால் எதிர்க்கக் கூடாது என்றும் நினைத்தேன். 

நானும் என் மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நாங்கள் என்ன ஜாதி என, இன்று வரை என் மகள்களுக்கு சொல்லியதில்லை. மூத்த மகள் விவரமானவள். இளையவளுக்கு விவரம் தெரியவில்லை. இந்நிலையில், தாமினிக்கு, 18 வயதில் காதல் வந்தது. படிப்பு முடியட்டும்; அவசரப்படாதே, திருமணம் செய்து வைக்கிறோம் என, கூறினோம்.



பின்னணி:



இதன்பிறகே, தாமினி காதலிப்பதாக சொன்ன சந்துரு குறித்து விசாரித்தோம். அவன் பின்னணி, பயத்தை ஏற்படுத்தியது. வேலை ஏதும் செய்யவில்லை. இருந்தாலும், சந்துருவின் குடும்பத்தினரை சந்தித்து பேசினேன். "மாதம், 10, 15 ஆயிரம் ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்; வாழ்க்கையில் முன்னேறி காட்டு; மூன்று ஆண்டுகள் கழித்து, திருமணம் செய்து வைக்கிறேன்; அதுவரை பேசுவதை தவிர்த்துக்கொள்,' என்றேன். ஒப்புக் கொண்டான். ஆதாரங்கள் உள்ளன எனக்கு தெரியாமல், என் மகளுடன் பேசிஉள்ளான். 

ஒரு கட்டத்தில், என் மகளை எங்களுக்கு எதிராக தூண்டிவிட்டான். "சந்துருவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்துடுவேன்' என, என் மகளை என்னிடமே பேச வைத்தான். உடனே நான் போன் செய்து, என் மகளை அவனுடன் பேச வைத்தேன். எந்த அப்பனும் செய்யாததை நான் செய்தேன். பிறகு, அவன் நடவடிக்கை வேறு மாதிரி இருந்தது. நிறைய பொய் சொன்னான். 

என் மகளுடன் பேசக்கூடாது என, சொன்ன நாட்களில், வேறு சில பெண்களுடன், இரவில் பல மணி நேரம் பேசிஉள்ளான். ஆதாரமும் என்னிடம் உள்ளது. இத்துடன், என் மூத்த மகளுக்கும், "ஐ லவ் யூ' என, "பேஸ்புக்'கில், கூறிஉள்ளான். பல பெண்களுடன் அவனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. 

இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் தயார். நடத்தையில் மோசம்; பொருளாதாரத்தில் திருப்தி இல்லை; பெண்களுடன் தகாத தொடர்பு, இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, எந்த அப்பன், தன் மகளை இப்படியொருவனுக்கு கட்டிக் கொடுப்பான்.


நடந்தது மூளைச்சலவை:


"உன் அப்பா இயக்கும் படத்தில், என்னை நடிக்க வைக்கணும் என சொல்' என, தாமினியிடம் சந்துரு கூறியுள்ளான். இதைக் கேட்டு, "இயக்குனர் எழில் இயக்கும் படத்தில், சந்துருவை நடிக்க வைக்கணும்,' என, என் மகளும், என்னிடம் சொன்னாள். என் மகளை வைத்து, சொத்துகளையும், பணத்தையும் சுருட்ட திட்டமிட்டிருப்பதை உணர்ந்தேன். அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அவனுக்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை. என் மகளே, ஒரு கட்டத்தில் மனம் மாறி, அவனை வேண்டாம் என்றாள். இப்போது, திடீரென என் மகளின் மனதை மாற்றி, மூளைச்சலவை செய்து, எனக்கு எதிராக திருப்பிவிட்டு உள்ளான்.

அறிமுகம் இல்லை:



என் மனைவியை, நான் இதுவரை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்ததில்லை. ஒரு தாய் என்ற முறையில், அவளின் துயரமும் உங்களுக்கு தெரிய வேண்டும் என, நினைத்து தான், இங்கு அழைத்து வந்திருக்கிறேன். இவ்வாறு, சேரன் கூறினார். இந்த சந்திப்பில் இயக்குனர் அமீர் பேசும்போது, ""சந்துருவின் குடும்பம் நல்ல குடும்பம் என்றால், நானே பேசி திருமணம் செய்து வைப்பேன். சந்துரு நல்லவர் அல்ல; குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. சந்துரு மீது மூன்று பெண்கள் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர்,'' என்றும், குறை கூறினார்.


