Tuesday, January 18, 2011

இவர் நம்ம வீட்டுப் பிள்ளை

  (பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை)
 
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து....
.....................................
என்ன இவ்வளவு தொடர்புள்ளிகள் என்று பார்க்றீர்களா? ஆம்...இன்னும் தொடர்ந்து மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தானே  இருக்கிறார் இவர். அதற்கு உதாரணமாக இதோ அந்த மாபெரும் தலைவரின் வாழ்க்கையில் நடந்த சில துளிகள்....

மாபெரும் சபைதனில்நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும். ஒரு மாசு குறையாத
மன்னவன் இவன் என்று
போற்றிப் புகழ வேண்டும்
என்ற பாடலை வாழ்ந்து காட்டியவர். அவர் தான் இந்த நட்சத்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
இவரது முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். 17.1.1917ல் இலங்கையில் உள்ள கண்டியில் கோபாலமேனன், சத்யபாமா  தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது அண்ணனின் பெயர் சக்கரபாணி. கும்பகோணத்தில் உள்ள ஆனையடிப்பள்ளியில் 3ம்  வகுப்பு வரை படித்தார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை அதற்கு மேல் தொடர முடியவில்லை. 7 வயதிலேயே அண்ணனுடன்  சேர்ந்து நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.மக்கள் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நேர்மை, நாணயம், நம்பிக்கை, கட்டுப்பாடு, மனித  பண்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக திகழ்ந்தவர். அறிஞர் அண்ணாவின் அன்பு தம்பி இவர்.
அரசியல்
எம்.ஜி.ஆர். காந்தியடிகள் மீது பற்றுக் கொண்டு கதர் ஆடை அணிந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கையை பிரச்சாரம் செய்தார்.  பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். நாளடைவில், அந்த கட்சியில் பொருளாளராக உயர்ந்தார். எம்.ஜி.ஆர். 1950 முதல்  1972 வரை தி.மு.க.வில் இருந்தார். அதன்பின்பு, 1972ல் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். 1972 முதல் 1987 வரை தமிழக முதல்வராக  பதவியில் இருந்தார்.
  
தொண்டுகள்
பள்ளிகளில் பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, புத்தகம்,  காலணி போன்றவற்றை இலவசமாக வழங்கினார். தன்னிறைவுத்திட்டம், உழவர்களின் கடன் தள்ளுபடி திட்டம், வீட்டுவசதி திட்டம்,  ஆதரவற்ற மகளிருக்கான நலத்திட்டம் என்று பல நல்ல திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தினார். அதனால், அவரை மக்கள்,  பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் என்று அழைத்தனர்.
மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்ட எம்.ஜி.ஆர், 24.12.1987 தேதியன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின்,  1988ல், இந்திய அரசு இவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் சார்பாக, சென்னை மெரீனா கடற்கரையில்  எம்.ஜி.ஆருக்கு என்று தனியாக சமாதி எழுப்பப்பட்டுள்ளது.


வாரிக்கொடுக்கும் வள்ளல்
தன்னைக் காண வருபவர்களுக்கெல்லாம் வயிறாற உணவு கொடுப்பதைத்தான் இவர் தலையாய கடமையாகக் கொண்டிருந்தார். எப்படி  வாழ வேண்டும் என்று நினைத்தாரோ, அதேபோல் வாழ்ந்து நினைத்ததை முடித்தவர்.
தாய்க்குப் பின் தாரம் என்ற எம்.ஜி.ஆரின் படம் இவரது வாழ்க்கைக்குப் பொருத்தமாகவே இருந்தது என்று சொல்லலாம். முதல் மனைவி  தங்கமணி, இரண்டாவது மனைவி சதானந்தவதி. இவர்கள் இருவரும் காலமானார்கள். அதன் பிறகு சென்னையில் ராமாவரம் என்ற  இடத்தில் உள்ள தோட்டத்தில் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு குடிவந்தார். தன்னுடைய 3 வது மனைவி வி.என்.ஜானகியுடன் வாழ்ந்தார்.  இவர் 1996ல் காலமானார்.

சரித்திரம் படைத்த திரையுலக சிற்பி
7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார், எம்.ஜி.ஆர். திரையுலகில் 1934 முதல் 1977 வரை  சுமார் 44 ஆண்டுகள் முடிசூடா  மன்னராக இருந்தார். மனிதராக பிறந்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனது திரைப்பட பாடல்களின் மூலம் மக்களுக்கு  உணர்த்தினார்.
எம்.ஜி.ஆரை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கந்தசாமி முதலியார். தமிழில் இவர் நடித்த முதல் படம் சதிலீலாவதி. இந்த  படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தொடர்ந்து இவர் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். முதல்  கதாநாயகனாக நடித்த படம் ஜூபிடர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ராஜகுமாரி.
100வது படம் 20.9.1963ல் வெளியான ஒளிவிளக்கு. இவரது கடைசி படம் 14.1.1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.  தமிழில் வெளிவந்த முதல் கலர் படம் அலிபாபாவும் 40 திருடர்களும் தான். தென்னிந்தியாவின் ஜனாதிபதி விருதுபெற்ற படம்  மலைக்கள்ளன். உலகம் சுற்றும் வாலிபன், என் தங்கை போன்ற படங்கள் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன.  வெள்ளிவிழாவை 12 படங்கள் தொட்டன. வெற்றிவிழாவை 86 படங்கள் கண்டன. எம்.ஜி.ஆர். நடித்த மொத்த படங்கள் 137.
உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் போன்ற படங்களை இயக்கியவர் எம்.ஜி.ஆர்.

