Friday, March 8, 2013

”இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இந்த பாடல் சமர்ப்பனம்” - கார்க்கி!


’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கும் அவரது இரண்டாவது படத்தின் பெயர் “ரெண்டாவது படம்”. தமிழ்ப்படம், ரெண்டாவது படம் என வார்த்தைகளைக் கொண்டு விளையாடும் அமுதன் தன் பட பாடல்களுக்கு குப்ப தொட்டி, ஆப்பு பர்த்டே, அடுத்த பருப்பு, ரோஜாப் பூ, டெத் ஆன்தம் (DEATH ANTHEM) என டைட்டில் கொடுத்திருக்கிறார். 

”ரோஜா பூ ஒன்று ராஜாவின் கைசேர... வானம் செந்தூரம் சூடும்” என்ற பாடல் 80-களில் வெளிவந்த பாடல்களின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜாவும்- வைரமுத்துவும் இணைந்து 80-களில் இணையற்ற பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் அந்த ஸ்டைலில் யாராலும் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்ற குறை இப்போது தமிழ் சினிமாவில் இருப்பதை உணர்ந்தே அமுதன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். 


இந்த ரோஜா பூ பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி பேசிய மதன் கார்க்கி “ 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதியது எனக்கு சவாலாக இருந்தது. நான் சிறிய வயதிலிருந்தே வைரமுத்து - இளையராஜா இணைந்து உருவாக்கிய பாடல்களைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்தப் பாடலை எஸ்.பி.பி - சித்ரா பாடியிருக்கிறார்கள். நான் எழுதிய வரிகளை முதல்முதலாக இருவரும் பாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடல் இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்” என்று கூறினார்.


புன்னகை மன்னன் படத்தில் பிரிந்த இளையராஜாவையும் வைரமுத்துவையும் இணைத்து வைக்க பலர் முயற்சி செய்தாலும், அது நடக்காமலே போனது. பாரதிராஜாவும் இந்த விஷயத்தில் போராடித் தோற்றுப்போனார். இந்த சூழலில் ரெண்டாவது படம் படத்தில் வரும் ரோஜா பூ ஒன்று என்ற பாடல் கேட்பவர்களை பரவசப்படுத்தும் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது!


ரோஜா பூ - பாடல் வரிகள்...


குழு - மயில் தோகை கொண்டே 
விசிறி தோழன் ஒருவன் மயங்கிவிட்டானே
காதல் மதுவை அருந்தி... 
திருக்கோவில் தீபம் எனவே
தோழி கைத்தலம் பிடிக்க வந்தாலே
தீயில் ஒளியாய் பொருந்தி...
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே 
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே!


பல்லவி


ஆண் - ரோஜா பூ ஒன்று... ராஜாவின் கைசேர... 
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்
மாயம் புரிந்தாய்...
காற்றாய் நிறைந்தாய்...


குழு - உனக்கே பிறந்தாள் 
இதயம் திறந்தாள் 
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்


சரணம் - 1


ஆண் - தானாய் வந்ததொரு நந்தவனம் 
என் சொந்தவனம் 
பெண் - நீதான் காலமெங்கும் என் வசந்தம் 
ஒரு பொன்வசந்தம்
ஆண் - தேன் மழை பொழியவா
பெண் - நான் அதில் நனையவா
ஆண் - உயிரே... உயிரில் இணையவா...


சரணம் - 2


பெண் - காமன் கோயிலுக்குள் போக மேடை
அதில் ராஜ பூஜை
ஆண் - மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை 
பெண் - வேர்வையில் குளிக்கலாம்
ஆண் - பார்வையில் துடைக்கலாம் 
பெண் - உறவே இரவை படிக்கலாம்

3 comments:

  1. பாடல் வரிகளுக்கு நன்றி....

    ReplyDelete
  2. எண்பதுகளில் ராசாவின் இசையில் வைரமுத்து பல நல்ல பாடல்கள் எழுதி இருக்கிறார் என்றாலும் அது ஒன்று தான் இணையற்ற கூட்டணி என்றெல்லாம் பேசுவது ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கிய வெறும் மாய பிம்பம்.

    இன்று வரை இந்தப்பொய்ப்பிரச்சாரம் ஏனோ, எப்படியோ செய்யப்பட்டு வருவதால் பல்லாண்டுகளாக ராசா இசை கேட்டு வரும் என் போன்ற பலரும் பல நல்ல பாடல்களை எழுதியவர் யாரென்று தெரியாமலேயே வைரமுத்து என நினைத்து வந்திருக்கிறோம்.

    சமீபத்தில் musicalaya.net என்ற தளம் பிரசுரித்த இசைத்தட்டுகளின் உறைகளின் படங்கள் இதை என் மனதிலிருந்து தகர்த்து விட்டன! சின்ன எடுத்துக்காட்டு: பன்னீர் புஷ்பங்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே, ஜானி போன்ற இன்றுவரை ஒலிக்கும் படப்பாடல்கள் எழுதியவர் கங்கை அமரன்!

    மணிரத்னம் பிரபலம் ஆகக் காரணமாயிருந்த மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் வைரமுத்துவே கிடையாது.

    இன்னும் அதிக விவரங்களுக்கு இந்த இரண்டு விவாத இழைகளையும் படியுங்கள்!:

    http://ilayaraja.forumms.net/t80-gangai-amaran-thread-for-song45

    http://ilayaraja.forumms.net/t63-vinyl-lp-record-covers-speak-about-ir-pictures-details



    ReplyDelete
  3. இந்த வைரமுத்து புகழ் பாடலில் பாரதிராஜா ஒரு முக்கிய நபர் என்பது தெரிந்ததே. என்றாலும், அவரும் புகழின் உச்சியைத்தொட்ட ஆரம்பகாலத்தில் வைரமுத்து படவுலகிலேயே இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்:

    16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்ற அவரது முதல் நான்கு வெள்ளிவிழாப்படங்களும் தொடர்ந்து வந்த சுமார் வெற்றிப்படமான நிறம் மாறாத பூக்களும் வைரமுத்து இன்னும் வராத காலத்தில் வந்தவை!

    வைரமுத்து எழுதிய முதல் பாடலான 'இது ஒரு பொன்மாலைப்பொழுது' இடம் பெற்ற நிழல்கள் படத்தில் மற்ற மூன்று பாடல்களும் பிரபலம் தான் - ஆனால் எழுதியது வேறு மூவர் (பூங்கதவே தாழ் திறவாய் - கங்கை அமரன், மடை திறந்து - வாலி, தூரத்தில் நான் கண்ட - பஞ்சு அருணாசலம்).

    இன்னொரு விஷயம் : இயக்குனராக அது தான் பாரதிராஜாவின் முதல் தோல்விப்படம் :)

    ஊடகங்களில் வைரமுத்து ஒரேயடியாகப் புகழப்பட்டதால் , அடுத்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் கப்பக்கிழங்கு தவிர மற்ற எல்லாமே அவர் எழுதினதாக எண்ணும் பலர் உண்டு. நானும் அப்படித்தான் சமீபகாலம் வரை நினைத்திருந்தேன்.

    ஆனால் உண்மை என்ன தெரியுமா?

    'புத்தம் புதுக்காலை' எழுதியவர் கங்கை அமரன்!

    'காதல் ஓவியம் பாடும் காவியம்' எழுதியவர் பஞ்சு அருணாசலம்!

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...