Monday, August 19, 2013

இக்கால அரசியல்வாதிகள் யாராவது இப்படி இருக்கிறார்களா..?



கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், காமராஜர், தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவருக்கு கீழே, ராமையா என்று ஓர் அமைச்சர் பணிபுரிந்தார். விவசாயமோ, உணவு இலாகாவோ, அவர் பார்த்து வந்ததாக ஞாபகம்.

ராமையாவின் கீழே, ஸ்ரீனிவாசன் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இலாகாவின் முதன்மைச் செயலராக பணியில் இருந்தார். அவருக்கு கீழ், துணைச் செயலர்களும், இணைச் செயலர்களும், பல அதிகாரிகளும் இருந்தனர். 

ஒரு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஸ்ரீனிவாசன், சில கருத்துகளை முன் வைத்தார். அப்போது, அமைச்சர் ராமையா, "என்னைய்யா பேசறே நீ? உன் கருத்து சரியா இருக்கா? நீயெல்லாம் எப்படி ஐயா, ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ணினே?' என்று, மற்ற அதிகாரிகளின் முன்னிலையில், ஸ்ரீனிவாசனை கேவலப்படுத்தினார்.

இதனால், மனமுடைந்த ஸ்ரீனிவாசன், மூன்று மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் விட்டார். நான்கைந்து நாட்கள் விடுப்பு எடுத்து போனாலே, சொல்லிவிட்டுப் போகும் ஸ்ரீனிவாசன், தன்னிடம் சொல்லாமல், மூன்று மாத விடுப்பில் சென்றதும், "ஏதோ தவறு நடந்திருக்கும்' என்று, யூகித்த காமராஜர், அவர் இலாகாவிற்கு சென்று விசாரித்தார். 

உண்மை தெரிய வர, மிகுந்த கோபம் அடைந்த காமராஜர், சுற்றுப்பயணத்தில் இருந்த ராமையாவை, உடனே, தன்னை வந்து பார்க்கும்படி உத்தரவிட்டார். அதேபோல், ஸ்ரீனிவாசனுக்கும், போன் செய்து வரச் செய்தார்.

எந்த அதிகாரிகளின் முன், ஸ்ரீனிவாசனை, ராமையா அவமதித்தாரோ, அந்த அதிகாரிகளின் முன்னிலையில், அமைச்சரை பொரிந்து தள்ளி விட்டார் காமராஜர். "உனக்கு என்னய்யா தெரியும்? ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட நீ கெட்டிக்காரனா?


ஸ்ரீனிவாசனை, நீ ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ணினேன்னு கேட்டியாமே? உன்னால், ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ண முடியுமா? ஸ்ரீனிவாசன் வேலையை, ராஜினாமா பண்ணிட்டு, ஒரு கட்சியில் சேர்ந்து, எம்.எல்.ஏ., ஆகி அமைச்சராகலாம். ஆனா, நீ நெனைச்சா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆகிவிட முடியுமா? அடுத்த தேர்தல்ல நீ, தோத்தா வீட்டுல தான் இருக்கணும். ஆனா, ஸ்ரீனிவாசன், ரிடையர் ஆகிற வரைக்கும், அதிகாரியா இருக்கலாம். அவர் கிட்ட மன்னிப்பு கேளு...' என்றார். 

அமைச்சர் ராமையா மன்னிப்பு கேட்டார். பின், அதே இலாகாவில் ஸ்ரீனிவாசன் இருந்தால், ராமையா மறுபடியும் தொந்தரவு கொடுப்பார் என்பதால், ஸ்ரீனிவாசனை வேறு இலாகாவுக்கு மாற்றினார் காமராஜர். இது அந்தக் காலத்து நடப்பு. 

தனக்கும், தன் கட்சிக்காரர்களுக்கு வேண்டாத, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, உடனே மாற்றவோ, பணி இடைநீக்கம் செய்வதோ, இந்தக் கால அரசியல்.

உ.பி., அமைச்சர் அசம்கான் சொல்கிறார்... "நாங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம்; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் அல்ல...' என்று. அவருக்கு வேண்டப்பட்ட மண் திருடர்களை, மடக்கிய இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காவிற்கு, அசம்கான் விட்டிருக்கும் சவால் இது!

வரும், 2014 வரை, பொது மக்களும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்!

4 comments:

  1. ஒரு ஏக்கப்பெருமூச்சு விட்டுக் கொள்ளவேண்டியதுதான்
    வேறு வழி ?

    ReplyDelete
  2. இந்த காலத்தை நினைச்சா பெருமூச்சுதான் மிஞ்சுது!!

    ReplyDelete
  3. "நாங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம்; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் அல்ல...'//

    உண்மைதான் நா முட்டாப்பயல்க தேர்ந்தெடுத்த கடைஞ்செடுத்த முட்டாள்னு அவரே ஒத்துக்கறாரே.

    அதுவுமில்லாம அரசு அதிகாரிகளுடைய இந்த அவல நிலைக்கு உள்ளுக்குள்ளேயே இருந்துக்கொண்டு போட்டுக்கொடுக்கும் மூன்றாந்தர அதிகாரிகளும் கூட ஒரு காரணம். ஒரு அயோக்கிய அரசியல்வாதிக்கு இணையாக லஞ்சத்தில் உழலும் அதிகாரிகளால் அனைத்து அதிகாரிகளுக்குமே இந்த இழி நிலை.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...