வாங்கிக் குவித்த பட்டங்கள்
* மக்கள் திலகம் - கல்கண்டு ஆசிரியர் திரு.தமிழ்வாணன் 1951 ல் வழங்கினார்.
* புரட்சி நடிகர் - உறந்தை உலகப்பன் அவர்கள் இயற்றி, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி 1952 -திருச்சியில் வழங்கினார.
* வாத்தியார்  - 1960ல் நெல்லை நகராட்சி மன்றம் வழங்கியது-.
* பொன்மனச் செம்மல்  - 1963ல் ,கருரில் நடைபெற்ற விழாவில், கிருபானந்தவாரியார் வழங்கியது-
* இதயக்கனி - 1967ல் அறிஞர் அண்ணா வழங்கியது-
* புரட்சித்தலைவர்  -1972ல் சென்னை மெரீனா கடற்கரையில் 10 லட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் கே.ஏ.கிருஷ்ணசாமி  வழங்கினார்.

புரட்சி நடிகர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்
நாடோடி மன்னன், ஆசை முகம், ராஜா தேசிங்கு, நினைத்ததை முடிப்பவன், எங்கவீட்டுப் பிள்ளை, கலையரசி, பட்டிக்காட்டுப் பொன்னையா,      மாட்டுக்கார வேலன், அடிமைப் பெண், நீரும் நெருப்பும், நாளை நமதே, நேற்று இன்று நாளை, உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன்,  அரசிளங்குமரி, சிரித்து வாழ வேண்டும், குடியிருந்த கோயில்.

விருதுகள்
* பாரத் -     இந்திய அரசு , 1971
* பாரத் ரத்னா  - இந்திய அரசு , 1988
* டாக்டர் பட்டம் - சென்னை பல்கலைக்கழகம், 1983
* கௌர டாக்டர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா, 1974
* அண்ணா விருது  - தமிழக அரசு, 1971
* சிறந்த நடிகர் - இலங்கை அரசு, 1968
* சிறந்த நடிகர் - (ரிக்ஷாக்காரன்) முதல்பரிசு,- சிங்கப்பூர்ரசிகர்கள், 1971
* சிறந்த நடிகர்  - (ரிக்ஷாக்காரன்) முதல் பரிசு, -இந்திய அரசு, 1971
* மலைக்கள்ளன் - சிறந்த நடிகர், இரண்டாம் பரிசு, - இந்திய அரசு, 1954
* காவல்காரன்  - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1967
* குடியிருந்த கோயில்  - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1968
* அடிமைப்பெண் - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1969
* எங்க வீட்டுப் பிள்ளை  - சிறந்த நடிகர் பிலிம்பேர் வருது, 1965
* அடிமைப்பெண் - சிறந்த படம், முதல்பரிசு, பிலிம்பேர் விருது, 1969
* உலகம் சுற்றும் வாலிபன் - சிறந்த படம், பிலிம் பேர் விருது, 1973

பதவிகள்
* தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டத் துணை தலைவர் - 1967
* தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்  & 1962
* தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்  - 5 முறை (1967, 1972, 1977, 1980, 1984)
* தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர்    
* திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளர்  - 6 ஆண்டுகள்
* அ.இ.அ.தி.மு.க.     பொதுச் செயலாளர் - 16 ஆண்டுகள்
* தமிழக முதல் அமைச்சர்  - 3முறை -(1977, 1980, 1984)
* நடிகர் சங்க பதவிகளில் இருந்த வருடங்கள்
* தலைவர்  - 1958, 1961
* துணைத் தலைவர்- 1952, 1953
* செயலாளர்- 1955
* பொதுச் செயலாளர்  - 1954, 1957
* தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாட்கள்  - 4.7.1977, 9.6.1980, 10.2.1984

சுவையான குறிப்புகள்

* சினிமா, அரசியலைத்  தாண்டி ஓர் ஆளுமையைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இவர் அனைவருக்கும்  ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... முத்தாய்ப்பாய் சில...

* எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).  பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும்.  ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம்.

* எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி.  எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’  பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்.

* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக  துப்பாக்கியைப் பரிசாக அளித்தார், பிரபாகரன்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார்.  மலைக்கள்ளனில் ‘ஹூக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில்  தாமதம் ஏற்பட்டதாம்.

* முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை  மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

* ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால்  மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

* நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக  நடிப்பார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.

* எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா இது. இந்தியாவில்  உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது. காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத்  தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள். சினிமாவில்  அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா  படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.

* எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய  துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.

* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை.  10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார், எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக்  கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை.

* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன், -சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்.
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார், எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர்  வைத்திருந்தார்.

* ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே...!’ என்றுதான் அழைப்பார் !

* அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே, அதைத்  தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.

* எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை  வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப்  பின்பற்றினார், எம்.ஜி.ஆர்.

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம்  வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்.
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோவில் கட்டி வைத்திருந்தார்.

* ‘நான் ஏன் பிறந்தேன்?’ -ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை.  அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே  நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் பெருமைகளும் முற்றுப் பெறவில்லை.

எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்

* அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட  வேண்டும்.

* சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது  நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது.

* வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது. விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.  அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள  வேண்டும்.

* வன்முறை தான் போராட்டமுறை என்றால், தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

* எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும், அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின்  தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள். எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு  வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு  இழுப்பது என்பது ஒரு வகை.

* நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்.  சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

* சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவைகளே.  என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய  மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.

* தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச் சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

* ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை  ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.

* மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குகிறதோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம்  அறியாமலேயே சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கக் கூடியவை.

* கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தைக் காட்ட முடியும்.

* கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.

* பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காகக அல்ல! ஆடலும் அது போலத்தான்.  ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.

* கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல. தரத்தை மட்டுமல்ல, அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது  மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின்  அடிப்படை மூலதனமாகும்.

* குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

* கலை எப்போதும் நிரந்தரமாகவே இருக்கும். ஆனால் கலைஞர்கள் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள்.

* இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் நமது சந்ததியினரருக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

* சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்.

* ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான்  கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.

* சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள்  எடுத்துக்கொள்ள கூடாது.

* உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

* பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது.  மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.

* நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.

24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால், நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால், அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால்  நாம் துடைப்பதில்லை.

* கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும்; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.

* மதத்தின் பெயரால் பிரச்சினைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சினைகள் வருகின்றன.

* உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால், இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.

* நமக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்; ஆனால், அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும், அதை எதிர்த்தே ஆக  வேண்டும்.

* கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக்காரர்கள் தான்.

* இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது.

* நீதித்துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது. வந்து விட்டால், நீதி செத்துவிடும்.

* நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால், போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.

* சக்தி குறைந்தர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.

* சொந்தக் காலில் நிற்பது நல்லது மட்டுமல்ல. நடைமுறைக்கும் தேவைதான்.

* ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.

* நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான  விளைவுகளை ஏற்படுத்தும்.

* மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர, எஜமானர்கள் அல்ல  என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றர்வர்களும் அந்தப் பணியைச் செய்தால் தான் நிலைமை சீர்படும்; எந்தத் திட்டமும் நிறைவேறும்.

* உடலைப் பேணிக் காப்பது, உடற்பயிற்சி செய்வது, உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மையைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக  விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே  மாணவர்களின் கடமைகள்.

* எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மை தான் நிலைக்கும் என்பதை மனதில் கொண்டு விமர்சியுங்கள்.

* மக்களை மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால் தான் கலைஞர்களின் வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால்  அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.

* வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான, பயங்கர விஷவாயு.

* ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் தான். ஆனால், ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுவத்துவதற்குச் சிந்திக்கவும்,  பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.

* சராசரி மனிதனின் எண்ணங்கசளையும், அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத  எவனுக்கும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ, உரிமையோ கிடையாது.

* என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும் போது அன்போடு பேசுவதற்குக்  காரணமே, அவர்ளது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும்  வெகுதூரம் என்பதனாலும் தான்.

* அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத் தான் சொந்தம்; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.

* மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காகப் பெற்றோரைத் துன்பப்படுத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப்படக்கூடாது.  நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

* சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடிவரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும்,  என்ன நடந்தாலும் கலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.

* கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

* திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான்  அஸ்திவாரம்.

* ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால் தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.

* நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே.

* கணவன், மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். பாச  உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.

* எல்லோரும் நமக்கு வேண்டிவர்கள் தான்; ஆனால், எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம்  விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

* நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக  அமையாது.

55. கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.

* சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன்கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று  யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச்  செல்கிறவர்களைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

* மக்களுக்கம் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைக் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.

* உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது; ஆனால், அதற்கு முன்பே நாமே கொடுக்கக் கூடிய நிலையை  உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாதபோது அந்த மொழியை கட்டாயப்படுத்தக் கூடாது.

* ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.

* இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால், பெண்களின் பெயருக்குப் பின்னால் இல்லை. பெண்கள் தான்  ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

* என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே  நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?
* அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.

* சமுதாயத்தின் கட்டுப்பாடுகள். ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.

* தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்.

1 comment:

  1. The black and white photo is not M.G.R. That is M.K.MUTHU(Karunanithi's son)-Ansar.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...