சேரன் மகள் புகாரில் காதலன் மீது வழக்கு:

இயக்குனர் சேரன் மகள் தாமினி அளித்த புகார்களின் பேரில், காதலன் சந்துரு மற்றும் தந்தை சேரன் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலை பகுதியில் வசித்து வரும் இயக்குனர் சேரன் மகள், தாமினி அளித்த புகார் தொடர்பான பிரச்னை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் இரவு, பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பும், "காதலனுடன் தான் செல்வேன்,' என்று தாமினி கூற, இறுதியாக, மயிலாப்பூரில் உள்ள, அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

தாமினியின் காதலன் சந்துரு, சூளைமேட்டில் உள்ள வீட்டில் உள்ளார். அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று காலை, சேரன், அவரது மனைவி மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர், சந்துரு மீது பல்வேறு புகார்களை தெரிவித்து உள்ளனர். அப்போது, வீட்டில் இருந்து, "டிவி' மூலம் பேட்டியை பார்த்த, சந்துரு மிகுந்த ஆவேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாமினியின் புகார்களின் அடிப்படையில், சந்துரு மீதும், தந்தை சேரன் மீதும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குகளை பதிந்து உள்ளனர். தாமினியை காதலிப்பது தொடர்பாக, "பேஸ்புக்'கில், சந்துரு வெளியிட்ட படம் உள்ளிட்டவை குறித்து, தாமினி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருந்தார். 

இப்புகாரின் பேரில், அவர் மீது, தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவின் படி, வழக்குப் பதியப்பட்டது. அதே போல், கொலை மிரட்டல் விடுத்ததாக, தந்தை சேரன் மீது, தாமினி அளித்த புகாரின் பேரில், சேரன் மீதும் மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சந்துருவை விசாரணைக்கு திங்களன்று (இன்று) ஆஜராகும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும் போது, அவரிடம், இந்த வழக்கு குறித்தும் விசாரிக்கப்படலாம், என தெரிகிறது.

Sunday, August 4, 2013

அட மானங்கெட்ட அரசியல்வாதிகளே...! ஏன் இப்படி



"மாநிலத்தில், 2003ல் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், 40 பேரும், 2008 தேர்தலில், 35 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, ஒன்பது பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். சிறப்பாகச் செயல்படும், என் அரசை கவிழ்க்க, சதி நடக்கிறது' என, தன் பெருமையை பறை சாற்றியிருப்பவர், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி. 
 
"நம் நாட்டில், மக்கள், பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுகின்றனர். வெளிநாடுகளில், பூச்சிகளையெல்லாம் உண்கின்றனர். நாமும் பூச்சிகளை சாப்பிட்டுப் பழகி விட்டால், விலையேற்றத்தைக் கண்டு, பயப்படத் தேவையில்லை!' -இது, அசாம் முதல்வர் தருண்கோகோய். 
 
"கல்லைத் தான், மண்ணைத் தான், காய்ச்சித் தான் குடிக்கத் தான் கற்பித்தானா?' என, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடி வைத்தது, இதற்காகத் தானா?
 
 
உணவுக்குப் பதிலாக பூச்சிகளை, இவர் உட்கொள்வாரா? அவர் இப்படி கேட்டிருக்கிறாரென்றால், அதற்குக் காரணம், நாட்டு மக்கள், வாயில்லா பூச்சிகளாய் இருப்பது தான். 
 
இன்னொரு அரசியல்வாதியோ, "நாட்டில் ஏழைகளே இல்லை' என்கிறார். "ஒண்ணுமே புரியலே உலகத்திலே... என்னமோ நடக்குது; மர்மமாயிருக்குது' என்று பாடத் தோன்றுகிறது. 
 
"அப்பழுக்கில்லாத, நேர்மையான ஆட்சியைத் தருவோம்; அனைவரும் கொலை, கொள்ளையில்லாத சமுதாயத்தில் வாழலாம்' என்று கூற வேண்டிய ஓட்டு வங்கிகள், இன்று, கொலைகளுக்கு, ஒப்பீடு முறையை கையாள்வது, காலத்தின் கொடுமை. 
 
"எங்க வீட்டுப் பிள்ளைகளிலேயே, ரொம்ப நல்லவன், வீட்டுக் கூரைக்குத் தீ வைப்பவன் தான்' என்பது போலுள்ளது. தமிழகத்தில், நாளொரு கொலையும், பொழுதொரு கொள்ளையும் அரங்கேறிக் கொண்டிருக்க, தன் முந்தைய ஆட்சியில் நடந்த கொலைகள், சற்று குறைவு தான் என்று சந்தோஷப்படுகிறார், கருணாநிதி. 
 
நாட்டில் நடக்கும் கொலைகளைத் தடுக்க, எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், விகிதாச்சாரப்படி கொலைகளை பட்டியலிட்டுப் பரவசப்படும், வக்கிரபுத்தி கொண்ட பாரத நாடு, பாருக்குள்ளே நல்ல நாடு. 
 
வாழும் உயிர்களுக்கு, வயிற்றுக்குச் சோறிட வக்கில்லாத, வறட்டு ஜம்பம் பேசி; பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ஏழைகளை மேலும் ஏழைகளாக, பரம ஏழைகளாக, மாறச் சொல்லும், பவித்திரமான நாடு. நாள்தோறும் நடக்கும் விபத்துகளை தடுக்க, வகையறியாது, நஷ்ட ஈடு என்ற போர்வையால், நெருப்பை மூடப் பார்த்து; பணமென்னும் பசை கொண்டு, பல்வேறு சட்ட ஓட்டைகளை அடைத்து, தப்பு செய்த பண முதலைகளை, வாழ்வாங்கு வாழவைக்கும் பெருமை மிகு நாடு. 
 
இல்லாத கொள்ளைகளுக்குப் போராடுவதாக நடிக்கும் நடிப்பு; சுதேசிகன் உதவியுடன் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, அவற்றை, சாதனையாய் பட்டியலிட்டுக் கொண்டு அதிலேயே, திருப்தியடைந்து கொள்ளும் நாடு. 
 
மொத்தத்தில், பிரிக்க முடியாதது கொலையும், நாடும்; பிரியக் கூடாதது பணமும், அரசியல்வாதியும்; பிரிந்தே இருப்பது சட்டமும், ஒழுங்கும். அய்யகோ... ஆளை விடுங்க... இனி யாராலும் காப்பாற்ற முடியாது பாரத நாட்டை!

Saturday, August 3, 2013

யார் சூப்பர் ஸ்டார்... ஷாரூக்கான் அதிரடி...

 
இந்த உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார் மட்டுமே என்றார் பாலிவுட் கிங் எனப்படும் ஷாரூக்கான். 
 
ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்து திரைக்கு வரவிருக்கிறது 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம். இந்தப் படத்துக்கான அனைத்து விழாக்களும் முதலில் சென்னையில் நடப்பது போலவே ஏற்பாடு செய்துள்ளார் ஷாருக்கான். 
 
ஷாரூக்கான் படத்தின் நாயகி தீபிகா படுகோனேவுடன் இன்று சென்னை வந்த ஷாரூக்கான், விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். "என் அம்மா பிறந்த ஊர் ஹைதராபாத். தீபிகாவுக்கு சொந்த ஊர் பெங்களூர். இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தமிழ். இந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் தென் இந்தியர்கள். தென் இந்தியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு இந்தி சினிமா செய்திருக்கிறோம். 
 
 
 
தமிழ்நாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அஜீத் எனக்கு நல்ல நண்பர். மணிரத்னம், சந்தோஷ் சிவன் என்று என் மனதுக்குப் பிடித்த நண்பர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்," என்றார். 
 
தீபிகா படுகோனிடம், "கோச்சடையான், சென்னை எக்ஸ்பிரஸ் என்று இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய விதத்தில் யார் பெஸ்ட் என்று நினைக்கீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். 
 
தீபிகா சற்று தயங்க, உடனே வந்த ஷாருக்கான் மைக் பிடித்து, "இந்த கேள்விக்கு தீபிகாவால் பதில் சொல்ல முடியாது. நானே சொல்கிறேன். உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான். 
 
இது எல்லோருக்கும் தெரியும். ரஜினி சாருக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். தனித்துவம் வாய்ந்த அந்த மனிதரை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. அதனால்தான் லுங்கி டான்ஸ் ஒன்றுக்கு ஆடியுள்ளேன். 
 
இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் ரஜினி சாருக்கு என்னால் முடிந்த ஒன்றைச் செய்த திருப்தி இருக்கிறது," என்றார்.

Friday, August 2, 2013

விஜய்-ன் தலைவா சென்சாரில் நடந்தது என்ன?

 
யுஏ சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்குப் போய் சில கட்களுடன் யு சான்று பெற்றது தலைவா படம் என்று வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் படத்தின் பிஆர்ஓ. 
 
அந்தப் படம் என்ன சான்றிதழ் பெற்றது என்பதை நாங்களாக சொல்லும் வரை காத்திருக்கவும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது. விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. 
 
இந்தப் படத்துக்கு சென்சாரில் யுஏ சான்று தரப்பட்டது. இதனால் அரசின் வரிச்சலுகைகள் கிடைக்காது என்பதால் படத்துக்கு யு சான்று கோரி ரிவைசிங் கமிட்டிக்கு போனார் தயாரிப்பாளர். 
 
 
 
அதன்படி நேற்று முன்தினம் இந்தப் படத்தைபப் பார்த்தது ரிவைசிங் கமிட்டி. படசத்தில் சில இடங்களில் மட்டும் சிறிய அளவில் காட்சிகளுக்கு கட் கொடுத்து, யு சான்று தந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை படத்தின் பிஆர்ஓ நிகில் முருகன் மறுத்துள்ளார். 
 
நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டரில், ' தலைவா சென்சார் சான்று குறித்து வந்த வதந்திகளை நம்ப வேண்டாம். அதுகுறித்து விரைவில் அப்டேட் செய்யப்படும்," என்று ட்விட்டரில் கூறியுள்ளார். படம் பார்த்து முடிந்ததும் எப்படியும் ஏதோ ஒரு சான்றிதழ் கொடுத்திருப்பார்களே...!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...